பண மதிப்பிழப்பின் 2 ஆண்டுகள்: ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை துறையின் போக்கை மாற்றியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்து ஒட்டுமொத்த தேசத்தையும் பரபரப்பிலும் பதற்றத்திலும் ஆழ்த்தினார். ஓரிரவில் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் சொல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
பொதுமக்கள் பழைய நோட்டுகளை செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ள வங்கியில் வரிசையில் காத்திருந்த போது, டிஜிட்டல் பேமெண்ட் துறைக்கான பெரிய வாய்ப்பாக கருதப்பட்டது. பிரதமர் பண மதிப்பு நடவடிக்கையை அறிவித்த பிறகு, நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட் அதிகரிக்கும் மற்றும் அடுத்த சில மாதங்களில் இரு மடங்காகும் என யுவர்ஸ்டோரியிடம் வல்லுனர்கள் தெரிவித்தனர். அப்படி தான் நடந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, ரிசர்வ் வங்கி தன் ஆண்டு அறிக்கையில், நெஃப்ட், ஐ.எம்.பி.எஸ், என்.ஏ.சி.எச், கார்டு பரிமாற்றம், மின்னணு கிளியரிங் சேவை உள்ளிட்டவை 2017-18 ல் 44.6 % அதிகரித்ததாகவும், இவற்றின் பரிவர்த்தனை 11.9% அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டறிக்கையில் ரிசர்வ் வங்கி, 2016-17 ல் டிஜிட்டல் பரிவர்த்தனை அளவு 56 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. பரிமாற்ற தொகை 24.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
2017-18 ல் காகிதம் சார்ந்த பரிவர்த்தனைகள் பங்கை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பங்கு 11.1 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெபிட் கார்டு வளர்ச்சி தேக்கம்
2016 நிதியாண்டு முதல் 2017 நிதியாண்டு வரை, மொத்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு 29 சதவீதம் வளர்ந்தாலும், இந்த போக்கு தொடரவில்லை. 2018 நிதியாண்டில் கார்டு வளர்ச்சி 1.5 சதவீதம் தான் வளர்ச்சி அடைந்தது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின், டெபிட் கார்டு வளர்ச்சி குறைவாக இருந்தது இதற்கு ஒரு காரணம். 17 மற்றும் 18 நிதியாண்டில் இவை ஒரு சதவீத வளர்ச்சி மட்டுமே அடைந்தன. கிரெடிட் கார்டு வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 20 சதவீதமாக இருந்தது.
இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் டெபிட் கார்டு வளர்ச்சி 13.6 சதவீதமாக உள்ளது. நாட்டில் மொத்தம் 1.02 பில்லியன் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் உள்ளன.
டிஜிட்டல் வசதி ஏற்பு
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் டிஜிட்டல் சேவைகள் ஏற்பு அதிகரித்துள்ளது. பாயிண்ட் ஆப் சேல் டெர்மினல்கள் (பி.ஓ.எஸ்) 2016 ல் 2.53 மில்லியனாக இருந்தவை 24 சதவீத வளர்ச்சி அடைந்து 2018 ல் 3.08 மில்லியனாக அதிகரித்துள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி தகவல். இதே காலத்தில், வங்கி ஏடிஎம்கள் எண்ணிக்கை 222,475 லிருந்து 222,247 ஆக குறைந்துள்ளது.
எனினும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி இன்னமும் மேம்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் மொத்தம் 1.02 பில்லியன் கார்டுகளுக்கு 3.3 மில்லியன் ஏற்பு சாதனங்களே உள்ளன.
யுபிஐ வளர்ச்சி
டிஜிட்டல் பரிவர்த்தனை என்று வரும் போது யுபிஐ செயலி தான் முன்னிலையில் இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான, யுபிஐ மேடையில் செயல்படும் பீம் செயலியை முன்னிறுத்தியதை மீறி, யு.பி.ஐ வாயிலான பரிவர்த்தனை 2017 நிதியாண்டில் 17.9 மில்லியனாக இருந்தது. இதே காலத்தில் பரிவர்த்தனை மதிப்பு ரூ.6,900 கோடியாக இருந்தது என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவிக்கிறது.
எனினும், கூகுள், பேடிஎம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் சேவை யு.பி,.ஐ-ல் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு 2017-18 ல் இதன் பரிவர்த்தனை 5,000 சதவீதம் உயர்ந்தது. இந்த நிதியாண்டில் யுபிஐ மொத்த பரிவர்த்தனை 915.2 மில்லியனாகவும், பரிவர்த்தனை தொகை ரூ.1.09 லட்சம் கோடியாகவும் இருந்தது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் தகவல் படி இந்த ஆண்டு முதல் 8 மாதங்களில், யு.பி.ஐ பரிவர்த்தனை 2 பில்லியன் எண்ணிக்கையை கடந்து பரிவர்த்தனை பதிப்பு ரூ.2.42 லட்சம் கோடியாக உள்ளது.
கார்டு பயன்பாடு
ரிசர்வ் வங்கி தகவல் படி, பி.ஓ.எஸ் சாதனங்கள் மூலமான டெபிட் கார்டு பரிவர்த்தனை 2016 மற்றும் 2017 இடையே இருமடங்காக உயர்ந்தது. மொத்த கார்டு பரிவர்த்தனை, 2016 ல் 2.7 பில்லியனாக இருந்ததில் இருந்து 2017 ல் 5.4 பில்லியனாக உயர்ந்தது. மக்கள் கார்டு மூலம் அதிக பரிவர்த்தனை செய்வதை இது உணர்த்துகிறது.
இருப்பினும், 2018 ல் இந்த வளர்ச்சி குறைந்தது. ஆனால், பி.ஓ.எஸ் சாதனங்கள் மூலமான கார்டு பரவர்த்தனை 50 சதவீதம் உயர்ந்தது. மொத்த பரிவர்த்தனை 8.2 பில்லியனாக இருந்தது.
மேலும், பி.ஓ.எஸ் சாதனங்கள் மூலமான சராசரி அளவும் குறைந்துள்லது. 2016 ம் ஆண்டில் இது ரூ.1,666 ஆக இருந்தது, 2017 ல் இது ரூ.1,361 ஆக குறைந்தது. 2018 ல் பி.ஓ.எஸ் மூலமான சராசரி பரிவர்த்தனை ரூ.1292 ஆக குறைந்துள்ளது.
கட்டுப்பாடு பலன்
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, பணத்தை எடுக்கும் அளவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது 2017 ல் விலக்கிக் கொள்ளப்பட்ட பணத்தின் அளவில் பிரதிபலித்தது. 2017ல், ஏடிஎம் மூலம் விலக்கிக் கொள்ளப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.23.63 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இது 25 லட்சம் கோடியாக இருந்தது. அதே நேரத்தில் மொத்த ரொக்க விலக்கல் 2017 ம் ஆண்டில் 6 சதவீதம் அதிகரித்தது.
2018 ல் ரொக்க விலக்கலில் அதிக மாற்றம் இல்லை. இருந்தாலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஏடிஎம் மூலமான ரொக்க விலக்கல், 22 சதவீதம் அதிகரித்து, ரூ.2.9 லட்சம் கோடியாக இருக்கிறது..
ஆங்கிலத்தில்: தருஷ் பல்லா | தமிழில்; சைபர்சிம்மன்