மகன்கள் இருந்தும், பாசமான நாய்க்கு சொத்தை எழுதிவைத்த விவசாயி!
நாய்க்கு சொத்தை எழுதிவைத்த விவசாயி!
வெறும் நாய் தானே! என்று ஒற்றை வார்த்தையுடன் கடந்து போகமுடியாது. பல சமயங்களில் மனிதர்களைக்காட்டிலும், அந்த செல்லப்பிராணிகள், கூடுதலான அன்பையும், விசுவாசத்தையும் காட்டக்கூடியவை. தன்னுடைய முதலாளிக்கு ஒன்னு என்றால் பாய்ந்து சென்று எதிராளியை தாக்கவும், சோகமாக இருக்கும்போது தானும் சாப்பிடாமல் சோகத்தை பகிர்ந்துகொள்ளும் செல்லப்பிராணிகள் மனிதர்களைக்காட்டிலும் நெருக்கமானவர்களாக மாறிவிடுவதுண்டு.
அப்படித்தான் அந்த முதியவருக்கும் இருந்தது. அப்படியில்லாவிட்டால் அவர் தனது சொத்து முழுவதையும் நாய்க்கு எழுதி வைத்திருப்பாரா என்ன?
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு நாய்க்கு சொத்து எழுதிவைத்த விவசாயி குறித்து பார்ப்போம்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தின் பரிபாடா கிராமத்தில் வசிப்பவர் ஓம் நாராயண வர்மா. விவசாயியான இவருக்கு திருமணமாகி, 5 மகன்கள் இருக்கின்றனர். இவர் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். அந்த நாய் இவர் மீது மிகுந்த அன்பு காட்டும். சொல்லப்போனால், மகன்களைவிட அது பாசமாக இருக்கும்.
இதனிடையே, வர்மாவுக்கும் அவரது மகன்களுக்கும் இடையே பல நாட்களாக வாக்குவாதம் நடந்துள்ளளது. மகன்கள் தனது பேச்சை கேட்பதில்லை, எடுத்தெறிந்து பேசுவதால் கோபமடைந்த அவர், தனது செல்ல நாயான ஜாக்கிக்கு சொத்தில் பாதியை, அதாவது 18 ஏக்கர் நிலத்தையும் மீதியை தனது மனைவி சம்பாவுக்கும் எழுதி வைத்துள்ளார்.
மகன்களின் நடத்தைப் பிடிக்காததாலும், தனது பேச்சை அவர்கள் கேட்காததாலும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தனது வாரிசாக நாய் ஜாக்கியை குறிப்பிட்டு உயிலும் எழுதி வைத்துவிட்டார். அவர் எழுதி வைத்த உயிலில் இப்படி குறிபிடப்பட்டுள்ளது.
”என் மீது பாசமாக மற்றவர்களைக்காட்டிலும், எனது செல்ல நாய் ஜாக்கி இருக்கிறது. அதனை பாசமாக வளர்த்து வருகிறோம். என் மனைவி அதனை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்வதால், என் மனைவிக்கும், ஜாக்கிக்கும் எனது சொத்துகளை எழுதி வைத்துள்ளேன். நான் இறந்த பின், என் சொத்துக்களுக்கு சொத்தக்காரர்கள் என் மனைவி சம்பா வர்மாவும், நாய் ஜாக்கியும்தான். அதேபோல நாய்க்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்கள் தான் சொத்தின் அடுத்த வாரிசுகள்,” என்று எழுதி வைத்துள்ளார்.
இது அவரது மகன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.