ஊரடங்கில் ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்களாக மாறிய 4 பொறியாளர்கள்!
புதுக்கோட்டையின் தொண்டைமான் ஊரணி பகுதியைச் சேர்ந்த பொறியாளர்களான அர்விந்த், விக்னேஷ், பவானிசங்கர், சாரதாஸ் ஆகிய நால்வரும் கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடம் எடுத்து வருகின்றனர்.
மற்றவர்களுக்கு உதவி தேவை என்கிற சூழல் ஏற்படும்போது பலரும் தங்களது வசதியான வட்டத்தை விட்டு வெளியேறி உதவ முன்வருகின்றனர். இந்த மனிதநேயத்தை பல இயற்கை பேரிடர்கள் வெளிக்கொணர்ந்துள்ளது.
அதேபோல் இன்றைய கொரோனா பெருந்தொற்று சூழலிலும் உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து வசதி என மக்களின் தேவையறிந்து அதற்கேற்ப பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொண்டைமான் ஊரணி பகுதியைச் சேர்ந்தவர்கள் அர்விந்த், விக்னேஷ், பவானிசங்கர் மற்றும் சாரதாஸ். பொறியாளர்களாக இவர்கள் நால்வரும் நண்பர்கள். கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் படிப்பைத் தொடர முடியாமல் அவதிப்படும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு உதவி வருகின்றனர். இவர்கள் ஆசிரியர்களாக மாறி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர்.
ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்களைப் படித்து வருகின்றனர். ஆனால் இந்த கிராமத்து மக்களில் பெரும்பாலானோர் விவசாய நிலத்தில் தொழிலாளர்களாக வேலை செய்பவர்கள். மேலும் சிலர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்கின்றனர். ஸ்மார்ட்போன் என்பது இவர்களது கற்பனைக்கும் எட்டாத ஆடம்பர பொருள்.
எனவே இந்தப் பொறியாளர்கள் நால்வரும் மாணவர்களுக்கு திறந்தவெளியில் வகுப்பெடுக்கின்றனர். இவர்களது வீட்டு வாசலில் பாடங்களுக்கான அட்டவணை போடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பத்தாம் வகுப்பு படிக்கும் 12 மாணவர்கள் வகுப்பில் பங்கேற்பார்கள். 2 மணிக்குப் பிறகு 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 28 மாணவர்கள் வகுப்பிற்கு வருகின்றனர். இந்த வகுப்பு நான்கு மணி நேரம் நடைபெறுகிறது.
ஜூலை மாதம் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோக்கிக்கப்பட்ட பின்னர் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டன.
ஆசிரியர்களாக மாறிய இந்த நண்பர்கள் கிராமத்தில் உள்ள திறந்தவெளியில் கரும்பலகையை வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் தேர்வு நடத்துகின்றனர்.
“நாங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாரான போது சீனியர் மாணவர்கள் பலர் எங்களுக்கு உதவியுள்ளனர். எனவே எங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கும் நாங்கள் உதவ விரும்பினோம்,” என்று அர்விந்த் `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்துள்ளார்.
“பாடம் கற்றுக்கொடுப்பதன் மூலம் சமூக நலனில் பங்களிக்க விரும்பினோம். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,” என்றார் மெக்கானிக்கல் பொறியாளரான விக்னேஷ்.
இந்த இளைஞர்களின் முயற்சியை கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
“என் மகள்கள் இருவரும் தினமும் வகுப்பிற்கு செல்கின்றனர். ஆன்லைன் வகுப்புகளில் இவர்களால் பங்கேற்க முடியவில்லை என்பதை நினைத்து வேதனையில் இருந்தேன். என்னைப் போன்ற பெற்றோரின் கவலையைத் தீர்க்க கடவுள்தான் இவர்களை அனுப்பியுள்ளார்,” என்று இந்த கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரவல்லி ’தி லாஜிக்கல் இந்தியன்’ இடம் தெரிவித்துள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA