ராமாயண காலத்திலேயே போலிச் செய்திகள்...? முதல் பலி சீதையா...?
ராமாயணத்தின் கடைசி அத்தியாயத்தில் ராமன் வனவாசம் முடிந்து அயோத்தியா திரும்புகிறான், அரசனாக முடி சூட்டப்படுகிறான். நகரத்தில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என அரசவையில் இருப்போரிடம் விசாரிக்கிறான். ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் ராமனின் மனைவியின் நடத்தையை பற்றி கிசுகிசுப்பதாக சொல்லப்படுகிறது.
ராவணன் சீதையை கடத்திக் கொண்டு போன பிறகு, ராவணனின் அரண்மனையில் நான்கு மாதங்கள் என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியாது. ஊரில் அவருடைய நடத்தை குறித்த விவாதங்கள் நடக்கின்றன்; இப்படியான கறை படிந்த முத்திரையுடன் இருக்கும் ஒருவர் அரசருக்கு அருகில் அரியணையில் அமரக் கூடாது என்கிறார்கள் சிலர்.
இந்த செய்தியை கேட்டதும், சீதையை தன்னுடைய ராஜ்ஜியத்தில் இருந்து விலக்கி வைக்க நினைக்கிறான் ராமன். வனத்திற்கு செல்ல விரும்பும் சீதையை அங்கே கூட்டிப் போகும் லக்ஷ்மணன், ஏன் அவள் இனி அயோத்தியா திரும்ப முடியாது என்பதையும், உலகிற்கு அவள் ராமனின் மனைவி என்று சொல்லக் கூடாது என்பதையும் தெரிவிக்கிறான். இந்த செய்தியை கேட்டு உடைந்து போகும் சீதை, கதறி அழுகிறாள்.
வனத்தில், வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் சீதை, அங்கே ராமனின் மகன்களான லவனையும் குசனையும் பெற்றெடுக்கிறார். தன்னுடைய அடையாளத்தையும், அவர்கள் ராமனின் மகன்கள் என்பதையும் ரகசியமாக வைத்து அவர்களை வளர்க்கிறாள்.
தன்னுடைய ஆசிரமத்தில், வால்மீகி, ராமனை பற்றிய பாடலை ராமாயணமாக எழுதுகிறார். இந்த செய்தி லவன், குசன் வழியே ராமனுக்கு செல்கிறது. மேன்மை என்றால் என்ன, அரசனாக இருப்பது என்றால் என்ன, சீதையை ஊரைவிட்டு விலக்கி வைப்பது எப்படி அவருடைய பொதுமதிப்பை கெடுக்கிறது என்பதை ராமனுக்கு உணர்த்துவதற்காக இது நடந்திருக்கலாம். மரபுப்படி ராமன் ’ராமச்சந்திரன்’ என்று அழைக்கப்படுகிறான். ராமன் சூரியவம்சத்தை சேர்ந்தவனாக இருந்தாலுமே, அவன் சீதையை நடத்தும் விதத்தினால் அவனுடைய மதிப்பு நிலவினால் மறைக்கபடுகிறது என்பதை உணர்த்தவே அவனுடைய பெயரில் ‘சந்திரன்’ வருகிறது என ஒரு பழங்கதை சொல்கிறது.
ராமாயணத்தில் சீதை நாடுகடத்தப்படும் அத்தியாயம் சர்ச்சைக்குரிய ஒன்று. பலர் அப்படி ஒரு அத்தியாயமே ராமாயணத்தில் இல்லை;உண்மையில் ராமன் வனவாசம் முடிந்து அயோத்தியா திரும்பி முடிசூடப்படுவதோடு ராமாயணம் முடிந்தது,இந்த அத்தியாயம் பின்னாளில் வந்த இடைச்செருகல் என்பார்கள். வேறு சிலர், ராமன் தன் தனிப்பட்ட நலனை விடவும் மக்களை பெரிதாக மதித்தான் என்பதை நிறுவ இந்த கதையை முக்கியமானதாக நினைப்பார்கள். இப்போது, நீதி வேண்டி கேள்விகள் கேட்கப்படுகின்றன; போலிச் செய்தியினால் சீதைக்கு பெரும் அநியாயம் நடந்திருக்கிறது. சிந்தனையாலும், மனதாலும் தன் கணவரிடம் பக்தியோடு இருந்தவள் சீதை. ராவணனிடம் இருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே தன்னுடைய நடத்தையை நிரூபிக்க திக்குளிக்க துணிந்தவள் சீதை.
