இனி ATM மூலம் தங்கமும் கிடைக்கும் - இந்தியாவின் முதல் தங்கம் தரும் ஏடிஎம் அறிமுகம்!
இந்தியாவிலேயே முதன் முறையாக ஐதாராபாத்தில் ஏடிஎம் மூலமாக தங்கம் வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக ஐதாராபாத்தில் ஏடிஎம் மூலமாக தங்கம் வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெருநகரங்கள் முதற்கொண்டு சிறிய கிராமங்கள் வரை இப்போது எல்லா இடத்திலும் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இதில் கிரெடிட் அல்லது ரெபிட் கார்ட்டை நுழைத்து 4 அல்லது 6 இலக்க பாஸ்வேர்ட்டை தட்டினால் பணம் வந்து பார்த்திருப்போம்.
அதேபோல், இனி ஏடிஎம் மூலமாக தங்கம் எடுக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா...?
ஆம், இந்தியாவிலேயே முதன் முறையாக ஐதராபாத்தில் ஏடிஎம் மூலமாக தங்க விற்பனையை தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது.
தங்கம் தரும் ஏடிஎம்
ஐதராபாத்தை தளமாகக் கொண்ட ’கோல்ட்சிக்கா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் பேகம்பேட்டை அசோக ரகுபதி சேம்பர்ஸில் உள்ள அலுவலகத்தில் தங்க நாணயங்களை வழங்கக்கூடிய ஏடிஎம் இயந்திரத்தை நிறந்துள்ளது.
மாநில மகளிர் ஆணையத் தலைவி சுனிதா லக்ஷ்மரெட்டி இதனை திறந்துவைத்துள்ளார். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் உதவியுடன் இந்த ஏடிஎம்கள் மூலம் வெளிப்படையான விலையில் தங்க நாணயங்களை வாங்க முடியும்.
கோல்ட்சிக்கா நிறுவனம் ஓபன் கியூப் டெக்னாலஜிஸ் என்ற தொழில் நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து, உலகிலேயே முதன் முறையாக ரியல் டைம் தங்கம் தரும் ஏடிம் மெஷினை வடிவமைத்து, அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சுனிதா லக்ஷ்ம ரெட்டி பேசுகையில்,
“தங்கம் ஏடிஎம் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதற்கான சான்று. தங்கம் எடுக்க நாட்டிலேயே முதல் ஏடிஎம் மாநகரில் திறக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த தங்கம் தரும் ஏடிஎம்கள் சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வகை ஏடிஎம்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்.”
தங்க ஏடிஎம் சிறப்பம்சங்கள்:
- தங்கம் வாங்கும் ஏடிஎம் பலவிதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. பயன்படுத்த எளிதான இந்த இயந்திரம் மூலமாக அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்கள் தங்களது பட்ஜெட்டிற்கு ஏற்றார் போல் தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம்.
- இந்த ஏடிஎம் இயந்திரம் மூலமாக அனைவரும் தங்கள் டெபிட் கார்ட், கிரெடிட் கார்டுகளை எளிமையாக பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த ஏடிஎம்கள் மூலம், வாங்குபவர்கள் எந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தியும் சுத்தமான தங்கத்தை உடனடியாக வாங்க முடியும்.
- ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை பொருத்தியதும், நீங்கள் பதிவிடக்கூடிய தங்கத்தின் அளவிற்கான விலை அன்றைய விலையுடன் காண்பிக்கப்படும்
- இந்த ஏடிஎம் மூலமாக 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையிலான தங்க நாணயங்களை பெற முடியும்.
தங்கம் விற்க ஏடிஎம் அமைப்பது குறித்து கோல்டு சிக்கா சிஇஓ சையத் தருஜ் கூறியதாவது,
'இந்த ஏடிஎம் மூலம் 99.99% தரம் கொண்ட 0.5, 1, 2, 5, 10, 20, 50 மற்றும் 100 கிராம் தங்க நாணயங்களை பெறலாம். இதற்கு, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன், நாங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் கார்டுகளையும் பயன்படுத்தலாம். ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து கிலோ தங்கத்தை ஏற்றலாம். ஆரம்ப கட்டத்தில் இந்த ஏடிஎம்கள் காலை 9.50 மணி முதல் இரவு 11.30 மணி வரை கிடைக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
விமான நிலையம், படபஸ்தி, செகந்திராபாத் மற்றும் அபிட்ஸ் ஆகிய இடங்களில் மூன்று ஏடிஎம்களும், பெத்தப்பள்ளி, வாரங்கல் மற்றும் கரீம்நகர் ஆகிய இடங்களில் தங்கம் தரும் ஏடிஎம்களும் திறக்கப்பட உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 3,000 ஏடிஎம்கள் திறக்கப்படும் என கோல்ட் சிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கம் ஏடிஎம்மை பயன்படுத்துவது எப்படி?
தங்கத்துக்கு என தனி ஏடிஎம் இது. இதைப் பயன்படுத்துவது எப்படி என வாடிக்கையாளர்கள் துளியும் தயங்க வேண்டாம். ஏனெனில் பிற ஏடிஎம்களைப் போலவே இந்த ஏடிஎம் இயந்திரமும் இயங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ஏடிஎம்மில் இருந்து தங்கத்தை வாங்க வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம்.
- ஏடிஎம்மில் உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டைச் செருகவும்.
- எப்போதும் போல் உங்கள் பின்னை பதிவிடவும்.
- இப்போது உங்களுக்கு எவ்வளவு கிராம் தங்க நாணயம் வேண்டும் என்பதை பதிவிட வேண்டும்.
- ஏடிஎம்-இல் இருந்து உங்கள் பணத்தின் மதிப்பிற்கு ஏற்ற தங்க நாணயங்கள் வெளியே வரும், அதை எடுத்துக்கொள்ளலாம்.
‘ஒரே இந்தியா; ஒரே தங்கம் விலை’ - இந்தியாவில் முதலில் அமல்படுத்திய கேரளா!