'அந்த மனசு இருக்கே சார்...' தனக்கு வந்த காரை பயிற்சியாளருக்கு பரிசளித்த நட்டு!
வைரலாகும் நட்டுவின் பேரன்பு!
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்தது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி. ஒட்டுமொத்த நாடும் இந்த வெற்றியைக் கொண்டாடி தீர்த்து வருகிறது.
இந்த தொடரில் ஜொலித்தவர்களில் முக்கியமானவர்கள் இளம்வீரர்கள் தான். தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அசத்தினார். இதைவிட மற்றொரு வீரரான சிராஜ் தனது தந்தையின் இறப்புக்குக் கூட போகாமல் போட்டியில் பங்கேற்று விளையாடினார். இதேபோல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரம் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
இவர்களின் திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக தான் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தங்கள் நிறுவனத்தின் ‘தார்' காரை இந்த 6 வீரர்களுக்கும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். அதன்படி, ‘தார்' கார் தமிழக வீரர் நடராஜனுக்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. சிவப்பு நிற காரை வாங்குவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், கார் வாங்கியதும், நட்டு அதை தனது பயிற்சியாளரும் தன்னை ஊக்கப்படுத்தி வருபவருமான ஜெயபிரகாஷுக்கு பரிசளித்து நெகிழவைத்திருக்கிறார்.
நட்டு கிரிக்கெட்டில் நுழைந்தது முதல் அவருக்கு பக்கபலமாக இருந்து ஊக்கப்படுத்தியது பயிற்சியாளர் ஜெயபிரகாஷ் தான். அதனால் ஜெயபிரகாஷ் மீது எப்போதும் அன்போடு இருப்பார் நட்டு.
தற்போது அன்பை வெளிப்படுத்தும் விதமாக காரை பரிசளித்து இருக்கிறார். இதையடுத்து பயிற்சியாளர் மீதான நடராஜனின் அன்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். பயிற்சியாளர் உடன் காரில் வலம் வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.