ஊரடங்கால் தவித்த உறவுகள்: 1000 கி.மீ பயணித்து பாசத்தை நிரூபித்த உயர்ந்த உள்ளங்கள்!
ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்கள் மத்தியில் இதுபோன்ற பாச மலர்களின் கதைகள் நம்மை நெகிழவைக்கிறது.
கொரோனா நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்குச் சட்டம் பலரின் வாழ்க்கைக்கு பாஸ் பட்டன் போட்டிருக்கிறது. ஒரே ஊரில் இருப்பவர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை என்றாலும் குடும்பத்தினரை விட்டு வெளியூரில் மாட்டிக் கொண்டவர்களின் நிலை படு மோசம்.
போக்குவரத்து, உணவு விடுதிகள் என எதுவும் இல்லை. ஒரு பக்கம் ஊரடங்கு உத்தரவு குடும்ப உறவுகளுக்கு இடையே பலத்தைத் தந்திருக்கிறது. மற்றொரு புறம் உடலால் தளர்ந்திருந்தாலும் உள்ளத்தால் தளராமல் கடினமான நேரத்தில் உறவுகள் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசத்தையும், மரியாதையையும் வெளிபடுத்தி வருகின்றனர் சிலர்.
அம்மாவின் பாசத்திற்கு எதுவுமே இணையாகாது, அதிலும் அம்மாக்களுக்கு மகன்கள் மீது இருக்கும் அன்பு எப்போதுமே தனிதான் என்பதை நிரூபித்திருக்கிறார் 48 வயது அன்னை ரெஜியா பேகம். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தின், போதான் நகரைச் சேர்ந்த இவர் அங்குள்ள பள்ளியின் தலைமையாசிரியையாக பணியாற்றுகிறார். கணவர் காலமாகிவிட்ட நிலையில் 2 மகன்களையும் வளர்த்து ஆளாக்கி இருக்கிறார்.
பெண்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது அதற்கு ரெஜியாவும் விதிவிலக்கல்ல குடும்ப வாழ்க்கை, பள்ளியில் தலைமை ஆசிரியர் பணி என சுற்றி சுழன்று வருகிறார். 15 வருடங்களுக்கு முன்னர் தனது கணவரை டயாலசிஸ் சிகிச்சைக்காக ஐதராபாத் நகருக்கு டூவீலரிலேயே அழைத்துச் சென்று வந்திருக்கிறார். உடல்நலப் பிரச்னை காரணமாக டூவீலர் ஓட்டாமல் இருந்தவர் வெளியூரில் சிக்கிக் கொண்ட மகனை அழைத்து வருவதற்காக 1,400 கி. மீ பயணித்திருக்கிறார்.
ரெஜியா பேகத்தின் இரண்டாவது மகன் நிஜாமுதீன் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிவருகிறார். நிஜாமுதினில் நண்பரின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரும், அவரது நண்பரும் கடந்த மாதம் 12ம் தேதி அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் அருகே உள்ள ரஹ்மதாபாத் என்னும் ஊருக்கு சென்றிருக்கிறார்கள்.
மீண்டும் 23ம் தேதி ஊர் திரும்பலாம் என்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நிஜாமுதீன் நெல்லூரிலேயே தாங்கும் சூழல் உருவானது.
நிஜாமுதீன் சொந்த ஊர் திரும்புவதற்காக எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், தனது மூத்த மகனை அனுப்பி இளைய மகனை அழைத்து வர ரெஜியா பேகம் முடிவெடுத்தார். ஆனால், ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு பயந்து, நிஜாமுதீனை தானே அழைத்து வரத் தீர்மானித்தார்.
போக்குவரத்திற்கு வாடகை வாகனங்கள் கூட கிடைக்காததால் போதான் நகர காவல்துறை உதவி ஆணையரிடம் தனது மகனின் நிலையை எடுத்துச்சொல்லி அனுமதிக் கடிதம் பெற்று, காலையில் தனது ஸ்கூட்டரில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
பயணத்தின் போது தேவைப்படும் உணவு, தண்ணீர் எனத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கியவர், பெட்ரோல் நிலையங்களில் ஓய்வெடுத்து அடுத்த நாள் காலையில் நெல்லூரை அடைந்திருக்கிறார்.
