மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் விலை அதிகமா?
தடுப்பூசியின் விலை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீரம் நிறுவனம்!
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கம் 2021 ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்டது. தற்காலிக அறிக்கையின்படி புதன்கிழமை காலை 7 மணி வரை இந்தியா இதுவரை 13,01,19,310 தடுப்பூசி மருந்துகளை 19,01,413 அமர்வுகள் மூலம் வழங்கியுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 2,023 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது தொற்றுநோய் வந்ததில் இருந்து மிக உயர்ந்தது என்று மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் புதன்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் அதை முன்னிட்டு சில விதிகளையும் வெளியிட்டது. இந்த அறிவிப்பை, இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பாளர்களில் ஒன்றான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வரவேற்றிருந்தது.
இதனிடையே, மே 1 ம் தேதி தொடங்கவிருக்கும் தடுப்பூசி இயக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தனது கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் விலையை அறிவித்துள்ளது. முன்னதாக இது தொடர்பாக பேசியிருக்கும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா,
"எங்கள் உற்பத்தியில் 50% இந்திய அரசின் தடுப்பூசி திட்டத்திற்கு வழங்கப்படும், மீதமுள்ள 50% திறன் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். உலகளாவிய தடுப்பூசி விலையை கருத்தில் கொண்டு, உலகில் உள்ள வேறு எந்த தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில், எங்களின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மலிவு என்பதை உறுதி செய்கின்றன," எனக் கூறியிருக்கிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி விலை விவரம்!
* மாநில அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 -க்கு கிடைக்கும்.
* தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600-க்கு கிடைக்கும்.
விலை விவரங்களை வெளியிட்ட சீரம் நிறுவனம், தனியார் சந்தையில் உலகளாவிய தடுப்பூசிகளின் ஒரு டோஸ் விலையை அறிவித்துள்ளது.
அமெரிக்க தடுப்பூசிகள் ஒரு டோஸுக்கு ரூ.1500 க்கும், ரஷ்ய மற்றும் சீன தடுப்பூசிகள் தலா ரூ.750 க்கும் அதிகமாகக் கிடைக்கின்றன என்று அந்த நிறுவனம் விளக்கி இருக்கிறது.
"அனைத்து கார்ப்பரேட் மற்றும் தனியார் நபர்களுக்கும் தடுப்பூசிகளை அரசு வசதியுள்ள இயந்திரங்கள் மற்றும் தனியார் சுகாதார அமைப்புகள் மூலம் அணுகுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 4-5 மாதங்களுக்குப் பிறகு, தடுப்பூசிகள் சில்லறை மற்றும் சுதந்திர வர்த்தகத்தில் கிடைக்கும்," என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.