பிரசவத்துக்கு இலவசமா வாரேன்மா... ஊரடங்கில் உதவி செய்யும் சென்னை இளைஞர்!
லாக்டவுன் காலத்தில் மட்டும் இவர் 83 கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுவரை 41 குழந்தைகள் பிறந்துள்ளது.
லாக்டவுன் தொடங்கி சில தினங்களில் 9 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரை பத்திரமாக செக்-அப் அழைத்துச் செல்லக் கேட்டு அவருக்கு கால் வந்தது. அப்பெண்ணை தன் காரிலேயே மருத்துவமனையில் கொண்டுவிட்டு சுமார் 3 மணிநேரம் காத்திருந்தார். போன் போட்டு நிலவரம் தெரிந்து கொள்ள முயன்றும் பதில் இல்லாததால் வீட்டுக்கு திரும்பினார் அந்த இளைஞர். அடுத்த நாள் அதிகாலை அந்தப் பெண்ணிடம் இருந்து வந்தது கால். ‘சாரி தம்பி, போன் எடுக்க முடியல. எனக்கு நல்லபடியா குழந்தை பிறந்திடுச்சு... 20 நிமிடங்களில் பாப்பா வந்தாச்சு. சிசேரியன் செய்து தான் குழந்தையை எடுத்தாங்க ஆனால் நீங்க சரியான நேரத்துல கொண்டுவிட்டதால எல்லாம் நல்லதா முடிஞ்சது... ரொம்ப நன்றி...” என்றார் அந்த தாய்.
இது சென்னையில் ஊரடங்கு காலத்தில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு. அந்த கர்ப்பிணிப் பெண் தன் நன்றியைத் தெரிவித்தது 23 வயது இளைஞர் லியோ ஆகாஷ் ராஜ் என்பவருக்கு.
யார் இந்த இளைஞர்?
கொரோனாவால் ஊரடங்கில் மக்கள் யாரும் வெளியே வரமுடியாத சூழலில் வீட்டில் கர்ப்பிணிப் பெண்கள் இருந்தால் இன்னும் டென்ஷன் அதிகமே. சொந்தமாக கார் அல்லது வேறு வாகனம் இல்லாதவர்கள், அவசர உதவிக்கு பொதுவாக கால் டாக்சி அல்லது ஆட்டோவில் மருத்துவமனை செல்வார்கள். ஆனால் தற்போது எந்த போக்குவரத்துக்கும் அனுமதி இல்லாததால், ஆம்புலன்ஸ் அல்லது அரசை நாடினால் மட்டுமே சரியான நேரத்தில் ஹாஸ்பிடலை அடையமுடியும்.
இந்த இக்கட்டான சூழலில் கர்ப்பிணிகளுக்கு உதவி வருகிறார் 23 வயது சென்னை இளைஞர் லியோ ஆகாஷ் ராஜ். இவர் ஏன் திடீரென கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக உதவிட முடிவு செய்தார் எனக் கேட்டால்,
“நான் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான உதவிகள் செய்யும் NGO நடத்தி வருகிறேன். ஏழை கர்ப்பிணிப் பெண்கள், கைவிடப்பெண்கள் மற்றும் உடல் பாதிப்புள்ள பெண்களுக்கு உதவி வந்தேன். அதன் நீட்சியாக தற்போது லாக்டவுன் சமயத்தில் எல்லா கர்ப்பிணிகளுக்கும் அவசர உதவி செய்ய முடிவெடுத்தேன்,” என்றார்.
சென்னையில் யாருக்கேனும் பிரசவத்துக்கு அவசர உதவி தேவைப்பட்டால் லியோ தன்னுடைய ஸ்விஃப்ட் அல்லது வேகன் ஆர் காரில் அவர்கள் வீட்டுக்குச் சென்று உடனடியாக பிக் அப் செய்து அவர்கள் செல்லவேண்டிய மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை உடன் இருப்பார். 9-வது மாத நிறைமாத கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே இந்த உதவியை லியோ ஆகாஷ் ராஜ் செய்து வருகிறார்.