3 நாள் பயணத்தில் 1,400 கி. மீ தொடர்ச்சியாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று ஒருவழியாக தனது மகனோடு வீடு வந்து சேர்ந்திருக்கிறார். மகனை அழைத்து வருவதற்காக ரெஜியா பேகம் எடுத்த முயற்சிக்கு போதான் நகர் காவல்துறை உதவி ஆணையர் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.
இதே போன்று தமிழகத்திலும் 65 வயது முதியவர் தனது பாசத்தை வெளிக்காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கு 65 வயதாகிறது, அறிவழகனின் மனைவி மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
மஞ்சுளாவுக்கு நோய் முற்றிய நிலையில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும். அதனால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர்.
ஆனால் ஊரடங்குச் சட்டத்தால் தமிழகம் - புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப் பட்டிருப்பதுடன், பேருந்துகள் இயக்கமும் நிறுத்தப்பட்டிருப்பதால் புதுச்சேரிக்கு எப்படிச் செல்வது என்று புரியாமல் தவித்திருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியும் இல்லை.
ஊரடங்கு முடிந்தபிறகு செல்லலாம் என்றால் மனைவியின் உடல்நிலை சீராக இல்லை. நோயுற்ற மனைவி வலியால் துடிப்பதைப் பார்த்து நொந்தவர் தன் மனைவியை எப்படியாவது வலியில் இருந்து காப்பாற்றிவிட வேண்டுமென்று நினைத்து ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார்.
மனைவியை சைக்கிளிலேயே அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றடைய தீர்மானித்திருக்கிறார். காரில் போவதென்றாலே நாம் ஆயிரத்து எட்டு ஆராய்ச்சிகள் செய்வோம், பயண ஏற்பாடுகள் தூள் பறக்கும். ஆனால் அறிவழகன் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை, மனைவியை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவரின் ஒரே குறிக்கோளாக இருந்திருக்கிறது.
உடலில் தோள்கள் சுருங்கி, ஏழ்மையின் கோடுகள் அடங்கிய உடம்போடு மனம் தளராது வயதையும் பொருட்படுத்தாது மனைவியை அழைத்துக் கொண்டு இரவு முழுவதும் 130 கிலோமீட்டர் தூரத்தை கடந்து, விடியற்காலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையை அடைந்திருக்கிறார்.
எந்த போக்குவரத்தும் இல்லாத நிலையில் அறிவழகன் சைக்கிளிலேயே அவரது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருப்பதைக் கேட்டு மருத்துவர்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிப்புற சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் முதியவரின் செயலால் அதிர்ந்து போன மருத்துவர்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று மஞ்சுளாவிற்குத் தேவையான சிகிச்சையை அளித்திருக்கின்றனர்.
2 நாட்கள் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி சிகிச்சை பெற்றிருக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவர்கள் தங்கள் செலவிலேயே உணவு, மருந்து, மாத்திரைகளை அளித்திருக்கின்றனர். மேலும் அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கும்பகோணம் திரும்பவும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.
அறிவழகன் ஏன் இப்படி ஒரு செயலை செய்தார் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.
“என்னை நம்பி வந்தவள், எனக்கு எல்லாமே அவள் தான். வலியால் அவள் துடிப்பதை என்னால் பார்க்க முடியவில்லை, என்னசெய்வதென்று தெரியவில்லை. அதனால் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை, மஞ்சளாவை சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு பித்து பிடித்தது போல மருத்துவமனை நோக்கி சைக்கிளை ஓட்டிச் சென்றேன். தூரமோ வலியோ எதுவும் தெரியவில்லை. ஒருவழியாக என் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது, இதுவே எனக்கு போதும்,” என்கிறார்.
உறவுகளிலேயே தாயும், தாரமும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவங்கள் உணர்த்தி இருக்கின்றன.