ரூ.260 கோடி நிதி முதலீடு பெற்றது 'திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல்ஸ்'
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல்ஸ் தனது முதல் தனியார் ஈக்விட்டி நிதியை திரட்டியுள்ளதன் மூலம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் விரிவாக்கத்தை வலுவாக்கி, அடுத்த 3 ஆண்டுகளில் ஐபிஓ செல்ல திட்டமிட்டுள்ளது.
தனியார் ஈக்விட்டி நிறுவனமான, CX Partners சங்கிலித்தொடர் ரெஸ்டாரண்ட் நிறுவனமான ’திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல்’சில் ரூ.260 கோடி முதலீடு செய்துள்ளது.
ரூ.600 கோடி வர்த்தகம் கொண்டிருப்பதாக மதிப்பிடப்படும் இந்த சங்கிலித்தொடர் ஹோட்டல் திரட்டியுள்ள முதல் தனியார் ஈக்விட்டி நிதி இதுவாகும் என நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தன.
இந்த நிதித் திரட்டலை தொடர்ந்து, திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல்ஸ், பொது பங்குகளை வெளியிட விரும்புவதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஐபிஓவுக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும், அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரிவர்த்தனை மூலம், சிஎக்ஸ் பார்ட்னர்ஸ், வர்த்தகத்தில் பாதி சமபங்கை பெறுகிறது. உரிமையாளர்கள் மீதி பாதி பங்குகளை வைத்துள்ளனர். திண்டுக்கல் தலப்பாக்கட்டியின் நிர்வாக இயக்குனரான நாகசாமி தனபாலன் தொடர்ந்து வர்த்தகத்தை நடத்துவார்.
இந்தியா மற்றும் உலக அளவில் விரிவாக்கம் செய்ய தொழில்முறை வல்லுனர்களை பணியில் அமர்த்த மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளில் முதலீடு செய்ய இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.
அத்வே கேபிடல் அட்வைசர்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.விநோத்குமார், இந்த ஒப்பந்தத்தின் முதலீட்டு வங்கியாளராக செயல்பட்டு, உரிமையாளர்கள் தரப்பில் ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.
Bluekoi Ventures ஆர்.பாலசந்தர் இந்த ஒப்பந்தத்திற்கு நிர்வாக இயக்குனருக்கான ஆலோசகராக செயல்பட்டுள்ளார். தற்போது, திண்டுக்கல் தலப்பாக்கட்டி, இந்தியாவில் 65 இடங்களில் செயல்பட்டு வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில், 200 இடங்களாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
பெங்களூருவில் மேலும் அதிக மையங்கள் திறப்பது மற்றும் ஐதராபாத் மற்றும் கேரளாவில் மேலும் விரிவாக்கம் செய்வதன் மூலம் தென்னகத்தில் தனது நிலையை வலுவாக்கிக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, மும்பை, தில்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் பெரிய அளவில் விரிவாக்கத்தை திட்டமிட்டுள்ளது.
தற்போது உலக அளவில் 7 இடங்களில் உள்ள இந்த பிராண்ட், சர்வதேச இருப்பையும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி, 3 மில்லியன் வாடிக்கையாளர் பரப்பை கொண்டுள்ளது. தினமும், 5,00,000 பிரியாணிகளை விற்பனை செய்கின்றது. ரூ.300 கோடிக்கு மேல் வருவாயை வர்த்தகம் செய்து வருகிறது.
நிதி மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்பான தரவுகள் உள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த சேவை அளிக்கும் வகையில், தரக்கட்டுப்பாடு, சிஆர்.எம். இ.ஆர்.பி உள்ளிட்ட தொழில்நுட்ப செயல்பாடுகளில் முதலீடு செய்ய உள்ளது.
பங்குதாரர்கள் குறைந்த அளவு செயல்பாடு கொண்ட பகுதிகளில், நிறுவனம் தனது நேரடி டெலிவரி முறையை வலுவாக்கவும் திட்டமிட்டுள்ளது. நிறுவனம், 2,000க்கு மேல் ஊழியர்களை பெற்றுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: தருஷ் பல்லா | தமிழில்: சைபர்சிம்மன்