எலான் மஸ்க்கின் இந்திய வருகை: டெஸ்லா முதலீட்டைக் குறிவைக்கும் தமிழ்நாடு!
டெஸ்லாவின் மின்சார வாகனங்கல் உற்பத்தித் தொழிற்சாலைக்கான தளமாக தமிழ்நாடு தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. தமிழ்நாடு சிறந்த மின் வாகனக் கொள்கைகளைக் கொண்டிருப்பதாக மாநிலத் தொழில்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் உற்பத்தித் தொழிற்சாலைக்கான தளமாக தமிழ்நாடு தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. தமிழ்நாடு சிறந்த மின் வாகனக் கொள்கைகளைக் கொண்டிருப்பதாக மாநிலத் தொழில்துறை அமைச்சர் கூறியுள்ளார். எலான் மஸ்க் இம்மாதம் 22ம் தேதி வருகை தந்து பிரதமர் மோடியைச் சந்திக்கவிருப்பதாக ஏற்கெனவே செய்திகள் பல வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
மின்சார வாகனங்களுக்கான தயாரிப்பு மையமாக தமிழ்நாடு தன்னை முன்னிறுத்தி வருகிறது. புளூம்பர்க் செய்திகளின்படி, எலான் மஸ்க்கின் இந்திய வருகையையொட்டி மின்சார வாகனங்களின் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் பிரதான உற்பத்தி தளமாக தமிழ்நாடு இருக்கும் என்று தமிழக அரசு தீவிரமாக தன்னைச் சந்தைப்படுத்தி வருகிறது.
அமெரிக்க நிறுவனமான டெஸ்லா தங்களது மின்சார வாகன உற்பத்திக்கான ஒரு பெரிய தளத்தை எதிர்நோக்கியுள்ளது. இதற்காக 2 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில்,
“அனைத்து உலகளாவிய பெரிய கார் உற்பத்தியாளர்களின் மின்சார வாகன உற்பத்திக்கான அனைத்து வாய்ப்புகளையும் மாநிலம் வழங்கும்,” என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில்தான் சிறந்த மின்சார வாகனக் கொள்கைகள் உள்ளன எனவே இங்கு முதலீடு செய்வதுதான் உச்சிதமாக இருக்கும் என்றார்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஏற்கனவே நிசான் மோட்டார், ரெனால்ட் எஸ்ஏ, ஹூண்டாய் மோட்டார், மற்றும் பிஎம்டபிள்யூ ஏஜி ஆலைகள் உள்ளன. இந்நிலையில், அமைச்சர் மேலும் கூறுகையில்,
"தமிழ்நாடு ஏற்கனவே நாட்டின் வாகனத் தலைநகராக உள்ளது, இப்போது மின்சார வாகனத் தலைநகராகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்றார்.
டெஸ்லா முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து தகுதிகளும் தமிழ்நாட்டிற்கு இருந்தாலும் பிற மாநிலங்களும் டெஸ்லாவை இழுப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன என்பதால் போட்டி அதிகம்.
தகவல் உதவி: இந்தியா டுடே
இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்திக்கும் எலான் மஸ்க்- முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பாரா?