சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை முனைப்புடன் ஏற்படுத்த கர்நாடக அரசு பிக் பாஸ்கெட்டுடன் கைக்கோர்த்தது!
கர்நாடக அரசு ஆர்கானிக் வேளாண்மை மற்றும் சிறுதானியங்களை ஊக்குவிக்க ஆன்லைன் மளிகை தளமான பிக்பாஸ்கெட்டுடன் இணைந்துள்ளது.
நீங்கள் ஒரு வருடத்திற்கு மேலாக பெங்களூருவில் வசித்து வருபவர் என்றால் ராகி களி உருண்டை குறித்த உங்களது தனிப்பட்ட அனுபவம் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த ராகி களி உருண்டை ஆவியில் வைத்து தயாரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்துகள் நிறைந்தது. விவசாயிகள் இதை உண்பதால் அவர்களது கடினமாக உடல் உழைப்பிற்குத் தேவையான அத்தனை சத்துகளும் கிடைக்கப்பெறுகிறது.
இந்த உணவுப்பொருளை நீஙகள் Swiggy-யின் மெனுவில் பார்க்கமுடியாது. சென்ற முறை இதை நான் தேடியபோது எனக்கு ‘தனிப்பட்டை சுவையம்சம்’ இருப்பதாகவும் தேடல்தளத்தில் வேறு ஏதேனும் ஒரு பெயரை இட்டு தேடுமாறும் அறிவுறுத்தியது. இதுதான் பிரச்சனை. வேறு எந்த பெயரைக் கொண்டும் ராகி களி உருண்டையைத் தேடமுடியாது. ஏனெனில் அது ஒரு தனித்துவம் வாய்ந்த பண்டம்.
உண்மையில் 20 வருடங்களுக்கு முன்பு இந்த நகரத்திற்கு வந்தபோதுதான் ராகி களி உருண்டை பற்றி எனக்குத் தெரியவந்தது. என்னுடைய பணியிடத்தில் இருந்த கேண்டீனில் வாரத்திற்கு ஒரு முறை இதைப் பரிமாறுவார்கள். வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்றால் ராகி உருண்டைக்கு பதிலாக சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். எனினும் எங்களில் சிலர் சப்பாத்தியை மென்று சாப்பிடுவதற்கு பதிலாக லேசாக கடித்து சாப்பிடலாம் என்று ராகி உருண்டையைத் தேர்ந்தெடுப்போம்.
எங்களுடன் சாப்பிடுபவர்கள் எங்களுக்கு உதவ முன்வருவார்கள். எப்படி சாப்பிடவேண்டும் என்று விவரிப்பார்கள்.
“உருண்டையின் ஒரு சிறு பகுதியை எடுத்து சாம்பாரில் தொட்டு எடுத்து மெதுவாக விழுங்குங்கள். வாயில் போட்டு மெல்லவேண்டாம்.” என்பார் ஒருவர். மற்றொருவர் “இல்லை, இல்லை. முதலில் ஒரு துண்டு வாயில் போட்டு அதற்குபின் ஒரு ஸ்பூன் கறியை வாயில் போட்டு சாப்பிடவேண்டும்’ என்பார்.
நாம் அதற்கென்று ஒரு பிரத்யேக சுவையை ஒதுக்கும் வரை இவ்வாறு இப்படிப்பட்ட விளக்கங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
சிறுதானியங்களை ஊக்குவித்தல்
இந்த டிஷ் எங்கு கிடைக்கும் என்று நீங்கள் ஆர்வமாக தேடுபவராக இருந்தால் வேறு எங்கும் அலையவேண்டாம். பேலஸ் க்ரௌண்ட்டில் துவங்கப்பட்டிருக்கும் ஆர்கானிக்ஸ் மற்றும் மில்லட், 2017, நேஷனல் ட்ரேட் ஃபேர் சென்றால் போதும்.
இந்த திட்டம் கர்நாடக விவசாயத்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கௌடாவின் முயற்சியாகும். கடந்த ஒன்றரை வருடங்களாக ஆர்கானிக் வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நகர்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வகையான தானிய பயிர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் விவசாயிகள் இதை பயிரிட்டு லாபமடையவேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இன்று நிலையான வாழ்க்கை குறித்து பேசி வருகிறோம். ஆனால் அது நிலையான விவசாயத்திலிருந்துதான் துவங்குகிறது,” என்று யுவர் ஸ்டோரியுடன் உரையாடுகையில் தெரிவித்தார் பைரே கௌடா. விவசாய நிலத்திலிருந்து நேரடியாக வீட்டிற்கு வந்தடையவேண்டும் என்கிற இந்த முழுமையான அணுகுமுறைதான் மாநில அரசின் நோக்கமாகும்.
