'எல்லா முடிவுக்கும் ஒரு தொடக்கம் உள்ளது' - ஒலிம்பிக் இரண்டாம் சுற்றில் வெளியேறிய பவானி தேவி!
அறிமுக ஒலிம்பிக்கில் தடம் பதித்த மகிழ்ச்சி!
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வாள் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி 2ஆவது சுற்றில் தோல்வியடைந்தார். 27 வயதான பவானி, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் ஃபென்ஸர் (வாள் சண்டை வீராங்கனை) ஆவார். முதல் சுற்றில், துனிசியா நாட்டின் பென் அஜீசிக்கு எதிராக 15-3 என்ற வெற்றியுடன், ஒலிம்பிக்கில் தனது அறிமுகத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார் பவானி.
ஆனால் இரண்டாம் சுற்றில், உலக தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பவரும், ரியோ ஒலிம்பிக் அரையிறுதி வரை சென்றவருமான பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனட்டை பவானிதேவி எதிர்கொண்டார். ஆனால் 7-15 என்ற கணக்கில் பவானி தேவி தோல்வியை தழுவினார்.
ப்ரூனெட்டுக்கு எதிராக சில தவறுகளை செய்ததே தோல்விக்குக் காரணம் என பவானி தேவி கூறியிருக்கிறார்.
“முதல் பாதியில் நான் நன்றாக டிபென்ஸ் அமைக்கவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் நான் எதையாவது மாற்ற முயற்சித்தேன், ஆனால் அது மிகவும் தாமதமாகிவிட்டது. உலகின் சிறந்த ஃபென்ஸர்களில் ஒருவருடன் நான் விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று பவானி தேவி கூறியுள்ளார்.
இடையில் நான் சில தவறுகளைச் செய்தேன், ஆனால் பரவாயில்லை. இந்தியர்கள் ஃபென்சிங்கைப் பார்ப்பது இதுவே முதல் முறை, எனவே நான் அவர்களுக்கு முன்னால் நிகழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டோக்கியோ சுற்றுப்பயணத்திலிருந்து நிறைய அனுபவத்தைப் பெற்றுள்ளேன். இது எதிர்கால சவால்களுக்கு உதவும்.
இது எனது முதல் ஒலிம்பிக், இது இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம், இருப்பினும் இந்த ஒலிம்பிக்கில் இருந்து எனக்குக் கிடைத்த அனுபவத்தில் நான் என்னை மேலும் மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
”நான் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறவில்லை. தகுதி பெற என்னால் முடிந்தவரை முயற்சித்தேன், அதுவே என்னை மேலும் வலுவாக்கி டோக்கியோவிற்கு முன்னேற எனக்கு உதவியது. நான் இத்தாலியில் பயிற்சிபெற்றேன். அது மதிப்புக்குரியது. நான் ஒரு ஒலிம்பியன் என்ற பெருமையுடன் என கனவை நினைவாக்கிய தருணத்தோடு வாழ்வேன்,” எனக் கூறும் பவானி தேவி, சென்னையைச் சேர்ந்தவர்.
தன் கனவை அடைய, குடும்பத்தை பிரிந்து, ஒரு சாதரண வாழ்க்கையை வாழாமல் கடுமையாக உழைத்து, பல தியாகங்களை செய்யவேண்டி இருந்ததாக பவானி தெரிவிக்கிறார்.
மேலும், டிவிட்டரில் பதிவிட்ட பவானி தேவி, தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தனது நன்றியை தெரிவித்துவிட்டு,
“எல்லா முடிவுக்கும் ஒரு தொடக்கம் உள்ளது. எனது பயிற்சியை நான் தொடர்ந்து கடும் உழைப்பை போட்டு, பிரான்சில் நடக்கவிருக்கும் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்,” என்றார்.
வாள்ச் சண்டை போட்டிகளை பொறுத்தவரை , முதலில் 15 புள்ளிகளைத் தொடும் ஃபென்சர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். நேற்றைய போட்டியின்போது முதல் இரண்டு சுற்றுகளில் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்றார் பவானி. இறுதிச் சுற்றுக்கு முன்பு, 2-8 என்ற கணக்கில் இருந்தது. மேலும், ப்ரூனெட் பெரும்பாலும் ஒன்பது நிமிடம் மற்றும் 48 வினாடி களத்தில் இருந்து 15 புள்ளிகளைத் தொட்டதால், பவானி தேவியிடம் இருந்து வெற்றிபறிக்கப்பட்டது.
தகவல் உதவி: பிடிஐ | தமிழில்: மலையரசு