இருந்தாலுமே, நாம் வழக்கமாக பார்க்க தவறும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ராமன் மறுமணம் செய்து கொள்ளவில்லை. அவன் ஒரு அரசனாக இருந்தாலும், அரச சடங்குகளை செய்ய வேண்டும், அரச பரம்பரைக்கு வாரிசு கொடுக்க வேண்டும் எனும் கடமை இருந்தாலுமே ராமன் மறுமணம் செய்யவில்லை. இதன் வழியே ராமன் சீதைக்கு தான் தன்னை அர்ப்பணித்திருந்தான் என்பது தெரிகிறது.
இந்து புராணங்களிலேயே தன்னுடைய மனைவிக்கு உண்மையாக இருக்கும் ஏக பத்தினி விரதனாக இருப்பது ராமன் மட்டும் தான். தனக்கு அருகில் சீதையின் பொன் சிலையை வைப்பதனால், சீதை சிந்தனையாலும் மனதாலும் பத்தினி என்பதை நிறுவுகிறான் ராமன். அவன் அளவில் சீதை தூய்மையானவள். இருந்தாலும், மக்கள் அவளை சந்தேகிப்பதனால், அவளை நாடுகடத்துகிறான். அரச அதிகாரத்தை நிறுவ மதிப்பும் மரியாதையும் முக்கியக் காரணியாக இருப்பதால், அரச விதிகளுக்கு கட்டுப்பட்டு, மக்களை மனதில் வைத்து சீதையை வெளியேற்றுகிறான்.
இது நம் நவீன வாழ்விலும் கூட உண்மை தான். நிறுவனங்களுக்கு தங்களுடைய பொதுமதிப்பு மிக முக்கியம். #MeToo போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு நபரின் தொழில் வாழ்க்கையை முழுதாக நாசம் செய்து விடும். நடந்த குற்றத்தின் உண்மை தன்மையை நிரூபிக்க கடினமாக தர்மசங்கட நிலையும் உண்டாகும்.
சில சமயம், சாட்சியங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டியது கட்டாயமாக இருக்கும். சில சமயம், பாதிக்கப்பட்டவரை யாரும் நம்பமாட்டார்கள் – அவர் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டியதாக இருக்கு. பாலியல் துன்புறுத்தல்கள், குற்றச்சாட்டுகளினால் வரும் குழப்பமான சூழ்நிலைகள் இவை. இதன் விளைவுகள் எப்போதுமே உண்மையா பொய்யா என்பதற்கு நடுவில் சிக்கிக் கொண்டிருக்கும் என்பது மட்டும் மாறவில்லை. குறிப்பாக, குறைந்த சாட்சியம் இருக்கும் நிலையிலும், சாட்சியங்கள் போதுமானதாக இருந்தும் – சம்பந்தப்பட்ட நபர்களின் புகழ், அதிகாரம் மற்றும் பலம் காரணமாக சரியான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலும், இது நடக்கிறது.
ஒரு அரசன், பேரரசனாக இருந்து பிரம்மாண்டமான ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கலாம் – ஆனால், அதற்காக அவன் தன் தனிப்பட்ட வாழ்வில் தியாகங்கள் செய்ய வேண்டிய நிலை அடிக்கடி வரும் என்பதை சொல்வது தான் ராமாயணத்தில் சீதை ராமனிடம் இருந்து பிரியும் அத்தியாயம்.
தன் மக்களின் கருத்து தவறானதாக, அநியாயமானதாக இருந்தாலும், தன் குடும்பத்தை விட மக்களின் கருத்தையே முக்கியமானதாக நினைக்கிறான் ராமன். அது சரி அல்லது தவறு, நீதி அல்லது அநீதி என்பதை குறித்தது அல்ல. அது முதலில் அவன் அரசன் பிறகு தான் ஒருத்திக்கு கணவன் என்பதை குறித்தது.
ஆங்கில கட்டுரையாளர் – தேவ்தத் பட்நாயக் - இந்து புராணக் கதைகளையும், வணிகத்தையும் இணைத்து எழுதுபவர். மருத்துவராக பயின்றவர் ; எழுத்து தனக்கான பாதை என்பதை அறிவதற்கு முன்னர் பதினைந்து வருடங்கள் மருந்தியல் துறையில் இருந்தவர், கலாச்சார ஆலோசகர். | தமிழ்ல்: ஸ்னேஹா
(பொறுப்புத்துறப்பு: கட்டுரையில் உள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தாகும். இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.)