இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்புக் குறைவான இடங்கள் எவை தெரியுமா?
தேசியக் குற்ற ஆவணங்கள் கழகம் (NCRB), வெளியிட்டுள்ள அறிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உத்தரபிரதேசத்தில் அதிகம் நடப்பதாக தெரிவிக்கிறது. தமிழ்நாடு எத்தனாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?
தேசியக் குற்ற ஆவணங்கள் கழகம் (என்.சி.ஆர்.பி), இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு, வருடாந்திர இந்தியக் குற்ற அறிக்கை 2017-யை அண்மையில் வெளியிட்டது.
இந்த அறிக்கை படி, 2017ல் பெண்களுக்கு எதிராக மொத்தம், 3,59,849 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2016ல் பெண்களுக்கு எதிராக 3.38 லட்சம் வழக்குகள் பதிவாயின.
2015ல் இது 3.2 லட்சமாக இருந்தது. பதிவாகியுள்ள வழக்குகள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்குப்படி மாநில அளவில், உத்தரபிரதேசம் 56,011 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 31,979 வழக்குகள் மற்றும் மேற்கு வங்கத்தில் 30,002 வழக்குகள் பதிவாயின. தமிழ்நாடு 17வது இடத்தில் மொத்தம் 5397 வழக்குகள் பதிவாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரானக் குற்றங்களில் கொலை, பாலியல் வன்கொடுமை, வரதட்சணை மரணம், தற்கொலை. அமில தாக்குதல், பெண்கள் மீது சித்தரவதை, கடத்தல் ஆகியவை அடங்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில், கணவர் அல்லது அவரது உறவினர்கள் செய்யும் கொடுமை 27.9 சதவீதமாக இருக்கிறது. பெரும்பாலான வழக்குகள் ஐபிசி பிரிவில் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது நாட்டில் குடும்ப வன்முறை அளவை உணர்த்துகிறது.
‘பெண்மையை பாதிக்கும் வகையிலான தாக்குதல் 21.7 சதவீதமாக இருக்கிறது. பெண்கள் கடத்தல் 20.5 சதவீதமாகவும், பாலியல் தாக்குதல் 7 சதவீதமாகவும் இருக்கிறது.
பாலியல் வன்கொடுமை
இந்தியாவில் 2017ல், மொத்தம் 32,559 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 5,562 வழக்குகள் பதிவாகின. உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 283 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்கள் பாதுகாப்பிற்கு மோசமான இடமாக அறியப்படும் தில்லியில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளன. 2017ல், 13,076 வழக்குகள் மட்டுமே பதிவாயின. மூன்று ஆண்டுகளில் இது மிகவும் குறைவானது. 2016ல் 15,310 வழக்குகள் மற்றும் 2015 17,222 வழக்குகள் பதிவாயின.
பதிவான வழக்குகளில், அறிமுகம் ஆனவர்களால் பாலியல் தாக்குதலுக்கு இலக்கானதே அதிகம். பதிவான 32,559 வழக்குகளில், 93.1 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர். 16,591 வழக்குகளில், குடும்ப நண்பர்கள், முதலாளிகள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அல்லது இதர தெரிந்தவர்கள் குற்றவாளிகாக இருப்பதாகவும், 10,553 வழக்குகளில் நண்பர்கள், ஆன்லைன் நண்பர்கள், பிரிந்த கணவர்கள் குற்றவாளிகளாக இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய பிரதேசத்தில் பதிவான 5,562 வழக்குகளில் 97.5 சதவீதம் தெரிந்தவர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களாகும். ராஜஸ்தானில், 3,305 வழக்குகளில், 87.9 சதவீத வழக்குகளில் தெரிந்தவர்கள் குற்றவாளிகள்.
மாநில அளவிலான புள்ளிவிவரங்களின் படி, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், இமாச்சல பிரதேசம், நாகாலந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் குறைவான வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கவுதமன் | தமிழில்: சைபர்சிம்மன்