தமிழக வரலாற்றில் முதன்முறை: 11 மாவட்டங்களுக்கு பெண் ஆட்சியர் நியமனம்!
தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண் மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு அதிரடித் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதில் ஒருகட்டமாக மாவட்ட நிர்வாகத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், தொடர்ந்து பல மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். முந்தைய ஆட்சியில் இருந்த எல்லா ஆட்சியர்களும் மாற்றப்பட்டு, புதிய ஆட்சியர்கள் பதவி ஏற்றிருக்கிறார்கள்.
கடந்த சில தினங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 93 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னை உட்பட 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால், இம்முறை பெண்கள் பலருக்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது தான்.
இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகிக்காமல் வேறு துறைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பல திறமையான பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக தற்போது மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், 11 மாவட்ட ஆட்சியர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
11 பெண் ஆட்சியர்களின் விபரம்:
சென்னை - விஜயராணி
அரியலூர் - ரமண சரஸ்வதி
தருமபுரி - திவ்யதர்ஷினி
காஞ்சிபுரம் - ஆர்த்தி
மயிலாடுதுறை - லலிதா
நாமக்கல்- ஸ்ரேயா பி சிங்
பெரம்பலூர் - வெங்கட பிரியா
புதுக்கோட்டை - கவிதா ராமு
இராமநாதபுரம் - சந்திரலேகா
நீலகிரி- இன்னொசென்ட் திவ்யா
திருவாரூர் - காயத்திரி கிருஷ்னன்
மேற்குறிப்பிட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் இளவயது அதிகாரிகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தாங்கள் பதவி வகித்த துறைகளில் தங்களது திறமையை நிரூபித்து பாராட்டுகளைப் பெற்றவர்கள்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே ஊரடங்கில் சரிந்த மக்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, தமிழக அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான், துரிதமாக செயல்படும் வகையில் வயது குறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரிகளை பல மாவட்டங்களுக்கு ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இத்தனை பெண் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது முதன்முறை என்பதால், இது மக்களிடையே அதிக கவனம் பெற்றிருக்கிறது.
புதுமை மாவட்டமான புதுக்கோட்டை
இது ஒருபுறம் இருக்க, பெண் விடுதலைப் போராளியும், முதல் இந்திய பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரில், மாவட்ட ஆட்சியர் முதல் மாவட்டக் கல்வி அலுவலர் வரை பெண் ஆளுமைகளே முக்கியப் பதவி வகிப்பதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதுக்கோட்டை ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி மாற்றப்பட்டு, மற்றொரு பெண் ஆட்சியர் கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, எஸ்பியாக நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றுள்ளார். கோட்டாட்சியராக அபிநயா, டிஎஸ்பியாக லில்லி கிரேஷ் ஆகியோரும் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஏற்கெனவே காவிரி - குண்டாறு இணைப்புத் திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக ரம்யாதேவி, காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளராக பி.கீதா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக மு.பூவதி, சிறை காவல் கண்காணிப்பாளராக ருக்மணி பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக த.விஜயலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலராக ரேணுகா, மாவட்ட தீயணைப்பு அலுவலராக பானுப்பிரியா, டாஸ்மாக் மாவட்ட மேலாளராக வசுந்தரா தேவி, மாவட்ட சுகாதார துணை இயக்குநராக பா.கலைவாணி, மாவட்ட தொழில் மைய மேலாளராக திரிபுரசுந்தரி போன்ற பெண்களே பணியில் உள்ளனர்.
மேலும், கூட்டுறவு இணைப் பதிவாளராக உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநராக பிஜெ.ரேவதி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநராக டி.கே.செண்பகவள்ளி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக உம்மல் கதீஜா, நபார்டு உதவி மேலாளராக ஜெயஸ்ரீ, அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வராக புவனேஸ்வரி பணிபுரிகின்றனர்.
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கேபெண் இளைப்பில்லை காண் என கும்மியடி,” என பாரதி கண்ட புதுமை மாவட்டமாக புதுக்கோட்டை முன்னுதாரணமாகி இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.