‘குளு, குளு’ ஐஸ்கிரீம் வணிகத்தின் பின்னணியில் ‘சூடான’ ஏற்ற இறக்கங்கள் – Pabrai’s பிராண்ட் மீண்டெழுந்த கதை!
1980-களில் அனுவ்ராத், துலிகா தம்பதி தொடங்கிய ஐஸ்கிரீம் வணிகம் எதிர்பாராத வகையில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்தபோதும் தனித்துவமான சுவையை அறிமுகப்படுத்தி மக்களின் விருப்ப பிராண்டாக மாறியுள்ளது.
இந்தியாவில் ஐஸ்கிரீம் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்தியர்கள் ஐஸ்கிரீம் பிரியர்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
2021-ம் ஆண்டில் 16,520 கோடி ரூபாயாக இருந்த ஐஸ்கிரீம் சந்தையின் மதிப்பு 2027-ம் ஆண்டில் 17.69 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 43,620 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக Imarc Group தெரிவிக்கிறது.
Kwality Wall’s, Lakeview Milk Bar, Amul, Mother Dairy போன்ற பழமையான பிராண்டுகள் மட்டுமல்லாமல் இன்று Get-a-Whey, The Brooklyn Creamery, Noto போன்ற புதிய நிறுவனங்களும் வகை வகையான ஐஸ்கிரீம்களை விருந்தாக படைக்கின்றன. மக்களுக்கு எந்த பிராண்டில் எந்த சுவையை வாங்குவது என்று குழம்பிப்போகும் அளவிற்கு ஏராளமான சாய்ஸ் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால், 1980-களில் இப்படி இல்லை. தம்பதிகளான அனுவ்ராத், துலிகா பரபி இருவரும் அந்த சமயத்தில் கொல்கத்தாவின் ரசல் ஸ்ட்ரீட் பகுதியில் ஐஸ்கிரீம் பார்லர் திறக்க முடிவு செய்தார்கள். அப்போது பிரபல பிராண்ட் Kwality நிறுவனத்துடன் Flury’s கடுமையாகப் போட்டி போட்டுக்கொண்டிருந்தது.
இன்று அனுவ்ராத், அவரது மனைவி துலிகா, மகன்கள் குணால், நிஷாந்த் ஆகியோர் இணைந்து
நடத்தி வருகிறார்கள்.3 லட்ச ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2022 நிதியாண்டில் 14.9 கோடி ரூபாய் சந்தை மூலதனம் (market capitalization) கொண்டுள்ளது.
ஏற்ற இறக்கம்
அனுவ்ராத், துலிகா இருவரும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டதாரிகள். ஒரு கஃபே அல்லது ரெஸ்டாரண்ட் திறக்கவேண்டும் என விரும்பினார்கள். ஆனால், இந்தப் பிரிவில் பணப்புழக்கம் அதிகம் இருப்பதைப் புரிந்துகொண்டு இந்த எண்ணத்தைக் கைவிட்டனர். 1984-ம் ஆண்டு ஒரு பிரபல பிராண்டின் சில்லறை வர்த்தக ஸ்டோராக ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றைத் திறந்தார்கள்.
“ஐஸ்கிரீம் பார்லர் திறக்க திட்டமிட்டால் அந்த யோசனையை செயல்படுத்தி வணிகத்தை நடத்த அதிக அவகாசம் தேவைப்படாது. ரெஸ்டாரண்ட் அல்லது கஃபேக்களுடன் ஒப்பிடுகையில் குறைவான நேரத்திலேயே தொடங்கிவிடலாம்,” என்கிறார் அனுவ்ராத்.
இரண்டாண்டுகளில் சப்ளையர் பிராண்டுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சொந்தமாக சிறிய தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கி ஐஸ்கிரீம் தயாரிப்பை ஆரம்பித்தார். இந்த பிராண்டின் பெயர் Tulika’s.
அதுமட்டுமல்ல கேக், பேட்டீஸ், சாண்ட்விச் போன்றவற்றையும் மெனுவில் இணைத்துக் கொண்டார். படிப்படியாக விரிவடைந்த இந்நிறுவனத்தில் அடுத்த பத்தாண்டுகளில் 35-40 ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.
