அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை; பணம் இல்லா சமூகத்தை நோக்கி இந்தியா செல்கிறதா?
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவது குறித்த செய்திகள் வெளிவருகின்றன. இதெல்லாம் பணம் இல்லா சமூகத்தை நோக்கி இந்தியா பயணிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. அது குறித்து அலசுவோம்...
டிஜிட்டல் பரிவர்த்தனை காரணமாக இப்போதெல்லாம் கையில் கரன்சி நோட்டுகளின் புழக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், ‘வரவு எட்டணா. செலவு பத்தணா. அதிகம் ரெண்டனா’ என வழக்கம் போலவே சாமானியர்களின் வரவு செலவுகள் இருந்து வருகிறது.
1 ரூபாய் முதல் பல்லாயிரம் ரூபாய் வரையில் எதுவாக இருந்தாலும் யுபிஐ செய்வது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவது குறித்த செய்திகள் வெளிவருகின்றன. இதெல்லாம் பணம் இல்லா சமூகத்தை நோக்கி இந்தியா பயணிக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. அது குறித்து அலசுவோம்...
பணமில்லா சமூகத்தை நோக்கி இந்தியா
இந்தியாவும் டிஜிட்டல் பரிவர்த்தனையும்: இந்தியாவின் டிஜிட்டல் முறை பயணம் அண்மையில் தொடங்கியது அல்ல. 20ம் நூற்றாண்டின் கடைசியிலும், 21ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அந்த பயணம் தொடங்கியது.
ஏடிஎம் இயந்திரங்கள், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, என்.எஃப்.சி பேமெண்ட்ஸ், யுபிஐ என இந்தியாவின் டிஜிட்டல் அடாப்ஷன் நிதானமான மற்றும் நிலையான பயணமாக இருந்துள்ளது.
அதன் வெளிப்பாடுதான் கடந்த அக்டோபரில் மட்டும் 7.3 ட்ரில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படக் காரணம். கடந்த 2021 அக்டோபருடன் ஒப்பிடும்போது இது 75 சதவீதம் கூடுதல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கொரோனா பெருந்தொற்றும் ஒரு காரணமாக இருந்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்த காலகட்டத்தில்தான் அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் நடைமுறையில் உள்ள FASTag டிஜிட்டல் மாற்றத்திற்கு சிறந்தவொரு உதாரணம். மொபைல் போன் துணை கொண்டு வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொண்டு பல்வேறு பரிவர்த்தனைகளை எளிய வழியில் மேற்கொள்கிறோம். ஷாப்பிங், லோன் பேமெண்ட்ஸ், காப்பீடு, டிஜிட்டல் வாலட் என அது நீள்கிறது
மறுபக்கம் அரசின் மக்கள் நலத் திட்ட பயனாளர்களுக்கு கிடைக்கும் நிதி உதவிகள் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்க்கப்படுகிறது. அதே போல வங்கி கணக்கு எண்ணை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் இப்போது எளிய வழியில் 10 இலக்க மொபைல் எண்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த காலாண்டில் மட்டும் ரூ.38.32 ட்ரில்லியன் மதிப்பிலான பரிவர்த்தனை: ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 23 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேர்ல்டு லைன் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது யுபிஐ, டெபிட் மற்றும் கிரேடிட் கார்டு, மொபைல் வாலட் போன்ற ப்ரீபெய்ட் பேமெண்ட் முறைகள் போன்றவை இதில் அடங்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இதில் யுபிஐ பரிவர்த்தனையின் மதிப்பு மட்டும் ரூ.32.5 ட்ரில்லியன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் இல்லா சமூகத்தை நோக்கி செல்கிறதா இந்தியா? ஒருபக்கம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும் அதனால் பணப்புழக்கம் குறையவில்லை என்றே சொல்லப்படுகிறது. கடந்த அக்டோபர் நிலவரப்படி,
புழக்கத்தில் உள்ள கரன்சிகளின் மதிப்பு 32.2 டிரில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் புழக்கத்தில் உள்ள கரன்சிகளின் சதவீதம் 12.9 ஆகும். ஆக யுபிஐ மூலம் சிறிய மதிப்பு கொண்ட பண பரிவர்த்தனைகள் அதிகம் நடப்பதாகத் தெரிகிறது. கடந்த அக்டோபர் வாக்கில் 100 மற்றும் 200 ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் அதிகம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது இதற்கு உதாரணம்.
எதிர்காலம் எப்படி? டிஜிட்டல் ரூபாய் (இ-ரூபாய்) இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளில் டிஜிட்டல் முறையின் அடுத்தபடியாக உள்ளது. தடையற்ற, பாதுகாப்பான மற்றும் எளிய வழியில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இந்தியா அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இந்தியாவின் டிஜிட்டல் பயணம் உலகிற்கு முன்மாதிரியாக அமைந்திருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் சில்லறை வர்த்தகத்தில் ‘டிஜிட்டல் ரூபாய்’ அறிமுகம் - ஆர்பிஐ அறிவிப்பு!
Edited by Induja Raghunathan