தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு: 3 வகை மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிலப் பல தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த சில வாரங்களாக நோய்ப் பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கில் பல தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
அதன்படி, வரும் 28-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் அளிப்பது குறித்தும், சென்னை தலைமை செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போதுள்ள ஊரடங்கு ஜூன் 28ம் தேதியோடு முடியவுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் வரும் ஜூலை 5ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
3 வகை மாவட்டங்கள்:
தமிழக மாவட்டங்களை கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்து தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், அதிக தொற்றுள்ள கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களை வகை ஒன்று எனவும், அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 23 மாவட்டங்களை வகை 2 எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களை வகை 3 எனவும் வகைப்படுத்தியுள்ளனர்.
வகை 1ல் உள்ள மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில கடைகள் / செயல்பாடுகளுக்கு மாலை 7.00 மணி வரை நேரத் தளர்வு அளிப்பதுடன், கூடுதலாக பின்வரும் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகிறது.
* தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
*காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாகன விநியோகஸ்தர்களது விற்பனை மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
* கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார் பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் சேவைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் மற்றும் அதன் செயல்பாடுகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
*ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 20 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் குறு நிதி நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காலை 6.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும்,அனுமதிக்கப்படும்.
* பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும்.
* அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடை பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
* இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். இ-சேவை மையங்கள் வழக்கம் போல இயங்கும். மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும், உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம்.
* திரைப்படத் தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகள் அனுமதிக்கப்படும். திறந்த வெளியில், திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 100 நபர்கள் மட்டும் கொரோனா RTPCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பங்கேற்கலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்படும். திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே கடந்த ஊரடங்கு தளர்வில், வகை 3ல் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது 2 வது வகைப்படி பிரிக்கப்பட்டுள்ள 23 மாவட்டங்களிலும் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- மேலும், மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வகை 2 மற்றும் வகை 3ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ - பதிவில்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* அதுபோல, அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செய்லபட அனுமதிக்கப்படும். அதுபோல, வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் சேவைகள் (ATM) 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.இ-சேவை மையங்கள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் குளிர் சாதன வசதி இல்லாமல், ஒரே நேரத்தில் 50% நபர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமாக செயல்படும் நேரத்தில் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
* அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இதர தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்,
*தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
* அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* திரையரங்குகள், விளையாட்டு கூடங்கள் செயல்பட அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போலவே இம்முறையும், வகை 3ல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
* அனைத்து நகை கடைகளும் குளிர்சாதன வசதியின்றி 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. 4 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நகை கடைகள் செயல்பட அனுமதி. குளிர்சாதன வசதியின்றி அனைத்து துணி கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. 4 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து துணி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
* வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களிலும் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும்.
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி கிடையாது.
* காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விளையாட்டு பயிற்சிக் குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.
பொது :
* அனைத்துக் கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
* தீப்பெட்டித் தொழிற்சாலைகள் 100 % பணியாளர்களுடன் செயல்படலாம்.
*வகை 2 மற்றும் 3ல் உள்ள் மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ-பாஸ், இ-பதிவு தேவையில்லை.
* வகை1ல் உள்ள் மாவட்டங்களுக்கிடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களில் இருந்து வகை 1ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ-பாஸ் தேவை.
* திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
* நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் போன்ற பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்கு பயணிக்க இ-பாஸ் அனுமதி அவசியம்.