டிவிட்டர் புதிய சிஇஓ பராக் அக்ரவாலின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஊதியத்தை விட பங்குகளை அதிகம் பெறும் பராக் அகர்வால்!
ஃபேஸ்புக்கிற்கு பிறகு முன்னணி சமூக ஊடக நிறுவனமாக இருப்பது டிவிட்டர். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பல ஆண்டுகளாக இருந்த ஜாக் டோர்ஸி சமீபத்தில் பதவி விலகினார். இதையடுத்து இந்திய வம்சாவளியான பராக் அக்ரவால் டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.
2011ம் ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த பராக், முதலில் சிடிஓவாகவும், இப்போது சிஇஓ-வாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
தற்போது புதிய சிஇஓவாக பொறுப்பேற்றுள்ள பராக் அக்ரவாலின் ஊதியம் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
பராக் அக்ரவாலுக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியம் கிடைக்கும் எனத் தெரிகிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.7½ கோடி ஆகும். இந்த ஊதியம் தவிர போனஸ் உள்ளிட்ட பிற சலுகைகளும் அவருக்கு கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, 12.5 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனப் பங்குகளையும் அக்ரவால் பெற இருக்கிறார். இதனை 16 காலாண்டுகளாக அதாவது 4 வருடங்களுக்குப் பெற இருக்கிறார் என டிவிட்டர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இணை நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்ஸி டிவிட்டர் நிறுவனத்தின் 2.5 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். என்றாலும் 2018ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு வெறும் 1.4 டாலர் மட்டுமே சம்பளமாகப் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சுந்தர் பிச்சை (கூகுள்), சத்யா நாதெல்லா (மைக்ரோசாப்ட்), அரவிந்த் கிருஷ்ணா (ஐபிஎம்), சாந்தனு நாராயண் (அடோப் சிஇஓ) மற்றும் ரங்கராஜன் ரகுராம் (விஎம்வேர்) ஆகியோரை போன்று அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் சிஇஓ-வாக பராக் அக்ரவாலும் இடம்பெற்றுள்ளார்.
இதில், ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை 281 மில்லியன் டாலரும் (இந்திய மதிப்பில் ரூ.2,107 கோடி), மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா 43 மில்லியன் டாலரும் (இந்திய மதிப்பில் ரூ.322 கோடி), அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் 39.2 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.292 கோடி) டாலரும் ஆண்டுக்கு ஊதியம் பெற்று வருகிறது. இவர்களுடன் ஒப்பிடுகையில் டிவிட்டர் நிறுவன சிஇஓவாக பொறுப்பேற்றுள்ள பராக் அகர்வாலின் சம்பளம் பல மடங்கு குறைவு ஆகும்.
தொகுப்பு: மலையரசு