‘ஒவ்வாமை இருந்தால் தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதீர்கள்’ – சீரம் நிறுவனம் அறிவிப்பு!
கடுமையான ஒவ்வாமை உள்ளவர்கள் COVID-19 தடுப்பூசி 'கோவிஷீல்ட்' 'Covishield' இன் எந்தவொரு மூலப்பொருளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தடுப்பூசி பெறுபவருக்கான ஒப்புதல் படிவத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி, இந்த தடுப்பூசியின் டோஸுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட நபருக்கு கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவு ஏற்பட்டால் ஒருவர் கோவிஷீல்ட் தடுப்பூசியை அடுத்த முறை பெறக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சீரம் நிறுவனம் வலைதளத்தில் இந்த தடுப்பூசியின் நன்மை, தீமைகள் குறித்து தெரிவித்துள்ளது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசியில் எல்-ஹிஸ்டைடின், எல்-ஹிஸ்டைடின் ஹைட்ரோகுளோரைடு மோனோஹைட்ரேட், மெக்னீசியம் குளோரைடு ஹெக்ஸாஹைட்ரேட், பாலிசார்பேட் 80, எத்தனால், சுக்ரோஸ், சோடியம் குளோரைடு, டிசோடியம் எடிட்டேட் டைஹைட்ரேட் (ஈடிடீஏ), தண்ணீர் ஆகியவை அடங்கி உள்ளன.
இந்த தடுப்பூசியில் அடங்கியுள்ள மருந்துப்பொருட்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) உடையவர்கள், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது. தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன்பாக எந்த மருந்து, உணவு, தடுப்பூசி அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் மருந்து பொருட்களால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் அதுபற்றி சுகாதாரப் பணியாளரிடம் கண்டிப்பாக கூறி விடுங்கள்.
தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நபர் ஏற்கெனவே மற்றொரு கொரோனா தடுப்பூசியை செலுதிதியிருந்தால் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
காய்ச்சல், ரத்தப்போக்கு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்தை எடுத்துக் கொண்டிருந்தால் சுகாதாரப் பணியாளர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பமாக திட்டமிட்டிருந்தாலோ தாய்ப்பால் கொடுப்பதாக இருந்தாலோ, தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு முன்பு அவர் சுகாதார செவிலியர்களிடம் சொல்ல வேண்டும். என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 18 திங்கள் அன்று மாலை 5 மணி வரை நாட்டில் மொத்தம் 3,81,305 பயனாளிகளுக்கு கோவிட் -19 க்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 580 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது பதிவாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழில்: மலையரசு