புலம் பெயர் இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பும் பணம் எவ்வளவு தெரியுமா?
இந்த ஆண்டு மட்டும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்கள் 100 பில்லியன் அளவு பணத்தை நமது நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்கள் 100 பில்லியன் அளவு பணத்தை நமது நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடும்’ என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் விதமாக வளைகுடா நாடுகள் தொடங்கி மேற்கத்திய நாடுகள் வரை இந்தியர்கள் கால் பதிக்காத துறையோ, பன்னாட்டு நிறுவனமோ கிடையாது. அதனால் தான் கூகுள் முதல் ட்விட்டர் வரை அனைத்தையும் வழிநடத்தும் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
சொந்த குடும்பத்தை காப்பதற்காக வேலை நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் உலகிலேயே அதிகம் பணம் அனுப்பப்படும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடிக்க காரணமாக அமைந்துள்ளனர்.
மேலும், நம் நாட்டைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள், இந்த ஆண்டு, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான இந்தியாவின் நிதி நிலையை உயர்த்தியுள்ளனர், என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்ந்த இந்தியர்கள் அனுப்பிய பணம்
புதன் கிழமை உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி,
இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணம் இந்த ஆண்டு 12% அதிகரித்து 100 பில்லியன் டாலர்களை எட்டும். இது மெக்சிகோ, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற பணக்கார நாடுகளில் வசிக்கும் அதிக அனுபவமும், செயல்திறனும் கொண்ட புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்களது வீட்டிற்கு அதிக அளவிலான பணத்தை அனுப்புகின்றனர்.
அதேசமயத்தில், வளைகுடா நாடுகளில் குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்ப்பதை இந்திய தொழிலாளர்கள் குறைந்து வருவதாகவும், ஊதிய உயர்வு, அதிக வேலை வாய்ப்பு, ரூபாயின் மதிப்பு பலவீனம் அடைந்ததும் வெளிநாட்டில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் ஊதியம் உயரக் காரணமாக அமைந்துள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவிழந்த போதிலும் வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்த இந்தியர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வரும் பணத்தை மதிப்பு 100 பில்லியன் டாலர்கள் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இது இந்தியாவின் அந்நிய செலாவணி அதிகரிக்க முக்கியக் காரணமாகவும் அமைந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணமானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3% நிதி இடைவெளிகளை நிரப்புவதற்கும் முக்கியக் காரணமாக அமைகிறது.
அதிக வருமான கொண்ட நாடுகளில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு பணப்பரிமாற்றம் 2016 - 17ம் ஆண்டு காலக்கட்டத்தில் 26 சதவீதமாக இருந்த நிலையில், அது 2020 - 21ம் ஆண்டு 36 சதவீதமாக உயர்ந்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட ஐந்து வளைகுடா நாடுகளின் பங்கு அதே காலகட்டத்தில் 54% இலிருந்து 28% ஆக குறைந்துள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தெற்காசியா முழுவதும் இந்த போக்கு ஒரே மாதிரியாக இல்லை. பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் ஈட்டும் பணம் இந்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள், உக்ரைன் - ரஷ்யா போர், புவியியல் அரசியல் பதற்றங்கள், கொரோனா வைரஸ் பரவல் போன்ற காரணிகள் அந்த நாடுகளை குறிப்பாக கடுமையாக பாதித்தாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
தொகுப்பு - கனிமொழி