வருமான வரி சோதனை, பணி நீக்கம், வென்டர்கள் அதிருப்தி- Oyo’வில் தொடரும் பிரச்சனைகள்...
ஓயோ நிறுவனத்தில் பல்வேறு பிரச்சனைகள் வெளியே தெரியாமல் இருப்பதாக விஷயம் அறிந்தவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்தியாவின் மூன்றவாது மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப்பான 'ஓயோ' (OYO) நிறுவனத்தில் எல்லாம் சரியாக இல்லை. குருகிராமை தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம் வருமான வரி சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது மற்றும் 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக நிறுவனத்திற்கு நெருக்கமானவர்கள் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தனர்.
“இங்கு நிலைமை மோசமாக உள்ளது. வருமானவரித்துறை அதிகாரிகள் வந்திருந்தனர், ஆனால் CXO இங்கு இல்லை,” என நிறுவன வட்டாரம் தெரிவிக்கிறது.
இருப்பினும், நிறுவன அறிக்கை இதை மறுத்துள்ளது. வருமானவரித் துறையின் வழக்கமான சோதனை இது என தெரிவிகப்பட்டுள்ளது.
“இது எங்கள் அலுவலகம் ஒன்றில் நடைபெற்ற வழக்கமான டிடீஎஸ் தொடர்பான சர்வே. நாங்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறோம். அனைத்து பங்குதாரர்களுடனும் தொடர்பு கொள்ள உறுதியாக இருக்கிறோம். ஓயோ ஹோட்டல்ஸ் & ஹோம்ஸ், அமைப்புசாரா பகுதி முறைப்படுத்தப்பட்டு, வழக்கமான பொருளாதாரத்தில் இணைவதை உறுதி செய்ய விரும்புகிறது. தொழில்முனைவு வாய்ப்புகளை உருவாக்கி, தொழில் நுட்பத்தை வழங்குவதன் மூலம் சிறிய ஹோட்டல் உரிமையாளர்களுக்கு உதவி வருகிறோம்,” என நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சிக்கல்கள்
ஓயோ நிறுவனத்திற்குள் எல்லாம் நல்லபடியாக இருப்பதாக செய்தி தொடர்பாளர் கூறினாலும், நிறுவனம் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக விவரம் அறிந்த பலரும் தெரிவிக்கின்றனர்.
“வரும் வாரங்களில் CXO மட்டத்தில் பலர் நீக்கப்பட உள்ளனர். அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து இடைநிலை நிர்வாகத்தில் உள்ளவர்களில் 5,000 பேர் நீக்கப்படலாம் என கருதுகிறோம். இந்த கட்டத்தில் எதுவும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் சூழல் தற்போது ஆரோக்கியமாக இல்லை,” என அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒருவர் கூறினார்.
தற்போது 10 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டதாக கருதப்படும் ஓயோ, குத்தகை மற்றும் மாரியட் போன்ற மாடலிலும் ஈடுபட்டுள்ளது. குத்தகை மற்றும் பிராண்ட் மாடலில் 80 நாடுகளில் 800 நகரங்களுக்கு மேல் விரிவாகியுள்ளது. 50 மில்லியன் விருந்துனர்களுக்கு சேவை அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
முதலீட்டாளர் நிர்பந்தம்
சமீபத்தில் ஓயோ ஹார்வர்டு கள ஆய்வாக இடம்பெற்றது. மேலும் பல உயரங்களை தொட்டது.
“ஆனால் வீவொர்க் நிறுவன விவகாரத்திற்கு பிறகு முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டாத வர்த்தக மாதிரிகளை சந்தேகிக்கத் துவங்கியுள்ளனர். இப்போதைய நிலையில் ஓயோ இதிலிருந்து மிகவும் விலகி இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் செலவைக் குறைக்க நிர்பந்திக்கின்றனர்,” என இன்னொரு விவரம் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது.
விஷயம் லாபம் மற்றும் பணி நீக்கம் தொடர்புடையது மட்டும் அல்ல, பல வெண்டர்கள் இந்த மேடையை விட்டு வெளியேறி வருவதாகவும் இன்னொரு வட்டாரம் தெரிவிக்கிறது.
“வெண்டர்களுக்கு ரூ.1,000 வர்த்தகம் என உறுதி அளிக்கப்பட்டு, அறைகள் ரூ.900 க்கு விற்கப்பட்டு, வெண்டர்களுக்கு ரூ.800 அளிக்கப்படுகிறது. ஒப்பந்தப்படி, அறைகள் விற்கப்படாவிட்டால் ஓயோ குறைந்தத் தொகை அளிக்கலாம் என ஒரு ஷரத்து உள்ளது. எனவே வெண்டர்கள் வெளியேறப் பார்க்கின்றனர்,” என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஷயங்கள் குறித்து நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்