மத ரீதியாக பரவிய பொய்யான தகவலை எதிர்த்து iD Fresh நிறுவனம் சைபர் கிரைமில் புகார்!
இட்லி, தோசை மாவு உள்ளிட்ட உணவு வகைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐடி பிரெஷ் தனக்கு எதிராக வாட்ஸ் அப்பில் பரவி வரும் பொய்ச்செய்தியை எதிர்த்து புகார் அளித்துள்ளதாக பிசி முஸ்தபா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபல இட்லி-தோசை மாவு நிறுவனம் iDFresh பற்றி தகவல் ஒன்று கடந்த சில தினங்களாக வாட்ஸ்-அப்’ல் வேகமாக பரவி வந்தது. இது வகுப்புவாதத்தைத் தூண்டும் விதமாகவும், மதரீதியாக எதிர்வினையாற்றும் வகையிலும் அமைந்திருந்தது.
வாட்ஸ்-அப்பில் பயனுள்ள தகவல்கள் பகிரப்படுவதோடு, அவ்வப்போது வந்ததிகள் மற்றும் பொய்ச்செய்திகளும் வலம் வருவதுண்டு. அண்மையில், உணவுத் தயாரிப்பு நிறுவனமான ஐடி பிரெஷ் தொடர்பாக இப்படி ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் பரவலாக பகிரப்பட்டது. அதில்,
“ஐடி ப்ரெஷ் நிறுவனம் இட்லி மாவு தயாரிக்க, பசு மாடு எலும்புகள், கன்றுக்குட்டி குடற்சவ்வு ஆகியவற்றை பயன்படுத்துவதாகவும், இந்நிறுவனத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவதாகவும்,” அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மெசேஜ் பல க்ரூப்களிலும், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் வேகமாக பகிரப்பட்டது.
ஐடி ப்ரெஷ் நிறுவனம் தனது உணவு பொருட்கள் தயாரிப்பில் விலங்கு பொருட்களை பயன்படுத்துவதாகக் கூறும் தவறான, ஆதாரமற்ற தகவல் அடங்கிய வாட்ஸ் அப் செய்தியை ஒரு சில வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர். இந்த செய்தி பரவும் வேகம் தீவிரமாக இருப்பதால் மத காழ்ப்புணர்ச்சி கொண்ட இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிப்பது அவசியம் என உணர்வதாக நிறுவனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இது குறித்து, iDFresh நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவரான பிசி முஸ்தபா இதற்கு தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வாட்ஸ்-அப் குறை தீர்க்கும் ஆணையம் மற்றும் பெங்களுரு சைபர் கிரைம் அலுவலகம் மற்றும் வாட்ஸ்-அப் குறைத்தீர்க்கும் ஆணையத்தி நாங்கள் ஐடி ப்ரெஷ் சார்பாக இந்த பொய்யான செய்தியை எதிர்த்து புகார் அளித்துள்ளோம். எங்களின் நிறுவனத்துக்கு எதிரான பொய்யான, ஆதாரமற்ற தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தாங்கள் 2005ம் ஆண்டு தொடங்கிய நாள் முதல் இன்று வரை வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற ப்ராண்டாக, சுகாதாரமான, கலப்படமில்லா உணவுப்பொருட்களை தயாரித்து வருவதில் வெற்றிகரமாக இருந்து வருகிறோம், என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்பில் இவ்வாறு பரவியது பொய்யான, அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லாத தகவல். இது எங்கள் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விஷப் பிரச்சாரம், என பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐடி பிரெஷ் நிறுவனம், இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது..
மேலும், விளக்கம் அளித்துள்ள நிறுவனம், தாங்கள் 100% சைவப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி இட்லி-தோசை மாவு தயார் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
“ஐடி பிரெஷ் நிறுவனம் இட்லி மாவை தயாரிக்க, அரிசி, உளுந்து உள்ளிட்ட சைவப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறது. விலங்குப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை,” என்றும் விளக்கம் அளித்துள்ளது.
அடுத்து அந்த வாட்ஸ் அப் செய்தியில், ஐடி ப்ரெஷ் நிறுவனம் முஸ்லிம்களை மட்டுமே பணிக்கு அமர்திக்கொள்வதாகவும், ஹலால் சான்றிதழ் பெற்றது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், நிறுவனத்தின் நிறுவனர்களான பி.சி.முஸ்தபா மற்றும் அவரது சகோதரர்கள் முஸ்லிம்கள் என்பது தவிர இந்தத் தகவலில் எந்த ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி வேகமாக பரவியதை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த பல தொழில்முனைவர்கள் ஐடி ப்ரெஷ் நிறுவனத்துக்கு ஆதரவாகவும், இது போன்ற காழ்ப்புணர்ச்சி கொண்ட மெசேஜ்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர்.
நேச்சுரல்ஸ் நிறுவனர் சிகே குமாரவேல், இது பற்றி தனது ஃபேஸ்புக் பதிவில் விரிவாக எழுதி இருந்தார். அதில்,
“தனது கடின உழைப்பால் முன்னுக்கு வந்துள்ள முதல் தலைமுறை தொழில்முனைவரான முஸ்தபா போன்றவர்கள் மீது மதச்சாயம் பூசுவது வேதனை அளிக்கிறது. இப்படி மதத்தையும், தொழிலையும் சம்மந்தப்படுத்துவது சரியல்ல. இதை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும்,” என்று பதிவிட்டிருந்தார்.
அவரின் பதிவுக்கு ஆதரவாக பல தொழில்முனைவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி, ஐடி ப்ரெஷ் நிறுவனத்துக்கு ஆதரவாக தாங்கள் நிற்பதாக பதிவிட்டிருந்தனர்.
மேலும், இது குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஐடி ப்ரெஷ் நிறுவனர் முஸ்தபா,
“எங்களுடைய உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகள் கொண்ட ஆலையில், ரசாயனம் அல்லது செயற்கைப் பொருட்கள் எதுவும் கலக்காமல் ஆரோக்கியமான, இந்திய உணவுகளை தயாரிக்கிறோம். இது போன்ற ஆதாரமற்ற பொய் பிரச்சாரங்கள், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.”
இறுதியாக, இந்த பொய் பிரச்சாரத்தை நம்பாது, தனக்கு துணை நின்ற வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்முனைவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் ஐடி ப்ரெஷ் நிறுவன நிறுவனர் பிசி முஸ்தபா.
கட்டுரை உதவி: சைபர் சிம்மன்