மெய்நிகர் வடிவில் இறந்த மனைவியை கண்ட கணவர்: கண்ணீர் மல்கிய நெகிழ்ச்சி சம்பவம்!
இறந்த மனைவியை விஆர் மூலம் சந்தித்த கொரிய கணவர்.
நமக்குப் பிடித்தமானவர்கள் உலகத்தைவிட்டு பிரியும்போது, தனித்து விடப்படுகிறோம். பிரிந்தவர்களை எண்ணி தவிக்கிறோம். மீண்டும் அவர்களைக் காண முடியாதா என ஏங்குகிறோம்.
அவர்களை ஒருமுறை பார்த்துவிட்டால் போதும் என்ற தவிப்பை டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக நிறைவேற்றியுள்ளார் தென்கொரியாவைச் சேர்ந்தவர். உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அன்பு எல்லாவற்றையும் செய்ய வைக்கும்.
தென்கொரியாவைச் சேர்ந்தவர் கிம் ஜாங்-சூ. 51வயதான இவருக்கு 5 குழந்தைகள். தன் மனைவி உடல்நலக்குறைவால் இறந்துவிடவே கடும் வேதனைக்குள்ளானார் கிம். இறந்துபோன தன் மனைவியை நேரில் காண வேண்டும் என்று ஏங்கி தவித்த அவர், இறுதியாக நாடியது விர்ச்சுவல் ரியாலிட்டியை.
ஆம்! விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலமாக இறந்துபோன தன் மனைவியை சந்தித்துள்ளார். பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுத அவர், மனைவியின் கரங்களை பற்றிக்கொண்டார்.
அந்த நாட்டின் தொலைகாட்சி ஒன்றில் ஆவணப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக உயிர்நீத்த தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திக்க சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக வழி செய்கிறது அந்த நிகழ்ச்சி.
அந்த ஆவணப்படத்தின் துணையுடன், நாள்பட்ட நோயினால் உயிர்நீத்த தன் மனைவியை சந்தித்துள்ளார் கிம் ஜாங்-சூ. அவரை பார்த்ததும் அவரது கண்களில் நீர் ததும்பியுள்ளது. அவரது உருக்கம் அந்த ஆவணப்படத்தை பார்த்த எல்லோரது மனதையும் உருகச் செய்துள்ளது.
சுமார் ஆறு மாத காலம் இந்த ஆவணப்படத்தை தயாரிக்க தேவைப்பட்டதாகச் சொல்கிறது படக்குழு. அந்த ஆவணப்படத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டியின் துணையோடு கிம் தன் மனைவியுடன் நடனமும் ஆடியுள்ளார். அதை அவரது பிள்ளைகளும் பார்த்தனர். தங்கள் பெற்றோரின் மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் அந்த தருணத்தை புரிந்துகொண்டனர். அவர்கள் கண்களில் கண்ணீர் ததும்பியது.
“அப்பா எப்போதுமே அம்மாவுக்கு தன் அன்பை முத்தங்கள் மூலமாக வெளிப்படுத்துவார். அம்மா நோய் பாதிப்புக்கு ஆளான போதும் அம்மாவை அக்கறையுடன் பார்த்துக் கொண்டார். அம்மாவின் முடியெல்லாம் கொட்டிய போதும் கூட ‘அழகி’ என சொல்வார் அப்பா,” என்கிறார் இரண்டாவது மகள் ஜாங்-யன்.
இந்த வீடியோ யூடியூப் தளத்தில் மட்டுமே 8 லட்சம் வியூஸ்களை கடந்துள்ளது.
விர்சுவல் ரியாலிட்டி வழியாக தன் மனைவியை, கிம் ஜாங்-சூ பார்ப்பதற்கு அவரது குழந்தைகள் ஆதரவாக இல்லை. அதை அவர்கள் அனுமதிக்கவில்லை. காரணம், ஏனென்றால் "மீண்டும் இணைவது" தங்கள் தாயின் நினைவுகளை மீண்டும் கொண்டு வரக்கூடும் என்று அவர்கள் நினைத்தார்கள், இதனால் இழப்பு முன்பை விட அவர்களுக்கு "வேதனையாக" இருந்தது.
இருப்பினும், அவர்களின் தந்தை ‘இது எனது கடைசி ஆசை’ என்று சொன்னபோது, அவர்கள் அவரை ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க அனுமதித்தனர்.
இதெல்லாம் சாத்தியமா என்று ஒருகாலத்தில் நினைத்திருந்தோம். இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் எல்லாமே சாத்தியம் தான்!
தொகுப்பு: மலையரசு