சந்தா அடிப்படையில் பால், பிரெட் டெலிவரி சேவையை சென்னையில் துவக்கியது 'ஜியோ மார்ட்'
மே மாதம் முதல் 200 நகரங்களில் செயல்பட்டு வரும் ஜியோமார்ட், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பால் மற்றும் பிரெட் டெலிவரி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் மளிகைப் பொருட்கள் சேவையான ஜியோமார்ட், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், பால், பழங்கள் மற்றும் பிரெட் விநியோகச் சேவையை துவக்கியுள்ளது.
சந்தா அடிப்படையிலான இந்த சேவையை JioMart செயலியில் அணுகலாம். பயனாளிகள் சேவையின் துவக்க தேதியை குறிப்பிட்டு, தினமும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாராந்திர, மாந்தாந்திர அடிப்படையில் டெலிவரியை தீர்மானித்துக்கொள்ளலாம்.
இதன் மூலம், சந்தா அடிப்படையில் பால், மளிகைப்பொருட்களை வழங்கும், மில்க்பாஸ்கெட், பிக்பாஸ்கெட்டின் பிபிடெயிலி, ஸ்விக்கியின் சூபர்டெய்லி ஆகிய சேவைகளுடன் ஜியோமார்ட் போட்டியிடுகிறது.
பால், பழங்கள், பிரெட் தவிர வாடிக்கையாளர்கள், மலர்கள், இட்லி மாவு போன்றவற்றையும் தருவித்துக்கொள்ளலாம்.
இவற்றுக்கான தொகையை போன்பே, கூகுள்பே, மொபிக்விக், ஜியோமணி மூலம் செலுத்தலாம். இந்த சேவையை வரும் மாதங்களில் அதிக நகரங்களில் அறிமுகம் செய்ய ஜியோமார்ட் திட்டமிட்டுள்ளது.
ஜியோமார்ட் சேவை குறிப்பிட்ட இடத்தில் செயல்படுகிறதா என்பதை அறிய, பின்கோடை சமர்ப்பித்து தகவல் தெரிந்து கொள்ளலாம். ஜியோமார்ட்டின் சந்தா பகுதியில் டெலிவரி தகவல்களை பின் தொடரலாம்.
ரிலையன்சுக்கு சொந்தமான, ஜியோமார்ட் மே மாதம் 200 நகரங்களில் அறிமுகமானது. ஏற்கனவே ஐந்து மில்லியனுக்கு மேல் இந்த செயலி டவுண்லோடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ மற்றும் அடுத்த கட்ட நகரங்களில் இந்த சேவை செயல்படுகிறது.
ஜியோமார்ட், எம்.ஆர்.பி விலையை விட குறைந்தபட்சம் 5 சதவீதம் குறைவாக விற்பதாக கூறுகிறது. சில நேரங்களில் 20 அல்லது 30 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.
ரிலையன்சின் ரீடைல் ஆற்றல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் பரவலான ஆன்லைவீச்சை ஆதாரமாகக் கொண்டு இந்த சேவை செயல்படுகிறது.
ரிலையன்சில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அதன் புதிய வர்த்தக பாதையில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஜியோவின் மொபைல் வீச்சு, ரிலையன்ஸ் ரீடைல் மையங்கள் மற்றும் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் செய்யும் வசதியை அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுகிறது.
"ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், ரீலையன்ஸ் ரீடைலை தொழில்நுட்பம் மற்றும் அதன் பரப்பு ஆகியவற்றின் காரணமாக ஒருங்கிணைந்த, புதுமையாக நிறுவனமாக முன்னிறுத்தியுள்ளது.
மளிகைக் கடைகள் மற்றும் இந்திய நுகர்வோர், ரிலையன்ஸ் ரீடைலின் இணைப்பு, செயல்திறன் மற்றும் அணுகல்தன்மை ஆகியவற்றின் மூலம் பலன் பெறும் வகையில் ரீடைல் அனுபவத்தை அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்ற முயற்சிக்கும் இந்நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் உற்சாகம் கொள்கிறோம்,” என ரிலையன்ஸ் ரீடைலில் ரூ.1,837 கோடி முதலீடு செய்துள்ள டிபிஜி நிறுவன சி.இ.ஓ ஜிம் கூல்டர் கூறியுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்-சைபர்சிம்மன்