இந்திய கொரோனா சூழல்; பிரபலங்கள் வருத்தம்: 135 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்த கூகுள்!
இந்தியாவுக்காக பிரார்த்னையில் உலக நாடுகள் மற்றும் பிரபலங்கள்!
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு ஒருநாள் அதிகபட்சமாக நேற்று மட்டும் இந்தியாவில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 2,812 பேர் கொரோனாவால் உயிரை இழந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் இந்த உயிரிழப்பு நிகழ்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிரச்சனைகள் மற்றும் பற்றக்குறைகளால், மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்,
‘’இந்தியாவுக்காக பிரார்த்தனைகள்...’’ என்று தனது வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மைக்ரோ சாஃப்ட் சிஇஓ, சத்யா நாதெல்லா,
"இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையை கண்டு நான் மனம் உடைந்து போயிருக்கிறேன். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்கும், முக்கியமான ஆக்ஸிஜன் செறிவு சாதனங்களை வாங்குவதற்கும் தொடர்ந்து பயன்படுத்தும். இந்தியாவுக்கு உதவ முன்வந்த அமெரிக்க அரசுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் நிறுவன சிஇஓ, சுந்தர்பிச்சை வெளியிட்டுள்ள குறிப்பில்,
"தற்போது இந்தியா தொற்றுநோய்களின் மிகக் கடினமான தருணத்தை கடந்து வருகிறது. அதிகரித்து வரும் தொற்றுநோயை சமாளிக்க அவசர பொருட்கள் தேவைப்படுகின்றன. எங்கள் Google சமூகமும் அவர்களது குடும்பங்களும் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை உணர்கின்றன. மக்கள் தங்கள் குடும்பங்களையும் சமூகங்களையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க தேவையான தகவல்களையும் ஆதரவையும் பெறுவதை உறுதி செய்யும் நிறுவனமாக நாம் இன்னும் என்ன செய்ய முடியும் என்று நாமே கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் இந்தியாவுக்காக 135 கோடி ரூபாய் நிதியுதவியாக அறிவிக்கிறோம்.”
இந்த பணத்தின் மூலம், நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அவர்களின் அன்றாட செலவுகளுக்கு உதவுவதற்காக கிவ்இந்தியா மூலம் அவர்களுக்கு பண உதவி, மற்றும் ஆக்ஸிஜன் மற்றும் சோதனை உபகரணங்கள் உள்ளிட்ட அவசர மருத்துவப் பொருட்களை இந்தியாவில் அதிகம் தேவைப்படும் இடத்திற்கு பெற உதவும் இடங்களுக்கு வாங்கிக் கொடுக்கப்படும், என்று அறிவித்துள்ளார்.
ஜெர்மனி அதிபர் ஆஞ்சலா மெர்க்கெல்,
“கொரோனாவுக்கு எதிரான போர் அனைவருக்குமான பொதுப் போர். இந்த இக்கட்டான தருணத்தில் ஜெர்மனி இந்தியாவுடன் துணைநிற்கும். இந்தியாவுக்கு எங்கள் ஆதரவை கொடுக்க விரும்புகிறோம்,” எனக் கூறியிருக்கிறார்.
இதேபோல், துபாயின் பிரபல புர்ஜ் கலீபா டவரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு கைகொடுக்கும் வகையில், இந்திய மூவர்ண கொடியும், supportindia என்ற வாசகமும் ஒளிபரபரப்பட்டுள்ளது. மேலும், பல பிரபலங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.