இனி விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தை கையில் உள்ள ஸ்மார்ட்போன் கொண்டு இயக்கலாம்...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செயற்கைகோள் உதவியுடன் வயலுக்கு சிறந்த நீர் மேலாண்மை செய்வதோடு விளைச்சலிலும் விவசாயிக்கு உதவும் கருவியை கண்டுபிடித்துள்ளது ஈரோட்டைச் சேர்ந்த நிறுவனம்.
விஞ்ஞான அறிவியலின் வளர்ச்சி, முழுவதுமாக சென்றடையாத துறையாக இருப்பது நாட்டின் முதுகெலும்பாக இருந்து பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவும் விவசாயத் துறை. பராம்பரிய விவசாயமுறை நலம் என்றாலும் தற்போதைய பருவநிலை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து 100 சதவிகித விளைச்சலைக் கொடுப்பது கடினமான விஷயம்.
படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு திரும்பி வரும் காலகட்டத்தில் விஞ்ஞான ரீதியிலும் விவசாயத்துறை வளர்ச்சியடையும் விதமான கண்டுபிடிப்புகள் தெம்பூட்டுகின்றன.
வாழை, தென்னை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள்/மரங்கள் நன்கு வளர்ந்து அதிக விளைச்சலை கொடுக்க சொட்டு நீர் பாசன முறையை 2013ம் ஆண்டு ஈரோட்டை அடுத்த பெருந்துறையில் செயல்பட்டு வரும் ’மொபிடெக் வயர்லெஸ் சொல்யூஷன்’ நிறுவனம் (Mobitech wireless solution) அறிமுகம் செய்துள்ளது.
விவசாயி எங்கிருந்தாலும் ஸ்மார்ட் போன் மூலம் வயலுக்கு நீர் பாய்ச்ச வசதியாக எஸ்எம்எஸ் மூலமே மோட்டாரை ஆன்/ஆஃப் செய்யும் தொழில்நுட்பம், வயலுக்கு தன்னிச்சையாக நீர்பாய்ச்சுவதற்கான அப்கிரேடு தொழில்நுட்பங்களை 2010ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் செய்து வருகிறது. இவர்களின் அடுத்த முயற்சியாக 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது தான் செயற்கை நுண்ணறிவு (Airtificial intelligence) மூலம் ஜிபிஎஸ் உதவியுடன் சொட்டு நீர் பாசன முறையில் புதிய புரட்சி.
மொபிடெக் வயர்லெஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ராஜகுமாரன் இந்த கருவி எந்த வகையில் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதை யுவர்ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
“பயிருக்கு தேவையான நீர் கிடைப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகச் சவாலானதாக இருக்கிறது. வாய்க்கால் மடைதிருப்பி நீர் பாசனம் செய்தது மாறி தற்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறைக்கு வந்துவிட்டனர். கிடைக்கும் நீரை பொருத்தே விவசாயம் என்றாகிவிட்ட நிலையில் நீரை வீணாக்காமல் தேவையான அளவை மட்டும் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிப்பதே மொபிடெக் தற்போது அறிமுகம் செய்துள்ள AI–ADIC (Artificial intelligence – Automated Drip irrigation controller) கருவியின் சிறப்பம்சம்.
அமெரிக்காவைச் சேர்ந்த கன்சர்வாட்டர் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது.
விவசாயியின் மோட்டார் அறையில் மொபிடெக்கின் ஏஐடிசி கருவியை பொருத்திவிட்டு வயல்வெளிகளில் வால்வுகள் பொருத்தப்பட்டு சொட்டு நீர் பாசன பைப்புகள் அமைக்கப்படும். கருவிகள் பொருத்தப்பட்ட பின்னர் விவசாயியின் ஸ்மார்ட் போனில் DCON என்ற செயலி பதிவிறக்கம் செய்து தரப்படும்.
செயற்கைகோள் உதவியுடன் ஜிபிஎஸ் மூலம் 24*7 வயல் கண்காணிக்கப்பட்டு எந்த இடத்தில் எவ்வளவு ஈரப்பதம் இருக்கிறது, வயலின் எந்த பகுதிக்கு தண்ணீர் தேவை உள்ளிட்ட தகவல்களை மொபிடெக் கருவிக்கு கிளவுட் சர்வர் மூலம் அளிக்கிறது. இந்தத் தகவல்கள் கிடைத்த பின்னர் தானியங்கி முறையில் மோட்டார் இயங்கத் தொடங்கி தண்ணீர் தேவை இருக்கும் பகுதியில் வால்வ் திறக்கப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது, அந்தப் பகுதிக்கான நீர் தேவை பூர்த்தியான பின்னர் தானாகவே வால்வ் அடைக்கப்பட்டு மோட்டார் இயக்கம் நிறுத்தப்பட்டு அடுத்த பகுதிக்கான வால்வ் தண்ணீர் பாய்ச்ச தயாராகிவிடும்.
