மீண்டும் ஸ்டார்ட் அப் பயணத்தை துவங்கிய இ-காமர்ஸ் முன்னோடி வைத்தீஸ்வரன்...
இந்திய இ-காமர்ஸ் முன்னோடியான வைத்தீஸ்வரன், இணை நிறுவனர் சந்தீப் தக்ரனுடன் இணைந்து மீண்டும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை Again ஆரோக்கிய பாணம் மூலம் துவக்கியுள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன், 1999 செப்டம்பர் 2ம் தேதி, கே.வைத்தீஸ்வரன் மற்றும் ஐந்து இணை நிறுவனர்கள் பேப்மார்ட் நிறுவனத்தின் துவக்கத்தை அறிவித்தனர். இதுவே இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் மேடையான இந்தியா பிளாசா அறிமுகத்திற்கு அடித்தளமானது. இப்போது, வைத்தீஸ்வரன், இணை நிறுவனர்களில் ஒருவரான சந்தீப் தக்ரனுடன் இணைந்து மீண்டும், ஒரு ஸ்டார்ட் அப்பை துவக்கியிருக்கிறார்.
’அகெய்ன்’ ’Again’ எனும் பெயரில் துவக்கப்பட்டுள்ள அந்த ஸ்டார்ட் அப் அதே பெயரில், யோகர்ட்டை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கிய பாணத்தை வழங்குகிறது.
“பேப்மார்ட்டை துவக்கிய போது நாங்கள் ஆறு பேர் இருந்தோம். அவர்களில் நான்கு பேர், பின்னர் பிக்பாஸ்கெட்டை துவக்கினர். இப்போது நானும், சந்திப்பும், அகெய்ன் ஸ்டார்ட் அப்பை துவக்கி இருக்கிறோம்,” என்கிறார் வைத்தீஸ்வரன்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாபிளாசா நிறுவனத்தை மூடிய பிறகு வைத்தீஸ்வரன், ஒரு வழிகாட்டியாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை அளித்து வருகிறார். அவரது இந்தியா பிளாசா நிறுவன பயணம் நன்கு பதிவு செய்யப்பட்டதாக இருக்கிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கான எச்சரிக்கை கதையாகவும் இருக்கிறது. இந்த பயணத்தை அவர், பைலிங் டூ சக்சீட்: தி ஸ்டோரி ஆப் இந்தியாஸ் பர்ஸ்ட் இ-காமர்ஸ் கம்பெனி எனும் புத்தகத்திலும் விவரித்திருக்கிறார். வைத்தீஸ்வரன் இந்த புத்தகத்தை வெளியிட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் சந்திப்பிற்கு மீண்டும் ஸ்டார்ட் அப்பை துவக்கும் எண்ணம் வந்தது.
மீண்டும் ஏன்?
சந்திப்பின் மகன் சர்வதேசம் ஜூனியர் அளவில் டென்னிஸ் விளையாடுகிறார். அவருக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் மிக்க பாணம் தேவைப்படுகிறது. ஆனால் சந்தையில் அதிக வாய்ப்புகள் இல்லை.
“புரத ஷேக் நல்ல வாய்ப்பு என்றாலும், 14 வயது மகனுக்கு அதை கொடுக்க மாட்டேன். பதின் பருவத்தினருக்கும், ஏன் வயதானவர்களுக்கும் இயற்கை உணவுகள் அதிக அளவில் இல்லை,” என்று இது பற்றி சந்தீப் விளக்குகிறார்.
இது பற்றி அவர் வைத்தீஸ்வரனுடன் விவாதித்த போது, அவர்கள் சந்தை ஆய்வில் ஈடுபட தீர்மானித்தனர்.
“56 சதவீத உடல் பருமன், நீரிழிவு, சுகாதார பாதிப்பு, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் தேர்வுகளால் உண்டாவதை தெரிந்து கொண்டோம்,” என்கிறார் வைத்தீஸ்வரன்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் எளிதாக கிடைப்பதே இதற்குக் காரணம். அமெரிக்க விவசாயத்துறை நடத்திய ஆய்வின் படி, சமநிலையான உணவு என்பது, பால், பழங்கள், காய்கறிகள், புரதம் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும் என இருவரும் தெரிந்து கொண்டனர்.
