வெல்கம் டு இந்தியா- பெங்களூரில் கால்பதிக்கும் டெஸ்லா!
இந்தியாவில் பெங்களுருவில் கிளை துவங்கியது டெஸ்லா கார் நிறுவனம்!
உலகின் பணக்காரர் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் இறுதியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லாவின் இந்தியப் பயணம் விரைவில் தொடங்க உள்ளது.
இந்தியாவில் எலான் மஸ்க், டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் Tesla India Motors and Energy Private Limited (Tesla), என்ற பெயரில் பெங்களூரில் தனது நிறுவனத்தை உருவாக்க இருக்கிறார்.
ஜனவரி 8 ஆம் தேதி இதற்கான பதிவுகள் நடைப்பெற்றன. உலகளாவிய மூத்த இயக்குனர் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன், தலைமை கணக்கியல் அதிகாரி வைபவ் தனேஜா, மற்றும் தொழில்முனைவோர் வெங்கட்ரங்கம் ஸ்ரீராம் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.
இது தொடர்பான அறிக்கையில்,
இந்நிறுவனமானது, மின்சார வாகனங்கள் தயாரிக்கும் விற்பனையை ஊக்குவிக்கும் என்றும், பாகங்கள், உபகரணங்கள், உள்ளிட்ட தயாரிப்புகள் இதில் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன பாகங்கள் வாங்குவது மற்றும் கொள்முதல் செய்வது போன்ற செயல்களிலும் இது ஈடுபடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனமானது ரூ.1 லட்சம் செலுத்தி மூலதனத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.55-60 லட்சம் விலையுடன் மாடல் 3 வகை கார்கள் இந்தியாவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"கர்நாடகா பசுமை இயக்கம் நோக்கிய இந்தியாவின் பயணத்தை வழிநடத்தும். மின்சார வாகன உற்பத்தியாளர் டெஸ்லா விரைவில் இந்தியாவில் தனது செயல்பாடுகளை பெங்களூருவில் ஆர் அண்ட் டி பிரிவுடன் தொடங்குவார். எலான் மஸ்க்கை இந்தியாவிற்கும் கர்நாடகாவிற்கும் வரவேற்கிறேன், அவருக்கு வாழ்த்துக்கள்," என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நிறுவனத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதமே தனது ட்விட்டர் பகத்தில்,
‘அடுத்தாண்டு நிச்சயம்’ என்று டி-ஷர்டின் புகைப்படத்துடன் 2021 ஆம் ஆண்டில் டெஸ்லா இந்திய சந்தையில் நுழைவதை எலான் மஸ்க் உறுதிப்படுத்தியிருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் அமெரிக்காவின் மிகபெரிய மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் அதன் கார்களுக்கான விநியோக வசதியை (விற்பனை மையங்கள்) தொடங்கும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனம் தயாரிப்பில் இந்தியா மிகப்பெரிய இடத்தை பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.