100 மில்லியன் யூரோ முதலீட்டில் ‘ஸ்டார்ட் அப் மையம்’ - பிரெஞ்சு நிறுவனத்துடன் ஐஐடி மெட்ராஸ் ஒப்பந்தம்!
பிரான்சைச் சேர்ந்த விமான தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனம் ஸ்டார்பஸ்ட் ஆக்சலேட்டர் (Starburst Accelerator SARL), ஐஐடி மெட்ராசுடன் இணைந்து 100 மில்லியன் யூரோவில் ஸ்டார்ட் அப்களுக்கான புதுமையாக்க மையத்தை அமைக்க உள்ளது.
பிரான்சைச் சேர்ந்த விமான தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனம் 'ஸ்டார்பஸ்ட் ஆக்சிலேட்டர்' (Starburst Accelerator SARL), ஐஐடி மெட்ராசுடன் இணைந்து 100 மில்லியன் யூரோ முதலீட்டில் ஸ்டார்ட் அப்களுக்கான புதுமையாக்க மையத்தை அமைக்க உள்ளது.
இந்த கூட்டு முயற்சி மூலம், ஐஐடி மெட்ராஸ், ஸ்டார்பஸ்ட் ஏரோஸ்பேஸ், விண்வெளி, பாதுகாப்பு (ஏஎஸ்டி) ஆகிய துறைகளில் ஆக்சிலேட்டர் திட்டங்களை செயல்படுத்த வழி செய்யும்.
ஸ்டார்பஸ்ட் ஆக்சிலேட்டர் ஏஎஸ்டி துறைகளுக்கான வென்சர் மூலதன நிதியை உருவாக்க உள்ளது. இந்திய பொருளாதாரத்திற்கு உதவுவதோடு, உலகலாவிய வாய்ப்புகளை பெறவும் வழிவகுக்கும். இந்திய ஏ.எஸ்.டி ஸ்டார்ட் அப்கள் சர்வதேச சந்தையை அணுகவும் இந்த கூட்டு வழி செய்யும்.
இந்த கூட்டு முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. ஸ்டார்பஸ்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பிரான்காய்ஸ் சோபர்ட் நிறுவன புதுமையாக்க மற்றும் வென்சர் இயக்குனர் செடிர்க் வாலெட் மற்றும் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி, டீன் (ஐ.சி.எஸ்.ஆர்) பேராசிரியர் மனு சந்தானம் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.
ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஸ்டார்பர்ஸ்ட் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். சர்வதேச ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் பாதுகாப்புத் துறை ஆக்சிலேட்டரான ஸ்டார்பஸ்ட் வர்த்தக நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், அரசு அமைப்புகளை இணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ், பாரீஸ், முனிச், சிங்கப்பூர், டெல் அவி, மேட்ரிட் உள்ளிட்ட இடங்களில் அலுவலகம் கொண்டுள்ள இந்நிறுவனம், தனது வலைப்பின்னலில் 17,000 ஸ்டார்ட் அப்களை கொண்டுள்ளது.
“ஐஐடி மெட்ராசுடன் இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த கூட்டு முயற்சி மூலம், ஆழ்நுட்பத்தில் புதுமையாக்கம் மற்றும் இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவித்து துடிப்பான ஏ.எஸ்.டி சூழலை உருவாக்க முடியும் என நம்புகிறோம்,” என பிரான்கோய்ஸ் சோபர்ட் குறிப்பிட்டார்.
இந்த கூட்டு முயற்சி தொழில்முனைவோர், ஆய்வு பூங்காக்கள், முதலீட்டாளர்கள் அரசு அமைப்புகளில் கவனம் செலுத்த உள்ளது. புதுமையாக்க ஸ்டார்ட் அப்களை உருவாக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“பல லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக உருவாகி வரும் நிலையில், இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பது முக்கியம். இதற்காக முன்னணி கல்வி நிறுவனங்கள் எதிர்கால ஊழியர்களை விட, எதிர்கால வேலைவாய்ப்பு அளிப்பவர்களை உருவாக்க வேண்டும். இந்த சூழலில், ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் இத்தகைய திட்டங்கள் முக்கியம் பெறுகின்றன,” என ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி கூறினார்.
இந்த திட்டம் தொழில்முனைவோர்களுக்கு அணுகல் வாய்ப்புகளை வழங்கி, புதிய நுட்பங்கள் வர்த்தக எண்ணங்கள் ஆகியவற்றை ஊக்குவித்து, இந்திய ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு துறைக்கும் ஊக்கமாக அமையும்.
ஸ்டார்ட் அப்கள், தொழில்முனைவோர்கள், நிறுவனங்கள், அரசு அமைப்புகள் இடையே இணைந்து செயல்படும் வாய்ப்புகளை அணுகவும் உதவும். ஏரோஸ்பேஸ் நுட்பம் கண்டறிதல், புதுமையாக்க மாற்றம், சர்வதேச விரிவாக்கம், வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த திட்டம் செயல்படும் வாய்ப்பு உள்ளது.
Edited by Induja Raghunathan