புதிய தயாரிப்பு
“இந்த ஐந்தும் உள்ள ஒரு பாணத்தை உருவாக்குவது சாத்தியமா என யோசித்தோம்,” என்கிறார் வைத்தீஸ்வரன்.
கூடுதலாக சேர்க்கப்பட்ட சர்க்கரை, பதப்படுத்தப்படுத்தும் பொருட்கள், செயற்கை வாசனை பொருட்கள் இல்லாத, முழுமையான, ஆரோக்கியமான பாணத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த தீர்மானித்தனர். உடனடியாக பருகக் கூடிய மற்றும் 90 நாள் வைத்திருத பயன்படுத்தக்கூடிய ஒரு பாணத்தை உருவாக்க விரும்பினர்.
“இதில் ஆர்வமாக இருந்தாலும், இந்த கட்டத்தில் இந்தியாவில் குளர்பதன சங்கிலியை உருவாக்குவது கடினம் என உணர்ந்தோம். குறிப்பாக இந்தியாவில் குளிர்பதன வசதி சங்கிலி சீராக இல்லை. இதை நாங்கள் உருவாக்கினாலும், கூட சில்லறை விற்பனை அளவில் இது சிக்கலாகலாம்,” என்கிறார் வைத்தீஸ்வரன்.
அடுத்த கட்டமாக இருவரும், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பிராடக்ட் உருவாக்குவதில் 20 ஆண்டு அனுபவம் மிக்க ஒருவரை தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
“முதலில் எங்கள் கிச்சனில் இதை உருவாக்கினோம். அதன் பிறகு பங்குதாரரை சேர்த்துக்கொண்டோம். ஆனால் அதன் பிறகும் இறுதி பிராடக்டை உருவாக்க 18 மாதங்கள் தேவைப்பட்டது,” என்கிறார் சந்தீப்.
எந்த அம்சத்திலும் சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லை என்பதே இதற்கு காரணம் என்கிறார் வைத்தீஸ்வரன்.
அகெய்ன் நிறுவனம், பெங்களூருவில் உள்ள நீல்கிரிஸ் டைரி ஃபார்ம் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள குவாலிட்டி மில்க் பார்ம் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மூலப்பொருட்களுக்கும் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
சந்தை
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட அகெய்ன் பாணம், பிக்பாஸ்கெட் தளத்திலும், காத்ரெஜ் நேச்சர் பாஸ்கெட், நம்தாரி பிரெஷ் மற்றும் ஸ்டார் செலெக்ட் பசார் ஆகிய மையங்களில் பெங்களூருவில் கிடைக்கிறது. நான்கு வகைகளில் ரு.50 விலைக்கு கிடைக்கிறது. அறிமுக விலை ரூ.39.
மெட்ல் மற்றும் யூரோமானிட்டர் தகவல் படி, இந்தியாவில் பாணங்களின் சந்தை ரூ.43,034 கோடியாக உள்ளது. இது 2030 ல் ரூ.1,30,000 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆரோக்கிய பாணங்களின் பங்கு ரூ.10,680 கோடியாக உள்ளது. 2023 ல் இது ரூ. 15,067 கோடியாக உயரும் என கருதப்படுகிறது.
ஆரோக்கியப் பாணங்களுக்கான சந்தை வேமகாக வளர்கிறது. நுகர்வோர் பாண பிராண்டான எபிகாமியாவின் தாய் நிறுவனமான டிரம் புட் இண்டர்நேஷனல், ரு.182 கோடி நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. பிரெஞ்சு நிறுவனமான டனோனே மேனிபஸ்டோ வென்சர்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் வெர்லின்வெஸ்ட் உள்ளிட்டவை இந்த முதலீட்டு சுற்றில் அங்கம் வகித்துள்ளன.
டனோனே 2020 ல் 20 முதல் 25 நிறுவனங்களில் முதலீடு செய்ய இருப்பதாக கடந்த ஆண்டு ராய்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் ஆறு அல்லது ஏழு நிறுவனங்களை கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அகெய்ன் குழு, தேவதை நிதி மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதி திரட்டியுள்ளது. சந்தையின் 3 சதவீதத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக வைத்தீஸ்வரன் கூறுகிறார். தென்னிந்தியாவில் அறிமுகம் ஆகி வளர்ந்த பின் இந்திய அளவில் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம் என்கிறார் அவர்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்; சைபர்சிம்மன்