LIC ஐபிஓ மே 4ம் தேதி: பங்கு விலை, பட்டியலிடப்படும் தேதி விவரங்கள் இதோ!
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட எல்.ஐ.சியின் ஐபிஓ மே மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருக்கிறது. இந்த ஐபிஒவுக்கு மே 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது பற்றிய முறையான அறிவிப்பு தற்போது வெளியானது.
எல்.ஐ.சி.-யில் தற்போது மத்திய அரசு வசம் 100 சதவீத பங்குகள் உள்ளன. இதில் இருந்து 3.5 சதவீத பங்குகளை மத்திய அரசு விலக்கிகொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம், சுமார் 21000 கோடி ரூபாய் வரை அதன் பங்கு மதிப்பு இருக்கும் என மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த ஐபிஒ-வில் சுமார் 22 கோடி பங்குகள் வரை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
தற்போதைய நிலையில் எல்.ஐ.சியின் மொத்த சந்தை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு எல்.ஐ.சியின் மதிப்பு சுமார் 17 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இரண்டாவது பெரிய நிறுவனமாக எல்.ஐ.சி உருவாகும் எனக் கருதப்பட்டது. ஆனால் போர் மற்றும் முதலீட்டாளர்களிடன் ஆர்வம் குறைந்த காரணங்களால் சந்தை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக சரிந்தது.
தற்போது சூழலில் எல்.ஐ.சி இந்தியாவின் ஐந்தாவது பெரிய நிறுவனமாக இருக்கும்.
கடந்த நிதி ஆண்டுக்குள் எல்.ஐ.சி. ஐபிஓவை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவந்தது. அதற்கான அனைத்து அனுமதியும் பெறப்பட்டன. ஆனால், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஐபிஓ தள்ளிப்போனது.
தற்போது வாங்கப்பட்ட அனுமதி மூலம் மே மாதம் 12-ம் தேதிக்குள் ஐபிஓ வெளியிடலாம். ஒரு வேளை இந்த தேதிக்குள் ஐபிஓ வெளியிடவில்லை என்றால் டிசம்பர் காலாண்டு முடிவுகளையும் சேர்த்து மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டி இருக்கும்.
பங்கு விலக்கல் மூலம் நடப்பு நிதி ஆண்டில் சுமார் 65,000 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த நிதியை திரட்ட வேண்டும் என்றால் எல்.ஐ.சி. ஐபிஒ மத்திய அரசுக்கு முக்கியமாகும்.
கடந்த நிதி ஆண்டில் ஐந்து சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 21000 கோடி மட்டுமே திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. விற்பனை செய்யப்படும் தொகை கணிசமாக குறைந்தாலும் இந்தியாவில் வெளியாகும் மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும்.
கடந்த கால ஐ.பி.ஓ.க்கள்
கடந்த 2021-ம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு ரூ.18300 கோடி திரட்டியது. 2010ம் ஆண்டு கோல் இந்தியா நிறுவனம் 15500 கோடி ரூபாய் திரட்டியது. அதற்கு முன்பு 2008-ம் ஆண்டு ரிலையன்ஸ் பவர் 11700 கோடி ரூபாய் திரட்டியதே இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஒகள் ஆகும்.
”சந்தையில் வெளியிட சரியான நேரம் என்று ஒன்று கிடையாது. சரியான நேரத்தை துல்லியமாகக் கணிக்க முடியாது. எல்.ஐசி ஐபிஓவுக்காக பல காலம் திட்டமிடப்பட்டது. தற்போது வெளியாக இருக்கிறது என டிஐபிஏஎம் செயலாளர் டிகே பாண்டே தெரிவித்தார். மேலும் அடுத்த ஓர் ஆண்டுக்கு கூடுதல் பங்குகளை விலக்கிகொள்ளும் (எப்பிஓ) திட்டமில்லை,” என்றும் பாண்டே செய்தியாளர்களிடம் கூறினார்.
முதல் சில ஆண்டுகள் எல்.ஐசி 1.0. போட்டிகள் உருவான பிறகும் எல்.ஐ.சி. சிறப்பாக செயல்பட்டது. இது எல்.ஐசியின் 2.0. தற்போது ஐபிஒ வர இருக்கிறது. இது எல்.ஐ.சியின் 3.0 என நிறுவனத்தின் தலைவர் குமார் தெரிவித்தார்.
பங்குவிலை
ஒரு பங்கின் விலையாக ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறு முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு 45 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல, பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.60 வரை தள்ளுபடி வழங்கப்படும். சுமார் 35 சதவீத பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு லாட் என்பது 15 பங்குகள். 15-ன் மடங்குகளாக மட்டுமே முதலிட்டாளர்கள் விண்ணப்பிக்க முடியும். சிறு முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 14 லாட்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பாலிசிதாரர்களுக்கு
காப்பீட்டுத் துறையில் முதலாவது இடத்தில் எல்.ஐ.சி. இருக்கிறது. மொத்தம் 30 கோடி பாலிசிகள் இந்த நிறுவனம் வசம் உள்ளன. சலுகை விலையில் பங்குகள் கிடைக்க பாலிசியுடன் பான் கார்டை இணைத்திருக்க வேண்டும். பிப்ரவரி 28ம் தேதிக்கு முன்பாக பான் கார்டை இணைத்திருக்க வேண்டும்.
மேலும், டிமேட் கணக்கு கட்டாயம் தேவை. இவை இரண்டும் இருந்தால் விண்ணப்பிக்க முடியும். குரூப் பாலிசி தவிர அனைத்து பாலிசிதாரர்களும் விண்ணப்பிக்க முடியும். ஜாயிண்ட் பாலிசி வைத்திருந்தால் இருவரில் ஒருவர் சலுகை விலையில் பங்குகளை பெற முடியும்.
அதேபோல, சலுகை விலையில் பாலிசியை பெற இந்தியராக இருப்பது அவசியம். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சலுகை விலைக்காக விண்ணப்பிக்க முடியாது.
எல்.ஐ.சி பங்குகள் மே 17-ம் தேதி பட்டியலாகும் எனத் தெரிகிறது.