”வாழ்க்கைமுறை சார்ந்த பல நோய்களுடன் மக்கள் போராடுகின்றனர். இது பெரும்பாலும் நமது நவீன உணவுப்பழக்கம் காரணமாகவே ஏற்படுகிறது.” என்றார். உடல்பருமனுக்கும் நீரிழிவு நோய் தாக்குவதற்கும் பசைதன்மை அதிகம் கொண்ட பொருள்களும் ரீஃபைண்ட் தயாரிப்புகளும்தான் காரணம்.
எனினும் ஆரோக்யமான வாழ்வு வேண்டுமெனில் அதற்கான விலையை நாம் அளித்தே தீரவேண்டும். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால் சிறுதானியம் போன்ற பயிர்கள் கடினமாக இருப்பதால் அவை வளர்வதற்கு குறுகிய நிலப்பகுதியும். குறைவான தண்ணீரும், குறைந்த முதலீடுமே தேவைப்படும்.
ஒரே செயலில் இரண்டு விளைவுகள்
அப்படியெனில் பயன்படுத்தும் நுகர்வோரை அடையும் தானியங்கள் ஏன் அதிக விலையுடன் வந்தடைகிறது? அக்ரோ-கெமிக்கல் கார்ப்பரேஷன்களுக்கும் பெரிய உணவு நிறுவனங்களுக்கும் எந்தவித லாபத்தையும் அளிப்பதில்லை என்பது காரணமாக இருக்கலாம். அரிசி அல்லது கோதுமை பயன்பாட்டை ஊக்குவித்தால் இயந்திரங்கள், கலப்பின விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் பொருளாதார ரீதியிலான லாபத்தை அடைய பின்பற்றப்படும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
சிறுதானிய திட்டமானது ஒரே செயலைக் கொண்டு இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்துவதைப் போன்றது. பைரே கௌடா கூறுகையில்,
”தேவையை உருவாக்க விரும்புகிறோம். இதனால் விவசாயிகள் சிறுதானியங்களை அதிகம் பயிரிடுவார்கள். இது தண்ணீர் போன்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது, மாசற்ற விவசாயத்திற்கு வழிவகுப்பது ஆகிய நன்மைகள் மட்டுமன்றி மக்களின் ஆரோக்யத்திற்கும் பெரிதும் உதவும்.”
குறைந்த விலையில் சிறப்பான உற்பத்தி நுகர்வோருக்கு கிடைக்கவேண்டும் என்பதை உறுதிசெய்வதற்காக ஆன்லைன் மளிகை தளமான பிக்பேஸ்கட்டுடன் அரசாங்கம் இணைந்துள்ளது.
ஆர்கானிக் விவசாயிகளுக்கான கூட்டமைப்பை அமைப்பதற்காக மாநிலத்திலுள்ள விவசாயிகளுடன் கடந்த சில ஆண்டுகளாக பைரே கௌடாவின் அமைச்சகம் திட்டமிட்டுவருகிறது. ”தனிப்பட்ட விவசாயியிடமிருந்து ஆர்கானிக் உற்பத்தியை கொள்முதல் செய்வதில் சில்லறை வர்த்தகர்கள் அதிக சவால்களை சந்தித்து வருகின்றனர் என்பதை அவர்களுடன் பேசுகையில் நாங்கள் தெரிந்துகொண்டோம். தனிப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பால் இந்தப் பிரச்சனையை தீர்த்துவிடலாம்.” என்றார் அமைச்சர். இதனால் நுகர்வோர், சில்லறை வர்த்தகர்கள், விவசாயிகள் என அனைவரும் பலனடைவர்.
