இந்திய எம்.எஸ்.எம்.இ மாநாடு 2022: ‘புதிய இயல்பு நிலையில் வளர்ச்சி' என்ற மையக் கருத்தில் நடைபெறுகிறது!
ஜூன் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஒருவார காலம் இந்த மாநாடு நடைபெறுகிறது.
கடந்த நான்காண்டுகளாக யுவர்ஸ்டோரியின் எஸ்எம்பி ஸ்டோரி இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) மற்றும் இதர உள்நாட்டு நிறுவனங்களின் எழுச்சிமிகு வெற்றிக்கதைகளை வாசகர்களுக்கு விருந்தாக்கி வருகிறது.
இது இந்திய எம்.எஸ்.எம்.இ மாநாட்டிற்கான நேரம். ஜூன் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஒருவார காலம் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் வெவ்வேறு பிரிவுகளில் பலர் உரையாற்ற உள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் மிகக்கடினமான சூழலைக் கடந்து வந்துள்ள இந்தத் துறையைப் பற்றிய நுண்ணறிவுகளை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.
துறைசார் பங்குதாரர்கள், சங்கங்கள், அரசு அமைப்புகள், தொழில்முனைவோர் போன்றோர் வெவ்வேறு காரணிகளைப் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் ஆராய இருக்கின்றனர்.
இரண்டாண்டுகள் பெருந்தொற்றின் பிடியில் உலகமே சிக்கித் தவித்த நிலையில் தற்போது மெல்ல மீண்டு ஒரு புத்தம் புது சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறது. இத்தகைய சூழலில் ’புதிய இயல்பு நிலையில் வளர்ச்சி’ (Growing in the New Normal) என்பதே இந்த மாநாட்டின் மையக்கருத்தாக உள்ளது.
நாடு முழுவதும் எம்.எஸ்.எம்.இ துறையில் 63 மில்லியன் நிறுவனங்கள் செயல்படுகின்றன. நாட்டின் ஜிடிபி-யில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கிறது. இருப்பினும் இந்நிறுவனங்கள் பெருந்தொற்று தொடர்பான சிக்கல்களில் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்திய எம்.எஸ்.எம்.இ மாநாடு 2022: ஆத்மநிர்பார் பாரத் திட்டம்
’இந்திய எம்.எஸ்.எம்.இ மாநாடு 2022’ நிகழ்வில் சுயசார்பு இந்தியாவை கட்டமைக்கும் ஆதம்நிர்பார் பாரத் திட்டம் ஊக்குவிக்கப்படும். புதிய இயல்பு நிலையில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் சிறப்பு கவனம் செலுத்தவேண்டிய பகுதிகள் கலந்தாய்வில் சுட்டிக்காட்டப்படும்.
அதேபோல், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் உதவும். டிஜிட்டல் செயல்பாடுகள், நிதி, கொள்கை ரீதியான நடவடிக்கைகள், ஏற்றுமதி, நிதி திரட்டல், வணிக விரிவாக்கம், தொழில்முனைவு திறன் மேம்பாடு என கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு சமூக மற்றும் பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையில் எப்படிப்பட்ட ஆதரவு தேவைப்படுகிறது என்பது குறித்து ’இந்திய எம்.எஸ்.எம்.இ மாநாடு 2022’ நிகழ்வில் விரிவாக ஆராயப்படும்.
மெய்நிகர் வடிவில் நடக்க இருக்கும் இந்த மாநாட்டில் தொழில்முனைவோர், தொழில்நுட்ப வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், ஆலோசகர்கள், வணிகத் தலைவர்கள் போன்றோர் பங்கேற்கின்றனர். இவர்களில் சிலர் குழு விவாதங்களில் பங்கேற்க உள்ளனர். வெவ்வேறு துறைசார்ந்த பிரபல தலைவர்கள், கொள்கை வகுப்பவர்கள் போன்றோர் நிகழ்வின் இறுதி நாளான ஜூன் 27ம் தேதி உரையாற்றுவார்கள்.
எனவே, இந்திய எம்.எஸ்.எம்.இ மாநாடு 2022 நிகழ்வில் பங்கேற்று ஊக்கமிகு அனுபவத்தைப் பெற உங்களை அன்புடன் அழைக்கிறோம். குழு விவாதங்கள், பயிற்சி பட்டறைகள், வட்டமேசை விவாதம் என இந்த ஒருவார கால நிகழ்வானது, எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் பெருந்தொற்றுக்கு பிறகான சூழலை எதிர்கொள்ள மட்டுமின்றி மீண்டெழுந்து சிறப்பாக வளர்ச்சியடையவும் உதவும்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா