மத்திய பட்ஜெட் 2019: அறிவிப்புகள் மற்றும் தகவல்கள்!
இடைக்கால பட்ஜெட் உரையின் முதல் பகுதியில் வருமான வரி விகிதம் பற்றி எதுவும் குறிப்பிடாத நிதி அமைச்சர் பியுஷ் கோயல், பிற்பகுதியில், வரி விகித வரம்பை உயர்த்துவதாக அறிவித்து நடுத்தர வர்கத்தினரை நிம்மதி பெருமூச்சு விட வைத்தார்.
"2014 ல் ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைப்பது எங்கள் குறிக்கோளாக இருந்தது,” என நிதி அமைச்சர் வருமான வரி விகிதத்தை அறிவிப்பதற்கு முன் குறிப்பிட்டார்.
2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் சரியான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு கிடைக்கக் கூடிய வரிச்சலுகைகளை பார்க்கலாம்:
- ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் முழு வரி விலக்கு பெறுவார்கள்.
- ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களும், வரி சேமிப்பு முதலீட்டை மேற்கொண்டால் வரி விலக்கு பெறுவார்கள். பொருந்தக்கூடிய விலக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், ரூ.6.5 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களும் கூட வரி செலுத்த வேண்டியிருக்காது. தேசிய பென்ஷன் திட்டம், மருத்துவ காப்பீடு, வீட்டுக்கடன் மீதான வட்டி ஆகியவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
“வீட்டுக்கடனுக்கான வட்டி மீதான ரூ.2 லட்சம் வரையான விலக்கு, கல்விக்கடன் மீதான விலக்கு, தேசிய பென்ஷன் திட்ட பங்களிப்பு, மூத்த குடிமகன்களுக்கான மருத்துவ செலவுகள் போன்றவை மூலம், அதிக வருமானம் பெறுபவர்கள் கூட வரி செலுத்த வேண்டியிருக்காது,” என நிதி அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை , ஊதியம் பெறும் தனிநபர்கள், சிறு வர்த்தகர்கள், மூத்த குடிமகன்கள் உள்ளிட்ட 3 கோடி நடுத்தர வரி செலுத்துபவர்களுக்கு ரூ.18,500 கோடி அளவுக்கு பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிடிஎஸ் மற்றும் இதர மாற்றங்கள்
- வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் செய்யப்பட்ட டெபாசிட்களுக்கான வட்டி வருமானம் மீதான டிடிஎஸ் பிடித்தன், தற்போதைய ரூ.10,000 ல் இருந்து ரூ.40,0000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பலரும் வங்கிகள் மற்றும் அஞ்சலங்களில் வைப்பு நிதிகளில் டெபாசிட் செய்வதால், இது வரி செலுத்துபவர்களுக்கு மிகுந்த ஆசுவாசம் அளிக்கக் கூடியதாக அமைகிறது.
- இடைக்கால பட்ஜெட்டில், ஸ்டாண்டர்ட் டிடெக்ஷன் ரூ.40,000 ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 3 கோடி சம்பளதாரர்கள் மற்றும் பென்ஷன்தாரர்கள் இதனால் பயன்பெறுவார்கள்.
- வாங்கக் கூடிய விலைப்பிரிவில் மேலும் வீடுகளை சாத்தியமாக்குவதற்காக, வருமான வரிச்சட்டத்தின் 80 –ஐபிஏ பிரிவின் கீழான பலன் மேலும் ஒராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2020 மார்ச் வரை அனுமதி பெறும் வீட்டு திட்டங்களுக்கு பொருந்தும்.
- வீடுகளை வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில், தனிநபர் அல்லாதவர்களுக்கான வாடகை வருமானம் மீதான டிடிஎஸ் அளவு தற்போதைய ஆண்டுக்கு ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது சுய பயன்பாடு வீட்டிற்கான வாடகை மீதும் வரிவிலக்கை உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சுய பயன்பாடு வீடு இருந்தால் இந்த வரி பொருந்தும். வேலை, குழந்தைகள் கல்வி, பெற்றோர் நலன் போன்ற காரணங்களுக்காக இரண்டு சுய பயன்பாடு வீடு கொண்டவர்களுக்கு இது பயன் தரும்.
மேலும் அசையா சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயம் ரூ.2 கோடியை இரண்டு வீடுகளில் இப்போது முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஓராண்டுக்குள் இந்த தொகையை முதலீடு செய்தால் வரி விலக்கு பெற முடியும் எனும் நிலை உள்ளது.
"பிரதான வரி விஷயங்கள் வழக்கமான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்றாலும், வரி செலுத்தும் நடுத்தர வர்கத்தினர், ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமகன்களுக்கு, ஆண்டின் துவக்கத்திலேயே வரிகள் பற்றிய தெளிவு தேவை,” என அமைச்சர் இது பற்றி குறிப்பிட்டார்.
இது வெறும் இடைக்கால பட்ஜெட் மட்டும் அல்ல, நாட்டின் வளர்ச்சிப்பாதையும் பயணம் இது. நாம் கண்டு வரும் மாற்றங்கள் அனைத்தும், நாட்டு மக்களின் ஈடுபாட்டல் சாத்தியமாவது. அவர்களுக்கே இந்த பெருமை சேர வேண்டும். எங்கள் அரசின் காலத்தில் வளர்ச்சி என்பது வெகுஜன இயக்கமாகி இருக்கிறது எனக்கூறிய அமைச்சர் தன் உரையை நிறைவு செய்தார்.
தமிழில்: சைபர்சிம்மன்