1990-களில் ஐஸ்கிரீம் தயாரிப்புத் திறனை விரிவுப்படுத்த இத்தாலியிலிருந்து ஃப்ரீசர்களை இறக்குமதி செய்தனர்.
1997-ம் ஆண்டு இயந்திரங்கள் இடைவிடாமல் 24X7 இயங்கியபோதும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனது. எனவே, இந்நிறுவனம் ஓராண்டில் ஒரு மில்லியன் லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிக்கும் திறனுடனும் அரை மில்லியன் லாலீஸ் மற்றும் சாக்கோ பார் தயாரிக்கும் திறனுடனும் மற்றொரு தொழிற்சாலையை அமைத்தது. இதற்காக அனுவ்ராத் SIDBI வங்கியில் 95 லட்ச ரூபாய் கடன் வாங்கினார்.
எல்லாம் நல்ல விதமாக நடந்துகொண்டிருக்க, திடீரென்று நிலைமை மாறியது. 1990-களில் கொல்கத்தாவில் Kwality Wall’s, Flury’s போன்ற பிராண்டுகளுடன் Metro Dairy, Vadilal, Rollick, Amul போன்ற பிராண்டுகளும் இணைந்துகொண்டன.
இவற்றில் சில நிறுவனங்கள் Tulika’s விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு தயாரிப்புகளை வழங்கத் தொடங்கின. இந்தப் போட்டி காரணமாக விலையைக் குறைக்கவேண்டிய நிலை வந்தது. வருவாயும் குறைந்தது. 2004-ம் ஆண்டிற்கு முன்பு வரை 4 கோடி ரூபாயாக இருந்த வருவாய் 2006 நிதியாண்டில் 3.7 கோடி ரூபாயாகவும் 2007 நிதியாண்டில் 3.2 கோடி ரூபாயாகவும் குறைந்தது.
வருவாய் குறைந்துபோனதால் வேலையாட்களுக்குக் கொடுக்க வேண்டிய போனஸ் தொகையும் 20 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து யூனியன் உருவாக்கி கொதித்து எழ பிரச்சனை மேலும் சிக்கலானது.
அனுவ்ராத்தின் மேலாளரை யூனியன் ஆட்கள் சேர்ந்து தாக்கியிருக்கின்றனர். இதனால் அவர் 17 நாட்கள் வரை ஐசியூ-வில் இருந்தார் என்கிறார் அனுவ்ராத்.
“எனக்கு மன அழுத்தம் அதிகமானது. என் மகன் குணால் அப்போது பெங்களூருவில் Ernst and Young நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் எனக்கு உதவுவதற்காக கொல்கத்தாவிற்கு மாற்றலாகி வந்தார்,” என்கிறார் அனுவ்ராத்.
கடன் சுமை அதிகரித்தது. கிட்டத்தட்ட 1.15 கோடி ரூபாய் வரை கடன். இதுதவிர 27 சதவீத வட்டித் தொகை வேறு சேர்ந்துகொண்டே போனது. இதற்கு மேல் நிலைமையை சமாளிக்க முடியாது என்பது குடும்பத்தினருக்குப் புரிந்தது. 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வணிக செயல்பாடுகள் அனைத்தும் மொத்தமாக மூடப்பட்டன.
புது வெளிச்சம்
வணிகம் மூடப்பட்டாலும்கூட அனுவ்ராத் நம்பிக்கையைக் கைவிடவில்லை. மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க முடிவு செய்தார். பல்லிகுங்கே பகுதியில் புதிய முயற்சியாக Pabrai’s தொடங்கப்பட்டது. Tulika’s மூடப்படுவதற்கு முன்பு வெல்லத்தின் சுவையில் (Nalen Gur) ஐஸ்கிரீம் தயாரித்து வந்தார். இதுபோன்ற புதிய சுவைகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனவே அந்த குறிப்பிட்ட சுவைகளை மறுஅறிமுகம் செய்தார்.
