'இனி மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம்' - பிரதமர் மோடி உரையில் முக்கிய அறிவிப்புகள்!
மாநிலங்கள் இனி செலவு செய்ய தேவையில்லை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் இன்று உரையாற்றினார். அதில்,
"கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா முன்களத்தில் நின்று போராடி வருகிறது. உலகத்தின் பல நாடுகள் கொரோனா நோய் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத, உலக மக்கள் சந்தித்த மிகப்பெரிய பாதிப்பு இது. கொரோனா நோய் தொற்றால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேபோல் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததைக் கண்டோம். சூழலை சமாளிக்க மருத்துவ வசதியை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறோம். நமது ஒவ்வொருவரின் முயற்சியால் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு சென்றோம்.
கொரோனாவை ஒழிக்க முகக்கவசம், ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்திருக்கிறோம். மேலும், தடுப்பூசியை கொண்டுவந்து லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறோம். வெளிநாடுகளிலிருந்தும், நமது நாட்டிலும் தேவையான மருந்துகள் அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறோம்.
தடுப்பூசி என்னும் ஆயுதம் கொண்டு இனி கொரோனாவை வீழ்த்துவோம். தடுப்பூசி செலுத்தும் பணிகளைக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே தொடங்கி விட்டோம். எந்த நாட்டிலும் இல்லாத அளவு, இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் இரண்டு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இதுபோக மூன்று தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளோம். விரைவில் அதுவும் விநியோகிக்கப்படும். இதற்கிடையே, 3 தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் இருக்கின்றன.
அடுத்தடுத்த நாட்களில் கொரோனோ தடுப்பூசிகளை விநியோகம் செய்யும் பணி அதிகப்படுத்தப்படும். தடுப்பூசி போல் கொரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் சந்தைக்கு வரும். தடுப்பூசி தட்டுப்பாடு தீர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும். மிகக் குறுகிய சமயத்தில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து மக்களுக்கு செலுத்தி உள்ளது இந்தியாவின் மிகப்பெரிய சாதனை. கொரோனாவில் இருந்து மக்களைக் காத்து வரும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கிறோம். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முன்னரே தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிவர்கள் முன்களப் பணியாளர்கள்.
மாநிலங்கள் தாங்களும் தடுப்பூசியை தயாரிப்பது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இனி கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசு முழுமையாக வழிநடத்தும். தடுப்பூசி விநியோகம் தொடர்பாக இனி மத்திய அரசு முடிவெடுக்கும். அதன்படி,
“இனி மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று இனி முற்றிலும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்காக மாநிலங்கள் இனி செலவழிக்க வேண்டி வாராது. இதற்கான புதிய தடுப்பூசி கொள்கை வரும் ஜூன் மாதம் 21 -ம் தேதி அமலுக்கு வரும்.”
மேலும், வரவுள்ள தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு, தானிய விநியோகம் செய்யப்படும், என்று அறிவித்துள்ளார்.