பைக்கில் கரும்பலகையுடன் சென்று மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்!
சத்தீஸ்கரின் கொரியா மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரான ருத்ரா ரானா தனது இருசக்கர வாகனத்தில் கரும்பலகையும் குடையும் பொருத்தியவாறே பயணித்து மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று நம் வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றியமைத்துள்ளது. இந்த நோய் பரவலைத் தடுக்க மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளதால் இன்று அனைத்து பொருட்களும் சேவைகளும் வீட்டிற்கே கொண்டு சேர்க்கப்படுகிறது.
காய்கறி, அத்தியாவசியப் பொருட்கள் எனத் தொடங்கி வீட்டுக்குள்ளேயே பணிபுரிவது, பாடம் கவனிப்பது என மக்களின் உலகம் சுருங்கிவிட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வரும் நிலையில் பல மாணவர்கள் இந்த வசதி கிடைக்காமல் கஷ்டப்படுவதையும் பார்க்கமுடிகிறது.
இந்தச் சூழலை நன்குணர்ந்தார் சத்தீஸ்கரின் கொரியா மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரான ருத்ரா ரானா. இவர் சற்றும் தாமதிக்காமல் களமிறங்கினார். தன் இருசக்கர வாகனத்தை எடுத்தார். அதில் ஒரு கரும்பலகையை இணைத்துக்கொண்டு பயணம் செய்கிறார். ஆங்காங்கே மாணவர்களுக்கு அந்த கரும்பலகையின் உதவியுடன் வகுப்பெடுத்து வருகிறார். ஏஎன்ஐ-இடம் அவர் கூறும்போது,
“வெகு சில மாணவர்களால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடிகிறது. எனவே இந்த முறையில் வகுப்பெடுக்கிறேன். எந்தவித தொடர்பும் இல்லை என்பதால் அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படுகிறது. மாணவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் அவர்களுக்கான பாடங்களை வீடுகளுக்கே கொண்டு சேர்க்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு அவர்களது பாடங்கள் மட்டுமல்லாது கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார் இந்த ஆசிரியர். இவரது வாகனத்தில் ஒரு குடையையும் பொருத்தியுள்ளார்.
“புதிய முறையில் வகுப்பெடுக்கப்படுவதை இந்தக் குடை உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி வெயில், மழை போன்றவற்றில் இருந்து என்னை பாதுகாக்கவும் உதவுகிறது,” என்றார்.
இவரது முயற்சியை உள்ளூர் மக்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர். இவரது வகுப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வமாக வருகின்றனர். இவரது மாணவர்களில் ஒருவரான ஷில்ப் புதிய முறையில் நடைபெறும் இந்த வகுப்புகள் குறித்து கூறும்போது,
“இந்த வகுப்புகள் மூலம் நிறைய கற்றுக்கொள்கிறோம். எங்கள் சந்தேகங்களை ஆசிரியர் தீர்த்துவைக்கிறார். இந்த கற்றல் முறை சுவாரஸ்யமாக உள்ளது,” என்கிறார்.
பள்ளிக்கும் செல்ல முடியாமல் ஆன்லைன் வகுப்புகளிலும் பங்கேற்க முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்த ஆசிரியரின் செயல் வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.
தகவல் உதவி: இந்துஸ்தான் டைம்ஸ்