ஏசி அறை, நீச்சல்குளம்: சொகுசு வாழ்கையை தரும் ’டாக் ஹோம் ஸ்டே’
சம்மர் லீவுக்கு ஊருக்கு போகணுமா?, ஆனா உங்க செல்லப்பிராணிய தனியா விட்டுப்போக மனசு இல்லையா...? கவலை வேணாம்... இதோ இருக்கே சகலவசதியுடன் ‘Dog Home Stay'
நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பது புதியது அல்ல; நாய்களை வீட்டின் காவலராக வளர்த்த காலம் மாறி இன்று சொந்த குழந்தைப்போல் மக்கள் வளர்த்து வருகின்றனர். விலை உயர்ந்த நாய் உணவுகள், வாக்கிங், ஏசி அறை என சொகுசுகளை செல்லப்பிராணிகளுக்கு கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இப்பொழுது விடுமுறை நாட்கள் துவங்கி மக்கள் விடுமுறைக்கு வெளி ஊர்களுக்கு செல்வதால் தங்கள் செல்லபிராணிகளை கூட அழைத்து செல்லவோ அல்லது வீட்டில் விட்டுச் செல்லவோ சிரமப்படுகிறார்கள். இதற்கு தீர்வுகாணும் விதமாக ரெட்டேரியில் ’Dog Home Stay' ஒன்றை நிறுவியுள்ளார் 17 நாய் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் கீர்த்தி.
உங்கள் செல்லப்பிராணிகள் வீட்டில் இருந்த அதே சௌகரியத்தை பெரும் விதம் இந்த டாக் ஹோமை அமைத்துள்ளார் கீர்த்தி. நீங்கள் விடுமுறைக்கு சுற்றுலா செல்வதுபோல் உங்கள் செல்லப்பிராணிகளும், ஏசி அரை, நீச்சல் குளம் என மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்களும் உங்கள் விடுமுறையை கவலையின்றி கொண்டாடலாம்.
இது குறித்து பேசிய நிறுவனர் கீர்த்தி,
“என்னைப்போல் நாய்களை பிள்ளையாக கவனிக்கும் பலருக்கு வெளியூர் செல்ல வேண்டும் என்றால் நாய்களை கென்னலில் விடுவதை தவிர வேறு வழியில்லை. கென்னல் வெறும் 6 அடி கூண்டாகவே இருக்கிறது..”
வீட்டில் சுதந்திரமாக பல சொகுசுகளை அனுபவித்து 6 அடி கூண்டுக்குள் நாய்களை அடைப்பது தவறு. நாய்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு நாய் உரிமையாளர்களுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வுகாணவே வீட்டு சூழ்நிலையை மனதில் கொண்டு டாக் ஹோம் ஸ்டேவை நிறுவியதாக தெரிவிக்கிறார் கீர்த்தி.
பெரிய நிருவனத்தில் பணிப்புரியும் கீர்த்தி, பெரும்பாலும் வீட்டில் இருந்து தான் வேலை செய்கிறார். அவ்வப்போது அலுவலக வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டும் என்றாலும் தன் 17 நாய்களுக்கு மாற்று வழி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் நாய்களுக்கு என்ற ஹோம் ஸ்டேவை உருவாக்க நகரத்தில் இருந்து சற்று தள்ளி ரெட்டேரியில் ஓர் இடத்தை வாங்கினார். எப்பொழுது ஹோம்ஸ்டே தன் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தன் வீட்டுடன் இணைத்தே இந்த ஹோம்ஸ்டவை அமைத்துள்ளனர்.
கீர்த்தியின் வீடு போக மீதமுள்ள இடத்தில் நாய்களை தங்க வைக்க பெரிய ஏசி அறை, நீச்சல் குளம், படுப்பதற்கு பஞ்சு மெத்தை, பிரேத்தியேக உணவு தயாரிக்க சமையல் அறை, விளையாடுவதற்கு திறந்தவெளி போன்ற பல வசதிகளைக் கொண்டு இதை அமைத்துள்ளனர்.
“தங்கள் நாய்களை ஓர் கூண்டில் அடைத்துவிட்டோம் என்ற மன வேதனை இல்லாமல், நண்பர்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்வதாக உரிமையாளர்கள் நினைக்க வேண்டும் அதுவே எங்கள் நோக்கம்,” என்கிறார்.
வீட்டில் இருந்து பணியை பார்த்துக்கொண்டே இதையும் நிர்வகிக்கிறார் கீர்த்தி. நாய்களையும் ஹோம்ஸ்டேவை பராமரிக்கவும் வேலை ஆட்களை நியமித்துள்ளார்.
“இடத்தை பெற்றதில் இருந்து உள்கட்டமைப்பு வசதிகள் என அதிக முதலீடை செய்துள்ளோம், ஒரு வருடத்திற்கு முன் வேலைகளை துவங்கி இப்பொழுதுதான் முழு வேலைகளையும் முடித்தோம்.”
இதைத் துவங்கி ஒரு மாதமே ஆகின்றது, இருப்பினும் கீர்த்தியின் டாக் ஹோம் ஸ்டே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல விண்ணப்பமும், கோரிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் பல நாய்களை ஒரே நேரத்தில் எடுப்பதில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.
“தற்பொழுது 12 நாய்களை சேர்த்துள்ளேன், ஒரு சமையத்தில் அதிகப்பட்சம் 20 நாய்களை சேர்த்துக்கொள்வோம். அப்பொழுதுதான் ஒவ்வொரு நாய்க்கும் தனிப்பட்ட அக்கறையையும் நேரத்தையும் ஒதுக்க முடியும்,” என்கிறார்.
எந்த நிறுவனம் என்றாலும் லாபம் பார்க்க சில ஆண்டுகள் தேவைப்படும் மேலும் இதற்கு தேவை அதிகம் அதுமட்டுமின்றி ஒரு மாதத்திலே நல்ல வரவேற்பு கிடைத்ததால் 3 வருடத்திற்குள் தன்னால் லாபம் ஈட்ட முடியும் என நம்பிக்கையுடன் முடிக்கிறார் கீர்த்தி.