தெற்கு கொல்கத்தாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள Pabrai’s வென்னிலா, சாக்லேட், மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட 50 வகையான ஐஸ்கிரீன் சுவைகளை வழங்குகிறது. மேலும், நேச்சுரல் சாக்லேட், நேச்சுரல் வென்னிலா, ரோஸ் பெட்டல் உள்ளிட்ட சுகர்-ஃப்ரீ ஐஸ்கிரீம்களை வகைகளை விற்பனை செய்கிறது.
Nalen Gur, Calcutta Meetha Paan, Kesar Rabri Malai, Elaichi Badam, Wasabi போன்றவை Pabrai’s தனித்துவமான அடையாளங்களாக விளங்குகின்றன.
2011-ம் ஆண்டு Pabrai’s ஃப்ரான்சைஸ் மாதிரியை கையிலெடுத்தது. கொல்கத்தாவில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு அவுட்லெட்கள் செயல்பட்டு வந்த நிலையில் மும்பை, மைசூரு, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் ஃப்ரான்சைஸ் மாதிரியில் செயல்படத் தொடங்கியது. ஒரு அவுட்லெட்டிற்கு 50,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. விற்பனையும் விரிவுபடுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்தக் கட்டணம் 2 லட்ச ரூபாய், 3.5 லட்ச ரூபாய் என அதிகரித்து 2018-ம் ஆண்டு ஒரு ஃப்ரான்சைஸ் கட்டணம் 6 லட்ச ரூபாயை எட்டியது. ஆனால் மீண்டும் ஒரு தொய்வு ஏற்பட்டது.
“2019-ம் ஆண்டு மந்தநிலை ஏற்பட்டதால் ஃப்ரான்சைஸ் கட்டணத்தை 4.5 லட்ச ரூபாயாகவும் அதைத் தொடர்ந்து 3.5 லட்ச ரூபாயாகவும் குறைத்தோம். பெருந்தொற்று சமயத்தில் 1.5 லட்ச ரூபாயாக நிர்ணயித்தோம்,” என்கிறார்.
பெருந்தொற்று சமயத்தில் கிட்டத்தட்ட 20 ஸ்டோர்கள் வரை மூடப்பட்டன. தற்சமயம் Pabrai’s பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, கௌஹாத்தி போன்ற நகரங்களில் 29 ஸ்டோர்களைக் கொண்டுள்ளன.
வருங்காலத் திட்டங்கள்
SIDBI கடன் அடைக்கப்பட்டு தொழிற்சாலை மூடப்பட்டுள்ளபோதும் Tulika’s ரெஜிஸ்ட்ரேஷன் இன்னமும் லிக்விடேட் செய்யப்படவில்லை என்கிறார் அனுராக்.
Prabai’s பிராண்டானது அவரது மகன்களின் பெயரில், K N & Co என்கிற பெயரின்கீழ் பார்ட்னர்ஷிப் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருந்தொற்று பரவலுக்கு முன்பு Pabrai’s 30 சதவீத லாபத்துடன் விற்பனை செய்து வந்தது. 2021 நிதியாண்டில் லாபம் இல்லாதபோதும் 2022 நிதியாண்டில் ஓரளவிற்கு மீண்டுள்ளது.
ஃப்ரான்சைஸ் கட்டணத்தை மீண்டும் படிப்படியாக உயர்த்தி வருவதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. 1.5 லட்ச ரூபாயாக இருந்த கட்டணம் 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்தனை கால வணிக அனுபவத்தில் வணிகத்தைப் பற்றிய தன்னுடைய கண்ணோட்டம் மாறியிருப்பதாக அனுவ்ராத் தெரிவிக்கிறார். லாபத்தைக் காட்டிலும் வணிக அளவை அதிகப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் என்பதே தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய படிப்பினை என்கிறார்.
Prabai’s பல்வேறு மூலப்பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும் தயாரிப்புப் பணிகள் முழுவதும் நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலை மாதந்தோறும் 30,000 லிட்டர் வரை தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது. மற்றொரு தொழிற்சாலையும் தயாராகி வருகிறது.
இந்த நிதியாண்டில் மேலும் ஐந்து ஸ்டோர்கள் திறக்கவும் கூடுதலாக 14 ஃப்ரான்சைஸ் ஸ்டோர்களை இணைத்துக்கொள்ளவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா