தமிழகத்தில் மூன்று புதிய கிளைகளைத் தொடங்கியது ’Kinara Capital’ நிதி நிறுவனம்!
இந்த வங்கிசாரா நிதி நிறுவனம், தமிழ்நாட்டில் சிவகாசி, தேனி மற்றும் தூத்துக்குடியில் கிளைகளைத் தொடங்கி 2 முதல் 25 லட்சம் ரூபாய் வரை சிறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு எந்தவித சொத்து அடமானம் இல்லாமல் கடன் தொகை வழங்க உள்ளது.
சிறு வணிகர்களுக்கு எளிய வழிமுறைகள் மூலம் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு விரைவாகக் கடன் வழங்கி வரும் பெங்களூரூவைச் சேர்ந்த ’கினாரா கேப்பிடல்’ (Kinara Capital) நிறுவனம் தமிழகத்தில் தமது வர்த்தகத்தை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த வங்கிசாரா நிதி நிறுவனம், தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களான சிவகாசி, தேனி மற்றும் தூத்துக்குடி போன்ற இடங்களில் தற்போது கிளைகளைத் தொடங்கி உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள கினாரா கேப்பிடல் கிளைகளின் எண்ணிக்கை 30ஐ எட்டியுள்ளது.
கினாரா கேப்பிடலைப் பொறுத்தவரை, தமிழகம்தான் அதன் மிகப் பெரிய சந்தை என கருதுகிறது. அதோடு, இந்நிறுவனத்தின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பான சுமார் 700 கோடி ரூபாயில், 34 சதவீத அளவு தமிழகத்தில் பல்வேறு தரப்பினருக்கு கடன்களாக வழங்கப்பட்டுள்ளது.
கினாரா கேப்பிடல் நிறுவனம், தமிழகத்தில் தனது முதல் கிளையை கோவை நகரத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல், இன்று வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 13 ஆயிரம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு தொழில் முனைவர்களுக்கு கடன் வழங்கியுள்ளது.
இந்தக் கடன் பெற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் முதன்முறையாக சட்டதிட்டத்திற்கு உட்பட்டு முறையான வழியில் கடன் பெறுபவர்கள் அல்லது முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கினாரா கேப்பிடல் நிறுவனம், 2 முதல் 25 லட்சம் ரூபாய் வரை சிறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு கடன் தொகையாக வழங்குகிறது. இந்தக் கடனை எந்தவிதமான சொத்துகளையும் அடமானமாகக் கேட்காமல், 5 முதல் 7 நாட்களுக்குள் வழங்கி வருகிறது.
கினாரா கேப்பிடல் நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்து செய்தியாளர்களிடையே பேசிய அதன் தலைமை செயல்பாட்டு அதிகாரி (COO) திரு. திருநாவுக்கரசு, “தமிழ்நாடு என்றாலே கடும் உழைப்புக்கும், சுய தொழில் முயற்சிக்கும் பெயர் பெற்ற இடமாகும். இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் கூட, வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள இடமாக இன்று பார்க்கப்படுவது தமிழகம்தான். அவ்வகையில்,
”இங்கே சிறு தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்போது, அவற்றுடனேயே தொழில்முனைவர்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான கடன் வசதியும் தேவைப்படுகிறது. இதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளதால், சிறு தொழில்முனைவர்களின் வீடு தேடி சென்று அவர்களுக்கு தேவைப்படும் பணத்தை கடன் வசதி மூலம் விரைவாகப் பெற ஏற்பாடுகள் செய்கிறோம்,” என்று தெரிவித்தார்.
இந்திய மாநிலங்களிலேயே ‘பொருளாதார ரீதியில் வலுவானவை’ என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழகம். இங்கே கிட்டத்தட்ட 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்கள் உள்ளனர். அதோடு, இம்மாநிலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் தற்போது மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. ஆனாலும், அங்குள்ள பலர் தங்களது தொழில் தொடர்பான காரியங்களுக்கு அவசரமாக தேவைப்படும் நிதியை, கடனாகப் பெற இயலாமல் தடுமாறுகிறார்கள். இந்த நிலைதான் பெருவாரியான தொழில்முனைவோர்களுக்கு உள்ளது.
காரணம், கடனுக்கு பிணையாக வழங்க, அவர்களிடம் எந்த சொத்தும் இல்லை என்பதுதான். இதுபோன்ற சூழலில்,
தொழில் புரிவோருக்குத் தேவையான பிணையில்லாத கடன் வசதியை கினாரா கேப்பிடல் வழங்க முன்வருகிறது. இந்தக் கடன்தொகை - தொழில் நிறுவனத்தின் அன்றாட நடைமுறைச் செலவுகளுக்காக என்றாலும், புதிய இயந்திரம் வாங்கவ, செயல்படும் நிலையில் உள்ள பழைய இயந்திரத்தை வாங்கவோ விரும்பினாலும் கடன் கிடைக்கும்.
கினாரா கேப்பிடல் நிறுவனம், இதுவரை இந்தியா முழுவதும் உள்ள சுமார் 35,000 பேருக்கு மொத்தமாக 1,200 கோடி ரூபாயைக் கடனாக வழங்கியுள்ளது. இதன்மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரக்கூடிய, சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அது புதிய வேலைகளை உருவாக்குவதில் தொடங்கி, தனி நபர் நிறுவன வருமானத்தைப் பெருக்குவது என இன்னும் நீள்கிறது.
அதோடு, இந்நிறுவனத்தின் கடன்வசதி பெற்ற சிறு வணிகர்கள் புதிதாக உருவாக்கும் வேலை வாய்ப்புகளில் 22 சதவீதம் வரை பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல, இவ்வாறு உருவான பணியால் வேலைவாய்ப்பு பெற்றவர்களில் சுமார் 28% பேர், முதல்முறையாக வேலைக்குச் சென்று பொருள் ஈட்டத் தொடங்கியுள்ளவர்கள் என்பவை குறிப்பிடத்தக்கவை.
கட்டுரையாளர்: இந்துஜா ரகுனாதன்