தீபாவளியை முன்னிட்டு எளியோர்களுக்கு உதவ துணிச் சாவடியை நிறுவியுள்ள சென்னை துணிக் கடை!
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, விருந்து, விடுமுறை என்று பல மகிழ்ச்சிகள் நிறைந்த நாளாக அமையும். மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டால் அது இன்னும் இரட்டிப்பு ஆகும். இந்த இனிய தீபாவளியை முன்னிட்டு எளியோர்களை மனதில் கொண்டு மகிழ்ச்சி அளிக்கும் வாரமாக கொண்டாடுகிறது சென்னை The S Studio துணிக் கடை.
மைலாப்பூரில் இருக்கும் தங்கள் கடைக்கு முன் சாவடி ஒன்றை வைத்துள்ளனர். அதில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அல்லது அவ்வழி செல்லும் மக்கள் பயன்படுத்தும் நிலையில் இருக்கும் தங்களுக்கு வேண்டாம் என்கிற உடைகளை அங்கே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதை சரி பார்த்து The S Studio, ’Little Drops’ காப்பகத்திற்கு வழங்க இருக்கிறது. அக்டோபர் 3 முதல் 16 வரை அந்த சாவடி வைக்கப்பட்டு இருக்கும்.
அதுமட்டுமின்றி துணிகளை விட்டுச் செல்லும் மக்களை வெறும் கையோடு அனுப்பாமல் நன்றி சொல்லும் விதமாக The S Studio மற்றும் Naturals Salon பரிசு வவுச்சர்களை வழங்குகிறது. தீபாவளி பரிசுப் பொருட்களும் தருகின்றனர் இவர்கள்.
இந்த துணிக் கடை சுபாஷினி ஸ்ரீனிவாசன் என்ற பெண் தொழில்முனைவரால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மைலாப்பூரில் இந்த கடையை நிறுவும்முன் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் புடைவைகளை வடிவமைத்து விற்று வந்தார் இவர்.
“நான் பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் என் ஆர்வம் வடிவமைப்பு மேல்தான் இருந்தது. ஃபேஷன், வடிவமைப்பு மேல் இருந்த ஆர்வமே புடவை தயாரிப்பு மற்றும் விற்பனை செய்ய என்னை உக்கமளித்தது,”
என தன் ஆர்வத்தை கூறுகிறார் சுபாஷினி.
The S Studio-வில் தசர் பட்டு, காஞ்சிபுரம் பட்டு, காட்டன் பட்டு, கோட்டா புடவை, மட்கா பட்டு, சந்தேரி, ஆர்கான்ஸா என்று பல வகையான புடவைகள் உள்ளது. இவை அனைத்தையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கையில் வடிவமைத்து தருகின்றனர்.
கை வேலைப்பாடு செய்வதற்கு என தனி குழு வைத்திருக்கிறார் சுபாஷ்ணி. வெளியில் இருந்து புடவைகளை பெற்றாலும், தனக்கென தனித்துவமான சில வேலைப்பாடுகள் செய்த பின்னரே அதை விற்கிறார்.
தீபாவளியை முன்னிட்டு அனைத்து கடைகளும் வியாபாரத்தின் மேல் கவனம் செலுத்தும் நேரத்தில் எளியோருக்காக சாவடி வைக்கும் யோசனையை பற்றி கேட்டோம்?
“தீபாவளிக்கு தெரிந்தவர்கள் நண்பர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்கி தருகிறோம் பெரும்பாலும் பெண்கள் புடவையை தர விரும்புவார்கள். இருப்பவர்களுக்கு பரிசளிப்பதை விட இல்லாதோருக்கு அளித்தால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும். மேலும் இந்த இனிய நாளில் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்,” என்கிறார் சுபாஷ்ணி.
சொந்த முதலீட்டில் கடை ஆரம்பித்து வெற்றிகரமாய் நடத்தி வருகிறார் இவர். சில சமூக சூழ்நிலைகளால் எதிர்ப்பார்த்த அளவு வியாபாரம் நடக்கவில்லை என்றாலும் தங்கள் தயாரிப்புகளை மக்கள் விரும்புவதும், பாராட்டுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.