லாக்டவுன் நேரத்தில் அவசர உதவி பற்றி கால் வந்தால் அது இரவு நேரமாக இருந்தாலும் உடனே தன் காரை எடுத்துச் சென்றுவிடுகிறார். காவல்துறையினரும் இவரின் வண்டியை பார்த்தவுடன் அனுமதி வழங்கிவிடுகின்றனர்.
பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ சமயத்தில் ரிஸ்க் அதிகம், அதோடு எந்த நேரத்திலும் பிரசவம் ஏற்படும் என்பதால் அதை எப்படி சமாளிக்கிறீர்கள் என்றால்,
“அது நடு இரவாக இருந்தாலும், பிரசவம் என்று கால் வந்தால் அவரின் வீடு எத்தனை தொலைவு இருந்தாலும் நான் என் காரை எடுத்துச் சென்றுவிடுவேன். அவர்களை மருத்துவமனையில் சேர்த்து குழந்தை நலமுடன் பிறந்துவிட்டது என்ற செய்தியைக் கேட்டதும் கிடைக்கும் சந்தோஷத்துக்கு ஈடு இணையில்லை,” என்கிறார்.
எத்தனையோ தன்னார்வ அமைப்புகள் இருக்கையில் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவிட ஏன் முடிவெடுத்தார் என்று கேட்டால், தனக்கு தெரிந்த ஒரு குழந்தை ஒன்று கேன்சர் நோயால் உயிரிழந்த சம்பவமே இந்தப் பணிகள் செய்ய உந்துதளித்தது என்றார்.
ஆவடியைச் சேர்ந்த இஞ்சினியரான லியோ ஆகாஷ் ‘Pretty Lil hearts' என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இயற்கையாகவே உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட இவர், இதுபோன்ற இக்கட்டான சூழல்கள் வரும்போதெல்லாம் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்வார்.
ஊரடங்குக் காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்க தன்னுடைய காரையும் நண்பர் பென்னி என்பவரது காரையும் இலவசமாக பயன்படுத்தி வருகிறார்.
“லாக்டவுன் காலத்தில் மட்டும் இவர் 83 கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுவரை 41 குழந்தைகள் பிறந்துள்ளது.
தற்போது இவர் தன்னிடம் இருக்கும் வாகனத்தை கர்ப்பிணிகளை அழைத்துச்செல்லும் படி மாற்றி அமைக்க நிதி உதவியை நாடி உள்ளார். மேலும் ஒரு வாகனம் வாங்கி இதுபோன்ற உதவிக்கு எடுத்துச்செல்லவும் முனைந்து வருகிறார். அதற்கான செலவாக ரூ.6.5 லட்சம் நிதி உயர்த்தத் திட்டமிட்டு அறிவித்துள்ளார். தன்னோடு பணிபுரிய சென்னையில் பல இடங்களில் வாலண்டியர்களுக்கும் அழைப்பு விட்டுள்ளார் லியோ.
கர்ப்பிணிப்பெண்கள் தொடர்பு கொள்ள சமூக வலைதளங்களில், முகநூலில் தனது நிறுவனத்தின் பெயர், செல்போன் எண்களைக் குறிப்பிட்டுள்ள அவரிடம், இதை நீங்கள் இத்தனை ஆத்மார்த்தமாக அதுவும் இலவசமாக செய்வது எப்படி என்று கேட்டால்,
“குழந்தை பிறந்தவுடன் குடும்பத்தாருக்கு முன்பு முதல் ஆளாக என்னிடம் அந்த மகிழ்ச்சி செய்தியை பகிர்வது, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என என்னிடம் கேட்பது... இவற்றைவிட மனதை குளிரவைக்கும் விஷயம் என்ன இருக்கும்...” என்று முடிக்கிறார் லியோ.
லியோ-வை தொடர்பு கொள்ள: 9600/43255 / 04443214321
ஃபேஸ்புக் லின்க்: https://www.facebook.com/profile.php?id=100011590023861