மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஐஏஎஸ் தேர்வு பயிற்சி அளிக்கும் கேரள கல்வியாளர்!
கேரளாவின் ஜோபின் கொட்டாராம் தனது ’அப்சல்யூட் ஐஏஎஸ் அகாடமி’ மூலம் செயல்படுத்தி வரும் ’சித்ரசலபம்’ திட்டம் வாயிலாக, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிவில் சர்விஸ் பயிற்சி அளித்து வருகிறார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், கேரளாவின் வயநாட்டில் உள்ள கம்பளக்காடு பகுதியைச் சேர்ந்த ஷெரின் சகானா, மாடியில் இருந்து தவறி விழுந்து, சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக படுத்த படுக்கையில் இருந்ததால், அவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பினார்.
ஆனால், குடும்பத்தினரின் ஆதரவும், சொந்த உறுதியும் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளச் செய்தது. அவர் தனது ஆரோக்கியத்தை மீட்க முடிவெடுத்தார்.
2021ல் சகானா தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை துவக்கினார். குடிமைத் தேர்வுகளுக்காக தயாராகத் துவங்கினார். யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் Chithrasalabham திட்டம் மூலம் இது சாத்தியமானது. நம்பிக்கை பேச்சாளரும், அப்சல்யூட் ஐஏஎஸ் அகாடமி நிறுவனருமான ஜோபின் எஸ்.கொட்டராம் இதை நடத்தி வருகிறார்.
“பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். நான் சிவில் சர்வீசில் சேர விரும்பினேன். ஜோபின் சார் எனக்கு சரியான வாய்ப்பும், வழிகாட்டுதலும் வழங்கி, கனவு நினைவாக வழி செய்தார்,” என்று சோஷியல் ஸ்டோரியிடம் பேசும் போது சகானா கூறினார்.
சகானாவும், அவரைப்போல பலரும் இந்த திட்டம் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது இந்த மையம், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக பல்வேறு பாதிப்புகள் கொண்ட 100 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
"யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினமானது, மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் சவலானானது. இருப்பினும், உறுதி மூலம் எதையும் அடையலாம் என நம்புகிறேன். அதற்காக தான் இந்த திட்டம். ’சித்ரசலாபம்’ என்றால் மலையாளத்தில் ’பட்டாம்பூச்சி’ என்று பொருள். மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிறகடித்து பறக்க உதவ விரும்புகிறோம்,” என்று சோஷியல் ஸ்டோரியுடம் கொட்டராம் கூறினார்.
எண்ணம்
கோட்டராம் கேரளாவின் சங்கனேசரி நகரில் பிறந்து வளர்ந்தவர். சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவருக்கு இருந்தது. வர்த்தக உலகில் 15 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 2010ல் அவர் யூபிஎஸ்சி தேர்வு எழுதினார். அவர் தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்காணலில் 2 மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறவில்லை.
“சமூக மேம்பாட்டிற்காக பணியாற்ற விரும்பியதால், இந்த தோல்வியால் மிகவும் மனம் உடைந்தேன். ஆனால், சமூகத்திற்கு உதவும் இலக்கை நிறைவேற்ற மற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற வழிகாட்டலாம் என தீர்மானித்தேன்,” என்கிறார்.
இந்த எண்ணத்தோடு 2010ல் ஐஏஸ் அகாடமி துவக்கினார். மலையாளம் மற்றும் சமூகவியலில் பயிற்சி அளிக்கத்துவங்கினார். 9 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அகாடமி கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
மேலும், மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், தேர்வுக்கு தயாராக உதவும் யூடியூப் வீடியோக்களையும் உருவாக்கத்துவங்கினார். ஒரு வீடியோவில், சிறப்பு திறன் கொண்டவர்களும் தேர்வு எழுதலாம் என்பது பற்றி பேசினார்.
“இதையடுத்து, அவருக்கு தொலைபேசி செய்த ஒரு மாற்றுத்திறனாளி மாணவி, எங்கு தேடியும் மாற்றுத்திறனாளிகள் யூபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக நிதி உதவி கிடைக்கவில்லை,” எனத் தெரிவித்தார்.
ஆய்வு செய்த போது அவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மையங்கள் இல்லை என தெரிந்து கொண்டார். இதையடுத்து, சிறப்பு தேவை கொண்டவர்களுக்கு இலவச யூபிஎஸ்சி தேர்வு பயிற்சி அளிக்கும் சித்ரசலபம் திட்டத்தை துவக்கினார்.
“குடிமைப் பணிகளில் மாற்றுத்திறனாளிகள் மிகவும் குறைவாக உள்ளனர். எல்லோருக்கும் இந்த தேர்வு சாத்தியமாக வேண்டும் என விரும்புகிறேன்,” என்கிறார்.
இந்த தேர்வுகள் கடினமானது என்பதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு இன்னும் சவாலானது.
“அவர்கள் தங்கள் நிலையால் அதிருப்தி அடைந்து, கோபம் கொள்கின்றனர். தகவல்களை புரிந்து கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது. அவர்களுக்கு ஊக்கம் அளித்து இலக்கை நோக்கி முன்னேற என்னால் இயன்றதை செய்கிறேன்,” என்கிறார்.
உதவிக்கரம்
இந்த திட்டத்தின் முதல் பிரிவில் பயிற்சி பெற்ற 25 பேரில், சகானா 918வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். 2023 மே மாதம் அவர் ரெயில்வே நிர்வாக பணியில் சேர்ந்தார். இரண்டு மாணவர்கள் வங்கித்தேர்வில் மற்றும் முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மூன்று மாணவர்கள் நேர்காணல் இறுதி சுற்று அழைப்பிற்காக காத்திருக்கின்றனர்.
யூபிஎஸ்சி தேர்வில் முதல் கட்டத்தில் இரண்டு பாடங்கள் உள்ளன. பின்னர், பிரதான சுற்றில் 9 பாடங்கள் உள்ளன. எல்லா சுற்றுகளிலும் வெற்றி பெற்றால், நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்கிறார்.
30 பயிற்சியாளர்களுடன் இந்த அகாடமி காலை 10 முதல் நண்பகல் 1 வரை வகுப்புகள் நடத்துகிறது. ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் பாடம் நடத்தப்படுகின்றன. வாராந்திர தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. கேரளா, பீகார், பஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 100 பேர் பயில்கின்றனர்.
“யாரேனும் தங்கள் தாய் மொழியில் தேர்வு எழுத விரும்பினால் அதற்கான பாடங்களை அளிக்கிறோம் என்கிறார். இது தவிர மற்ற மாணவர்களுக்கான வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
கோட்டராம் அகாடமி மூலம் வரும் வருவாயை இந்த திட்டத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார். ஸ்ரேஷ்டா பாரத் எனும் திட்டத்தையும் துவக்க திட்டமிட்டுள்ளார். இதன் கீழ், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இலவச பயிற்சி அளிக்க விரும்புகிறார்.
"இந்த திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்க விரும்புகிறேன். இதை ஒரு சமூக திட்டமாக மாற்றுவதே என் நோக்கம். இதன் மூலம் உயர் பதவிக்கு வருபவர்கள் தங்களால் இயன்ற உதவியை அவர்களைப்போன்றவர்களுக்கு செய்வார்கள் என நம்புகிறேன்,” என்கிறார்.
ஆட்டிசம், பார்வையற்ற மாற்றுத் திறனாளி சிறுவர்களை மேடைப் பாடகர்கள் ஆக்கும் பின்னணிப் பாடக நண்பர்கள்!
Edited by Induja Raghunathan