ரூ.25 கோடி முதலீட்டில் கோவையில் ‘பூம் மோட்டார்ஸ்’ - ஆண்டுக்கு 1 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி!
கோவையில் செயல்படும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் ‘பூம் மோட்டார்ஸ்’ ரூ.25 கோடி முதலீட்டில் தொடக்கப்பட்டு, ஆண்டுக்கு 1 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு முக்கியமான தொழிலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கும். அந்த சந்தையை பிடிப்பதற்கு பல நிறுவனங்கள் போட்டியிடுகின்றன, தேவையான முதலீட்டை திரட்டி வருகின்றன. இந்த வரிசையில் கோவையை சேர்ந்த பூம் மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்திருக்கிறது.
அமெரிக்காவில் மெக்கென்ஸி நிறுவனத்தில் ஆலோசகராக இருந்தவர் அனிருத் நாரயணன். சொந்த முதலீடு மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உதவியுடன் ‘பூம் மோட்டார்ஸ்’ நிறுவனத்தை இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்.
தற்போது 170 பணியாளர்கள் இங்கு பணிபுரிகின்ற்னர். கடந்த நவம்பர் முதல் இரு சக்கர வானகத்தை உற்பத்தி செய்து வருகிறது. ஆரம்பத்தில் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த பூம் மோட்டார்ஸ் தற்போது ரீடெய்ல் விற்பனையை தொடங்க இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் நிறுவனர் அனிருத் நாராயணிடம் பூம் மோட்டார்ஸ் குறித்து விரிவாக உரையாடினார்.
தொடக்க காலம்
அனிருத் நாரயணன் தமிழர் என்றாலும் பிறந்து வளர்ந்தது அனைத்தும் பெங்களூருவில்தான். இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, யேல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துள்ளார். சில டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை செய்த பிறகு, பிரபல நிறுவனமான மெக்கென்ஸியில் வேலை கிடைத்தது.
இந்த சமயத்தில் இந்தியாவுக்கு வந்தேன். என்னுடைய மகனுக்கு சுவாசம் தொடர்பான சிக்கல் உருவானது. கார்டன் நகரம் என்று சொல்லக்கூடிய பெங்களூருவிலே நிலைமை இதுதான். தவிர அதிக மாசடைந்த நகரங்களில் பெங்களூரு இல்லை. இருந்தும் சுவாசம் சம்பந்தமான பிரச்சினை வருகிறது. தவிர காற்றுமாசு பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.
“ஒட்டுமொத்த காற்று மாசுபாட்டில் வாகனங்களின் பங்கு சிறியது என புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், நகரங்களில் 60 சதவீத மாசுக்கு வாகனங்கள்தான் காரணம். மேலும், இந்தியாவின் பொருளாதாரத்துக்கு பெட்ரோல் டீசல் வாகனங்கள் நல்லதல்ல. நமக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 80 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்கிறோம். அதனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவை உயரும் என்பதால் இந்த பிரிவில் களம் இறங்கினோம்.”
தற்போதைய பிரச்சினை என்ன?
எலெக்ட்ரிக் வாகனங்களுக்குத் தேவை இருக்கிறது என்பது புரிகிறது. ஆனால், இப்போது இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள சிக்கல் என்ன என்பதை கண்டறிந்து அதுவும் இல்லாமல் ஒரு வாகனமாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம்.
இந்திய குடும்பங்கள் என்பது சராசரியாக நான்கு நபர்கள்தான். நடுத்தரக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை இதுதான். ஆனால் நால்வர் (இரு பெரியவர் மற்றும் இரு சிறியவர்கள்) பயணம் செய்ய முடியாத சூழல்தான் இருக்கிறது. வண்டி இழுக்கவில்லை அல்லது உடையும் தன்மையுடையதாக இருக்கிறது.
அதிக வெயில் காலத்தில் தீ பிடிப்பது, அதிக குளிர்காலத்தில் ஸ்டார்ட் ஆவது உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. தவிர எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் ஏற்றதாக இல்லை. நடுத்தர மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது. இந்த சிக்கல்களை களைய வேண்டும். மேலும், சில எலெக்ட்ரிக் நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்கிறார்கள்.
இந்திய வாடிக்கையாளர்கள் கவனமான வாடிக்கையாளர்கள். தற்போது விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களில் 65 சதவீதம் அளவுக்கு 100 சிசி முதல் 110 சிசி வரையுள்ள மோட்டர்பைக் வாகனங்கள்தான். ஆனால் இந்தப் பிரிவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகமில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்கூட்டர் பிரிவில் கவனம் செலுத்துகின்றன. அதனால் மேற்கண்ட சிக்கல் எதுவும் இல்லாத வாகனங்களை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தோம்.
இரு ஆண்டுகளில் வாகனம்
2019ம் ஆண்டு கோவையில் இதற்கான பணிகளைத் தொடங்கினோம். கோவையில் வானிலை நன்றாக இருக்கும். தவிர திறமையான பணியாளர்களும் கிடைப்பார்கள் என்பதால் கோவையில் ஆலையை தொடங்கினோம்.
