‘ஒரு கிளாஸ் பால் வாங்க முடியாத வறுமையில் பயிற்சி’ - இன்று ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய்!
டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கும் வெள்ளிப் பதக்கம் பெற்றுத்தந்துள்ளார் 26 வயதான பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட மீராபாய் சானு, 202 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
2021ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் ஆரம்பமாகி உள்ளது. இதில் மகளிருக்கான பளுதூக்கும் போட்டி இன்று நடைபெற்றது. இந்தியா சார்பில் 49 கிலோ எடைப் பிரிவில் 26 வயதான சாய்கோம் மீராபாய் சானு பங்கேற்றார்.
க்ளீன் அண்ட் ஜெர்க் போட்டியில் முதல் அட்டம்டெட்டில் 110 கிலோ, இரண்டாவது அட்டம்டெட்டில் 115 கிலோ எடையைச் சரியாகத் தூக்கியவர், மூன்றாவது அட்டம்டெட்டில் 117கிலோ எடையைத் தூக்க சிரமப்பட்டார். இதனால் தங்கம் வெல்லும் வாய்ப்பு அவருக்கு கைநழுவியது. சீனாவின் ஹூ ஜிஹுய் தங்கம் வென்றார். மீராபாய்க்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. அமெரிக்காவின் ஜோர்டன் டெலாக்ரூஸ் வெண்கல பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இந்தியாவின் பதக்க வேட்டையை வெள்ளிப் பதக்கத்தோடு தொடங்கி வைத்திருக்கிறார் மீராபாய் சானு. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
“டோக்கியோ ஒலிம்பிக்கில் இதைவிட மகிழ்ச்சியான துவக்கம் இந்தியாவிற்கு இருக்க முடியாது. மீராபாய் சானுவின் சாதனையால் ஒட்டுமொத்த இந்தியாவுமே உற்சாகத்தில் உள்ளது. மீராபாயின் சாதனை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஊக்கத்தை அளிக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்துள்ள மீராபாய் சானுவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
வறுமையை வென்ற கடின உழைப்பு
டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே வெள்ளியை வென்று, இந்தியாவைப் பதக்கப் பட்டியலில் இடம்பெறச் செய்த மீராபாய் சானு, இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் சொந்த மாநிலமான மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இம்பால் நகரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நோங்பாக் காக்சிங் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் மீராபாய் சானு.
நிரந்தர வேலை என்று எதுவும் இல்லாததால், கிடைக்கின்ற வேலையை செய்து மீராபாயை வளர்த்துள்ளனர் அவரது பெற்றோர். அதே கிராமத்தில் இயங்கி வந்த பள்ளியில் ஆரம்பக் கல்வியை படித்துள்ளார் மீராபாய். குடும்பத்தின் வறுமையால் சிறுவயதில் காட்டில் இருந்து விறகுக் கட்டைகளைத் தூக்கி வரும் வேலைகளைச் செய்துள்ளார் அவர்.
“வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளியுள்ள காட்டில் இருந்து தினமும் விறகுக் கட்டைகளை சுமந்துவரும் பொறுப்பு எனக்கும் மீராவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதே என்னைவிட 4 வயது சிறியவளான மீரா, என்னைவிட அதிக கிலோ விறகுக் கட்டைகளை சுமந்து வருவாள். இன்று அவள் அதிக எடையைத் தூக்குவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்,” என்கிறார் மீராவின் சகோதரர் சனதோம்பா.
சிறுவயதிலேயே தொலைக்காட்சி மூலம் பளுதூக்குதல் விளையாட்டில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு ஒன்பது வயதாக இருக்கும் போது, ஒரு விடுமுறை நாளில் தொலைக்காட்சியில் குஞ்சாணி தேவி ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டதைப் பார்த்துள்ளார் மீராபாய். அப்போதிருந்து தான் தனது மகளுக்கு பளு தூக்குதலில் ஆர்வம் வந்ததாக மீராபாய் சானுவின் தாயார் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
“அந்த போட்டி முடிந்தவுடன், எதிர்காலத்தில் இதேபோல் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு நான் பளு தூக்குதலில் பதக்கம் வென்று தருவேன் என்று கூறினார். அப்போதே ஆர்வத்தோடு வீட்டு வாசலில் கிடந்த நீளமான மூங்கில் கோளை தலைக்கு மேல் தூக்கி விளையாடினாள்,” என அந்த நாளை நினைவு கூர்கிறார் மீராவின் தாயார்.
சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், உடனடியாக அதற்கான வேலையிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார் மீரா. இதற்காகத் தன் கிராமத்தில் செயல்பட்டு வந்த இளைஞர் மன்றத்திற்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
பின்னர் தங்கள் கிராமத்திற்கு பக்கத்தில் இருந்த பளு தூக்கும் பயிற்சி மையத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து கூடுதல் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பயிற்சி மையத்திற்கு ரயிலில் சென்று பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.
பொதுவாக விளையாட்டு வீரர்கள் தங்கள் ஸ்டாமினாவை அதிகரிக்க சத்தான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள பயிற்சியாளர்கள் வலியுறுத்துவார்கள். ஆனால் நிரந்தர வேலையில்லாமல் அவதிப்பட்ட தன் பெற்றோரிடம், இதனை கேட்டு மேலும் அவர்களைக் கஷ்டப்படுத்த மீரா விரும்பவில்லை. தனது குடும்பத்தின் வறுமையை உணர்ந்து, பயிற்சியாளரிடமும் இதனை மறைத்து, பயிற்சியை மேற்கொண்டுள்ளார் மீராபாய்.
“பயிற்சி மையத்தில் சேர்ந்ததும், நான் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளின் டயட் பட்டியலைக் கொடுத்தார்கள். தினசரி அரை லிட்டர் பால், குறிப்பிட்ட அளவு கறி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்தபடி வாரம் ஒருமுறை எனக்குத் தரமான உணவு தரவே என் குடும்பத்தினர் தங்கள் தேவைகளைக் குறைத்து தியாகம் செய்யவேண்டியிருந்தது,” என தன் ஆரம்ப பயிற்சி நாட்கள் பற்றி நினைவு கூர்கிறார் மீராபாய்.
எப்படியும் பளுதூக்கும் வீராங்கனையாக வேண்டும் என்ற வெறியோடு, பயிற்சிகளை மேற்கொண்ட அவர், வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தனது முத்திரையை பதித்தார். 2013ல் நடந்த போட்டியில் ஜுனியர் பிரிவில் நாட்டின் சிறந்த வெயிட் லிப்டர் என்ற பட்டத்தை வென்றார்.
மேற்கொண்டு பளுதூக்கும் பயிற்சிகளைப் பெற பட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் மீராவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அங்கு தங்கி பயிற்சி பெற மீராவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே, '2016 ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் நான் பங்கு பெறுவேன். அந்த வாய்ப்பை இழந்தால் வீட்டுக்கே திரும்பி விடுகிறேன்' என சபதத்தோடு வீட்டை விட்டு வெளியேறினார் மீரா.
யாரைப் பார்த்து பளுதூக்கும் வீராங்கனை ஆக வேண்டும் என மீரா கனவு கண்டாரோ, அந்த குஞ்சாணி தேவி தான் பாட்டியாலா பயிற்சி மையத்தில் மீராவுக்கு பயிற்சியாளர். தீரா வேட்கையுடன் பயிற்சிகளில் ஈடுபட்ட மீரா, தேசிய போட்டிகளில் அசத்தி 2014 ல் நடந்த காமன் வெல்த் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றார். அதில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்ற அவருக்கு, 2016ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அதில் 48 கிலோ எடைப்பிரிவில் ஆறாவது இடத்தையே மீரா பிடித்தார். இதனால் பதக்கம் வெல்லும் கனவு அப்போது அவருக்கு கைகூடவில்லை.
ஆனாலும் அசராத மீரா, அமெரிக்காவில் நடந்த 2017 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் 194 கிலோவை அசால்டாக தூக்கி நிறுத்தி தங்கத்தை வென்றார். அதன் தொடர்ச்சியாக 2020ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் 49 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார்.
"இந்த வெற்றி எனக்குள் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது எனது அடுத்த இலக்கு," என அப்போதே தெரிவித்திருந்தார் மீரா.
அவர் எதிர்பார்த்தது போல, தங்கம் கிடைக்காவிட்டாலும் வெள்ளியைப் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்துள்ளார்.
2016ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதற்கடுத்து தற்போது பளு தூக்கும் போட்டியில் மீராபாய் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்திருக்கிறார்.
“ஒரு கிளாஸ் பால் வாங்கிக் குடிக்கவே முடியாத குடும்பத்தை சேர்ந்த நான் இன்று இந்தியாவிற்கே பெருமையையும், கவுரவத்தையும் உலக அரங்கில் பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சி. அதன் மூலமாக விளிம்பு நிலையில் இருக்கின்ற பெண் குழந்தைகளும் திறமையும், தகுதியும் இருந்தால் விளையாட்டில் அசத்தலாம் என நம்புகிறேன்,” இது 2017 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற போது மீரா கூறிய வரிகள்.
நிச்சயம் தனது வெற்றிகளால் விளிம்பு நிலையில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் நம்பிக்கையை விதைத்துள்ளார் மீராபாய் சானு.