தண்ணீரில் சிக்கியவர்களை மீட்க சைக்கிள் வடிவமைத்த கீழக்கரை இரட்டையர்கள்!
ராமநாதபுரம் கீழக்கரை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் இரட்டையர்களான நஸ்ருதீன் மற்றும் அசாருதீன் தண்ணீரில் சிக்கியவர்களை மீட்க உதவும் மிதவை சைக்கிளை வடிவமைத்துள்ளனர்.
ராமநாதபுரம் கீழக்கரை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் இரட்டையர்களான நஸ்ருதீன் மற்றும் அசாருதீன். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான இவர்கள் இருவரும் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதல் இந்த நோய்தொற்று பாதிப்பால் உயிரிழந்த ஆதரவற்றவர்களின் உடல்களை இவ்விருவரும் அடக்கம் செய்து வந்தனர்.
வழக்கமாக கரையோரங்களில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பலர் தண்ணீரில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதுதவிர தண்ணீர் பிடிக்கச் செல்லும் கிராமமக்கள் தவறி விழுந்து குளங்களில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இதுபோன்று தண்ணீரில் சிக்கித் தவிப்பவர்களை இந்த இரட்டையர்கள் மீட்க விரும்பினார்கள். இதற்காக தண்ணீரில் மிதக்கும் மிதவை சைக்கிளை வடிவமைத்துள்ளனர்.
தண்ணீரில் மிதக்கும் வகையில் வடிவமைப்பதற்காக 12 தண்ணீர் கேன்கள், இரும்பு கம்பிகள், சைக்கிளின் சக்கரங்கள், படகு இயங்கத் தேவையான புரொபெல்லர் கருவி போன்றவற்றைக் கொண்டு இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளனர். கீழக்கரை கடலில் இந்த சைக்கிளை இயக்கி சோதனையும் செய்துள்ளனர்.
இந்த மிதவை சைக்கிள் 10 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 180 கிலோ எடை வரை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் இந்த சகோதரர்கள். இதில் 3 பேர் வரை பயணிக்கலாம்.
“மக்கள் கடலில் குளிக்கச் செல்கிறார்கள். நாட்டு படகுகளில் பயணிக்கிறார்கள். வெள்ளம் ஏற்படுகிறது, இதுபோன்ற பல சூழல்களில் பலர் தண்ணீரில் தவறி விழுந்துவிடுகின்றனர். உதவி கிடைக்காமல் போனால் இவர்கள் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இந்த மிதவை சைக்கிள் இதுபோன்றவர்களைக் காப்பாற்றப் பயனுள்ளதாக இருக்கும்,” என்கிறார் இரட்டையர்களில் ஒருவரான அசாருதீன்.
இரட்டையர்களில் மற்றொருவரான நஸ்ருதீன் கூறும்போது,
“குளங்களில் இந்த மிதவை சைக்கிளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கடலில் ஒரு குறிப்பிட்ட அளவு வரை பயன்படுத்திக் கொள்ளமுடியும். ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பு நாங்களே களமிறங்கி இயன்ற வகையில் உதவலாம் என்கிற நோக்கத்துடன் இந்த கண்டுபிடிப்பை வடிவமைத்துள்ளோம்,” என்றார் .
இந்த மிதவை சைக்கிள் வடிவமைப்பை மேலும் மேம்படுத்தி 40 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் விதத்தில் உருவாக்க இந்த இரட்டையர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தகவல் உதவி: நியூஸ்18