இதுவரை சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறோம். சொந்த முதலீடு, நண்பர்கள் என எங்களுடைய நெட்வொர்க்கில் இருப்பவர்கள் மட்டும் முதலீடு செய்திருக்கிறார். வென்ச்சர் கேபிடல் / பிரைவேட் ஈக்விட்டி நிதியை இதுவரை பெறவில்லை.
இந்தியாவில் பேட்டரியின் செல், சிப், மேக்னட் ஆகிய மூன்றுக்கும் உற்பத்தியாளர்கள் இல்லை என்பதால் இதனை மட்டும் இறக்குமதி செய்கிறோம். மற்ற அனைத்தும் எலெக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் பணிகள் அனைத்தும் இங்கே செய்கிறோம்.
நாங்கள் இந்தியா வந்த உடனே கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் குறைந்த பணியாளர்களை வைத்து ஆராய்ச்சியை தொடங்கினோம். 3 ஏக்கரில் எங்களுடைய ஆலையை அமைத்திருக்கிறோம். கடந்த நவம்பரில் இரண்டு சக்கர ஸ்கூட்டர் ‘Corbett 14’ என்ற ப்ராண்ட் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறோம், என்றார்.
அனைத்து விதமான அடிப்படைத் தகவல்களும் திரட்டிய பிறகு வாகனத்தை அறிமுகம் செய்வதற்கு இரு ஆண்டுகள் என்பது நீண்ட காலம் இல்லையா என்று கேட்டதற்கு, இது மிகவும் குறுகிய காலம். ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரை ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்வதற்கு மூன்று முதல் ஐந்தாண்டுகள் ஆகும். ஆராய்ச்சி, சோதனை, ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி என மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதால் இரு ஆண்டுகள் என்பது குறைவான கால கட்டம்தான்.
நிதி சார்ந்த தகவல்கள்
ஆரம்பத்தில் பி2பி முறையில் எங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்தோம். இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு எங்களுடைய ஸ்கூட்டரை வழங்கினோம். தற்போது ரீடெய்ல் முறையில் விற்பனையைத் தொடங்கி இருக்கிறோம். தென் இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட டீலர்களை நியமனம் செய்திருக்கிறோம். இன்னும் ஒரிரு வாரங்களில் அனைத்து மையங்களும் செயல்படத்தொடங்கும்.
”எங்களுடைய ஆலையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், எங்களுடைய முன்பதிவு 1.50 லட்சமாக இருக்கிறது. அதனால் தற்போதைக்கு முன்பதிவை நிறுத்தி வைத்திருக்கிறோம். அதனால் மேலும் ஒரு ஆலையை அமைப்பதற்கான திட்டத்திலும் இருக்கிறோம்,” என்றார்.
பூம் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 87,000 ரூபாய், இந்த விலை மிக அதிகமே என்று கேட்டதற்கு, சந்தையில் உள்ள வாகனங்களை ஒப்பிடும் போது இது குறைவு தான்.
தவிர 25,000 ரூபாய் முன்பணம் செலுத்தி எங்கள் வாகனத்தை எடுத்துக்கொள்ளலாம். மாதம் 1700 ரூபாய் அளவுக்கு இஎம்.ஐ செலுத்துவதன் (ஐந்தாண்டுகளுக்கு) மூலம் எங்களுடைய வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
”வழக்கமான ஐசிஇ இன்ஜின் பொறுத்தப்பட்ட வாகனங்களில் ஒரு கிலோமீட்டர் செல்வதற்கு 2 ரூபாய் செலவாகும். ஆனால், எங்களுடைய வாகனத்தில் 20 பைசா மட்டுமே செலவாகும். 4 மணி நேரம் சார்ஜ் ஏற்றினால் 70 முதல் 80 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம். நெடுஞ்சாலையில் செல்லும் போது இன்னும் அதிக தூரம் கூட செல்ல முடியும். அதிகபட்சம் மணிக்கு 75 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். அதேபோல, 200 கிலோ எடையை எங்களுடைய வாகனம் தாங்கும்,” என்றார்.
இந்த புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டால் எலெக்ட்ரிக் வாகனத்தை கையாளுவதற்கு செலவு குறைவு என்பது புரியும். நீண்ட கால அடிப்படையில்தான் எலெக்ட்ரிக் வாகனத்தின் பயனை புரிந்துகொள்ள முடியும். இப்போது வரை உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்தி வருகிறோம். வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்பு வருகிறது. ஆனால் முன்னுரிமை உள்நாட்டுக்கு கொடுக்கிறோம்.
இப்போதைக்கு இவர்களிடம் ஒரு மாடல் மட்டுமே இருக்கிறது. இரு சக்கர பிரிவில் சில மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம் என அனிருத் தெரிவித்தார்.
2030-ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகன சந்தை 206 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது என்பதால் ஒவ்வொரு நிறுவனமும் பரபரபாகவே இயங்குகின்றன.