பிக்பாஸ்கட்
மாநிலம் முழுவதிலும் இதுபோன்ற மூன்று கூட்டமைப்புகளில் இணைந்துள்ளது பிக்பாஸ்கட். 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள கிட்டத்தட்ட 500 மெட்ரிக் டன் சிறுதானியங்களை தேவநகரி மற்றும் சித்ரதுர்கா ஆர்கானிக் விவசாயிகள் கூட்டமைப்பிலிருந்து கொள்முதல் செய்கின்றனர். மூன்றாவது கூட்டமைப்பான உத்தர கன்னட மாநிலம் ஆர்கானிக் விவசாயிகள் கூட்டமைப்பு 12 கோடி ரூபாய் மதிப்பிலான கிட்டத்தட்ட 300 மெட்ரிக் டன் ஆர்கானிக் மசாலாக்களை (Spices) வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தினால் விவசாயிகளுக்கு தற்போதைய சந்தை விலையைக் காட்டிலும் 15 முதல் 20 சதவீதம் அதிக விலையுயர்வு கிடைக்கும்.
பிக்பேஸ்கட்டின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் ஹரி மேனர் யுவர்ஸ்டோரியுடன் உரையாடுகையில்,
”தரம்பிரித்தல், வகைப்படுத்துதல், தரப்பரிசோதனை, பேக்கேஜிங் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்படும். குறிப்பிட்ட விவசாயி கூட்டமைப்பில் பிக்பாஸ்கட்டில் தயாரிப்புகள் கோ-பிராண்டிங் செய்யப்படும்.”
தற்போது பிக்பாஸ்கட்டிற்கு நாடு முழுவதும் கிட்டத்தட்ட 25 சேகரிப்பு மையங்கள் உள்ளன. உற்பத்தியை தரம் பிரிக்கவும், தரம் சார்ந்து வகைப்படுத்தவும், அதன்பின் நுகர்வோருக்கு அளிக்கும் வகையில் பேக்கிங் செய்யவும் இந்த சேகரிப்பு மையங்களுக்கு உள்ளூர் விவசாயிகள் அனுப்புகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தினால் ஆன்லைன் ஸ்டோர் மூன்று கூட்டமைப்புகளையும் சேகரிப்பு மையங்களாக அமைக்க திட்டமிடுகிறது. இதனால் விவசாயிகள் தரப்பரிசோதனை மற்றும் பேக்கிங்கில் ஈடுபடலாம்.
”எங்களது தளத்தில் ஆர்கானிக் உற்பத்திகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.” என்றார் ஹரி. முன்பு எங்களது தளத்தில் ஆர்கானிக் உற்பத்தியின் விற்பனை கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து சதவீதம் இருந்தது. தற்போது கிட்டத்தட்ட 20 சதவீதமாக உள்ளது. ”எங்களுக்கு ஆர்கானிக் உற்பத்திக்கான ஏழு பிரத்யேக சேகரிப்பு மையங்கள் உள்ளன.” என்றார்.
ராகி களி உருண்டை
கடந்த ஆறு மாதங்களாக பைரே கௌடா சில்லறை வர்த்தகர்களையும் இணைத்துக் koள்ளும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஸ்டார்ட் அப்புடன் முதல் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது சிறப்பான தொடக்கமாக இருப்பதாகவும் தெரிவித்தார். ”நவீன தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமாக இருப்பதால் புதுமையான சிந்தனையுடன் செயல்படுகின்றனர். பிக்பாஸ்கட்டுடன் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார். மேலும் மற்ற பாரம்பரிய வணிகர்களுடனும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்றார்.
சில வருடங்களுக்கு முன்னால் அவர் வளர்ந்த நிலப்பகுதி சிதைந்துகொண்டிருந்தை அவர் உணர்ந்தார். அதனால் ஆர்கானிக் வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் குறித்த திட்டங்களுக்கான எண்ணம் அப்போதே தோன்றியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ”நான் கோலார் மாவட்டத்தில் வளர்ந்தேன். விவசாயத்துறை அமைச்சர் என்பதால் நிலங்கள் வீணாவதைப் பார்ப்பதற்கு கவலையளிக்கிறது.” என்றார்.
ராகி களி உருண்டை முக்கிய உணவாக இடம்பெற்றிருக்கும் குடும்பத்தில் வளர்ந்தவர் என்பதால் பைரே கௌடாவின் ராகி களி உருண்டை கதை குறிப்பிடத்தக்கதாகும். தங்களது தட்டில் இருக்கும் ராகி களி உருண்டையின் கதையும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் என்று எத்தனை பேரால் உறுதியாக கூறமுடியும்?
ஆங்கில கட்டுரையாளர் : தீப்தி நாயர்