கொரோனா சமயத்தில் முதியோர்களுக்கு உதவிட 'DocsApp’ உடன் இணைந்த Seniority!
இத்தளங்கள் இணைந்து முதியோர்களுக்கான ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது!
கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கும் என்றாலும் முதியவர்களுக்கு மற்ற நாள்பட்ட நோய் பாதிப்பு இருப்பதாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாலும் இவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம். முதியோர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதால் மேலும் தீவிரமான வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதில் சிரமத்தை சந்திப்பார்கள்.
முதியோர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் தளமான 'சீனியாரிட்டி’ 'Seniority' நாட்டின் முன்னணி டிஜிட்டல் சுகாதாரப் பராமரிப்பு தளமான DocsApp உடன் கைகோர்த்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான தவறான கருத்துக்களை தகர்த்து அவர்களுக்கு ஏற்படும் அச்சத்தைக் குறைத்து கொரோனா வைரஸ் தொடர்பான சரியான புரிதலை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
சீனியாரிட்டி தளம் முதியவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பிரத்யேகமான மருத்துவ உதவியை DocsApp மூலம் வழங்குவதற்கு இந்த இணைப்பு உதவும்.
மக்கள் இத்தகைய இக்கட்டான சூழல்களில் மருத்துவ நிபுணர்களைத் தொடர்புகொள்ள 24*7 ஹெல்ப்லைன் (080 4719 3443) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் வீட்டில் இருந்தவாறே அனைத்து துறை சார்ந்த நிபுணர்களிடமும் இலவசமாக ஆன்லைனில் ஆலோசனைகள் பெறலாம். சீனியாரிட்டி, DocsApp இணைந்து கொரோனா வைரஸ் தொடர்புடைய தகவல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கட்டுரைகள், வலைப்பதிவுகள், செய்தி அறிக்கைகள், வெபினார்கள் போன்றவற்றை தொகுத்து வழங்குகிறது.
இந்த கூட்டு முயற்சி குறித்து ‘சீனியாரிட்டி’ இணை நிறுவனர்களான ஆயுஷ் அகர்வால் மற்றும் தபன் மிஷ்ரா கூறும்போது,
“இந்தியாவிலும் உலகம் முழுவதும் கோவிட்-19 பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. நாங்கள் முதியோர்களைப் பராமரிப்பதில் முக்கியக் கவனம் செலுத்துவதால் இத்தகைய சவாலான சூழலில் அவர்களுக்கு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்களது கடமையாகவே கருதுகிறோம்.
DocsApp உடன் இணைந்து செயல்படுவதால் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள அதிகளவிலான மக்களை நாங்கள் சென்றடைய முடியும். 24*7 ஹெல்ப்லைன் மூலம் எங்களது சேவையை விரிவுப்படுத்தி மருத்துவ நிபுணர்களுடனான இலவச ஆலோசனையை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
முதியோர்களுக்குத் தேவையான பராமரிப்பு வழங்கப்படுவதை இந்த முன்னெடுப்பு உறுதிசெய்யும். நம்மைச் சுற்றியுள்ள அனைவரின் பாதுகாப்பும் நலனும் முக்கியம். இத்தகைய எதிர்பாராத சூழலை எதிர்த்து சிறப்பாக போராடுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது, என்றனர்.