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் தகவல் விளைநிலத்தின் உரிமையாளர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் தகவலாக சென்றுவிடுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையிலான சொட்டு நீர் பாசனத்தால் 50 சதவிகித தண்ணீர் சேமிக்கப்படுகிறது. பசித்தால் சாப்பிடுவது போல பயிர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் தண்ணீர் பாய்ச்சப்படும் இதனால் நீர் விரயம், விவசாயியின் நேர விரயம் தவிர்க்கப்பட்டு பயிர்களும் செழிப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுக்கின்றன என்கிறார் ராஜகுமாரன்.
சொட்டு நீர் பாசனத்தை செம்மைப்படுத்தும் விதமான இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் விவசாயி ஒவ்வொரு முறையும் நீர்பாய்ச்சுவதற்காக வயலுக்கு வர வேண்டிய தேவையில்லை.உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தன்னுடைய ஸ்மார்ட் போனில் உள்ள மொபிடெக்கின் டிகான் செயலி மூலமே மும்முனை மின்சாரம் இருக்கிறதா, மோட்டார் இயங்க சரியான அளவில் மின்சாரம் இருக்கிறதா, வால்வுகளில் தண்ணீர் இருக்கிறதா, வயலில் உள்ள அனைத்து பயிர்களுக்கும் தண்ணீர் சென்றடைந்துள்ளதா என்பதை விவசாயி கண்டறிய முடியும்.
இது தவிர விளைநிலத்தை செயற்கைகோள் தொடர்ந்து படம்பிடித்து வருவதால் இமேஜ் ப்ராசசிங் மூலம் பயிர்களின் வளர்ச்சி, பூச்சித் தாக்குதல் இருக்கிறதா என்ற தகவல்களும் முன்கூட்டியே விவசாயிக்கு எஸ்எம்எஸ் அலெர்ட் செய்யப்படுகிறது. இதனால் பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றி விளைச்சலில் பாதிப்பின்றி அதிக மகசூல் பெற வைக்கவும் முடியும் என்கிறார் ராஜகுமாரன்.
மஞ்சள், கரும்பு உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களின் விளைச்சலுக்கு மட்டுமே தற்போது இந்த தொழில்நுட்பமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு, பெருந்துறையை சுற்றியுள்ள விவசாயிகளின் விளைநிலங்களில் பயன்பாட்டில் இருக்கும் இந்த கருவிகளின் மூலம் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன மேலாண்மையோடு 15 சதவிகித அதிக விளைச்சலும் கிடைத்துள்ளதாக கூறுகிறார் ராஜகுமாரன்.
ஏஐ டெக்னாலஜி கருவியை பொருத்த ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும். விவசாய கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைக்காத நிலையில் வேலைப்பளுவை குறைக்கும் இந்த கருவியை பொருத்துவதன் மூலம் கருவிக்காக செலவிட்ட தொகை 10 மாதத்திற்கு பின் விவசாயிக்கு ஆள் கூலி தர வேண்டிய அவசியமில்லாத சேமிப்பே என்கிறார்.
விளைநிலங்களுக்கான நீர்மேலாண்மை மட்டுமின்றி கோடை காலத்தில் வெப்பம் தாங்காமல் இறந்து விடும் கோழிகளின் இறப்பு விகிதத்தை தடுக்கும் தானியங்கி ஸ்பிரிங்க்ளர் சிஸ்டத்தையும் மொபிடெக் அளிக்கிறது. ஸ்பிரிங்க்ளருக்கு செல்லும் தண்ணீர் வால்வுகளை தானியங்கி சிஸ்டம் மூலம் கோழிப்பண்ணை உரிமையாளரின் செல்போன் உதவியுடன் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
2010ம் ஆண்டில் 3 பங்குதாரர்களுடன் தொடங்கிய மொபிடெக் வயர்லெஸ் சொல்யூஷன் நிறுவனம் இன்று தானியங்கி சொட்டு நீர் பாசன முறையில் தொழில்நுட்ப ரீதியில் முதல் இடத்தில் இருக்கிறது.
ரூ. 1 லட்சம் முதலீட்டில் செல்போன் மூலம் மோட்டார் இயக்கும் முறை என்று விவசாயத்துறையில் கால்பதித்து இன்று அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. 2013ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளில் மொபிடெக்கின் அடுத்தடுத்த தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தி பயன்பெற்று வரும் விவாயிகள் மட்டும் மொத்தம் 50 ஆயிரம் பேர்.
இந்தியாவில் உள்ள சொட்டு நீர் பாசனம் சார்ந்த தொழில்களை செய்து வரும் நிறுவனங்கள் மொபிடெக்குடன் கைகோர்க்க விருப்பம் தெரிவித்து வரும் நிலையில் வென்ச்சர் முதலீடாக ரூ. 25 கோடி முதல் ரூ. 30 கோடி வரை பெற்று மொபிடெக் கருவிகளை நாடு முழுமைக்கும் விரிவாக்கம் செய்து விவசாயிகளை கண்ணீர் விட வைக்கும் தண்ணீர் மேலாண்மையை மெருகேற்ற திட்டமிட்டு வருகிறது மொபிடெக் நிறுவனம்.