உலகிலேயே இந்தியா தான் டாப்பு...! எதுல தெரியுமா?
01/01/2020 புத்தாண்டு அன்று உலகம் முழுவதிலும் 3,92,078 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் எத்தனை தெரியுமா?
பொதுவாக பிறந்தநாள் என்றால் அந்தக் குடும்பத்தினர் மட்டுமே கொண்டாடும் நிகழ்ச்சியாக இருக்கும். புத்தாண்டில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கும் அதிர்ஷ்டம், அவர்களின் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் என்பதே.
புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதிலும் 3,95,078 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இவற்றில் 17 சதவீத குழந்தைகள் இந்தியாவில் பிறந்திருக்கின்றன.
2020ம் ஆண்டில், முதல் குழந்தை ஃபிஜி நாட்டில் பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்த 10 நிமிடத்தில் சுவாவில் Laisani Raisili என்ற பெண்ணிற்கு அழகிய குழந்தை பிறந்தது. நல்ல ஆரோக்கியத்துடனும் 2.9 கிலோ எடையுடன் பிறந்த அந்தக் குழந்தைக்கு Mitieli Digitaki என பெயரிடப்பட்டுள்ளது.
ஆண்டின் முதல் நாளில் பிறந்த குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர், இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, அமெரிக்க ஐக்கிய நாடு, காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் பிறந்துள்ளனர் என்றும், யூனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.
யுனிசெஃப்பின் புள்ளிவிவரப்படி,
இந்தியாவில் 67,385 புதிய வரவுகள் பிறந்துள்ளன. சீனாவில் 46,299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும், பாகிஸ்தானில் 16,787 குழந்தைகளும் பிறந்துள்ளன. இந்தோனேசியாவில் 13,020 குழந்தைகளும், அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும், காங்கோவில் 10,247 குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 8,493 குழந்தைகளும் பிறந்துள்ளது.
ஜனவரி 1-ம் தேதி புதிய குழந்தை வருகைக்கான ஆர்வம் இன்னமும் நீடிக்கிறது. தாய்மார்கள் இந்த ஆண்டின் முதல் நாளில் தங்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்று தம்பதிகள் வலியுறுத்துவதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“இந்த ஆண்டின் முதல் நாளும், இதைத் தொடர்ந்து வரும் பத்தாண்டுகளும், நம் வருங்காலத்தின் நம்பிக்கைகள் மற்றும், ஆவல்களை மட்டுமன்றி, நமக்குப்பின் வருகின்றவர்களின் வருங்காலம் பற்றியும் சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளன,” என்று யூனிசெப் அமைப்பின் இயக்குனர் ஹென்ரிட்டா ஃபோர் கூறியுள்ளார்.
2018ம் ஆண்டில், 25 லட்சம் குழந்தைகள், பிறந்த முப்பது நாட்களுக்குள்ளேயே இறந்திருக்கின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் பிறந்த அன்றே இறந்ததாக ஃபோர் தெரிவித்துள்ளார்.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், பிரசவ காலத்தில் இருக்கும் சிக்கல்கள், சரியான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மகப்பேறு நடக்காதது, செப்சிஸ் தொற்று நோய் என இவையே குழந்தைதகளின் இறப்புக்குக் காரணமாக இருப்பதாக யுனிசெஃப் கூறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும், 25 லட்சத்திற்கு அதிகமான குழந்தைகள், இறந்தே பிறக்கின்றன என்றும் யுனிசெஃப் சுட்டிகாட்டுகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளில் குழந்தை இறப்புக்களைத் தடுப்பதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் யுனிசெஃப் கருதுகிறது. 5 வயதிற்குள்ளான குழந்தைகளே அதிக உயிரிழப்புகளை சந்திப்பதாகவும், பிறந்த முதல் மாதத்தில் இறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதமானது 47 சதவிகிதம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Every Child Alive campaign மூலம் மருத்துவத்துறையில் உடனடி முதலீடுகள், சரியான பயிற்சியை அளிக்க யுனிசெஃப் அழைப்பு விடுத்தது. தாய், சேய் பாதுகாப்புக்கு சரியான மருந்துகளை அளித்து பேறு காலம், பிரசவம், குழந்தை பிறப்பு வரை அவர்கள் சரியான மருத்துவப் பராமரிப்பில் இருக்கின்றனரா என்பதை உறுதி செய்ய வலியுறுத்தியதன் விளைவாக தற்போது குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்திருப்பதாக யுனிசெஃப் கூறியுள்ளது.