Mamaearth கஜல் அலக்கின் கர்ப்பகால பதிவு: முட்டாள்தனம் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய பெண் இன்ஜினியர்!
மாமா எர்த் இணை நிறுவரான கஜல் அலக்கின் கர்ப்பகாலம் பற்றிய லிங்க்ட் இன் பதிவை முட்டாள்தனம் என விமர்சித்து, சர்ச்சையில் சிக்கியுள்ளார் AI இன்ஜினியர் ஒருவர்.
திருமணம், கர்ப்பம், குழந்தைப்பேறு என பெண்களின் தொழில் வாழ்க்கையில், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இடையில் சில பருவங்கள் வருவது தவிர்க்க இயலாதது. அதனால்தான் இந்தப் பருவங்களுக்குப் பிறகு மீண்டும் தொழிலில் ஈடுபடுவதை இரண்டாம் இன்னிங்ஸ் என்றே பெண்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தப் பருவங்களில் அப்படியே நின்று, தொழில் வாழ்க்கையில் இருந்து இடைவெளி பெற்று, முழுவதுமாக குடும்ப வாழ்க்கைக்கே தன்னை அர்ப்பணித்தவர்கள் ஏராளம். ஆனால், தொழிலையும், இந்தப் பருவத்தையும் திறமையாக நிர்வகித்து அடுத்த நிலைக்கு உயர்ந்தவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் தொழிலில் கோலோச்ச நினைப்பவர்களுக்கு எப்போதுமே முன்னுதாரணமாக திகழ்வார்கள்.
8 மாத கர்ப்பிணி
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் 'மாமா எர்த்' (
) இணை நிறுவனர் கஜல் அலக். தனது மகனுக்காக தன் கணவருடன் சேர்ந்து ஆரம்பித்த இந்த நிறுவனம், இன்று சர்வதேச அளவில் குழந்தைகள், அம்மாக்கள் மட்டுமின்றி, அனைவருக்கும் இயற்கையான, நச்சு இல்லாத இயற்கை ஆரோக்கியமான மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.இந்நிலையில், சமீபத்தில் தனது கர்ப்பகாலத்தைப் பற்றியும், பெண்களின் முன்னேற்றம் பற்றியும் கஜல் அலக் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘தான் 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ஷார்க் டேங்க் இந்தியாவுக்காக வேலை பார்த்த அனுபவங்களை’ உணர்வுப்பூர்வமாக பகிர்ந்திருந்தார்.
அதாவது, “கர்ப்பமாக இருக்கும்போது, கடினமான வேலைகளைச் செய்யக்கூடாது. மெதுவாக, நிதானமாக செயல்பட வேண்டும், என்று சொல்வது பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்.
கட்டுக்கதைகளை உடைப்போம்
ஷார்க் டேங்க் இந்தியா வாய்ப்பு எனக்கு வந்தபோது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து இதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால், இந்த கட்டுக்கதையை மாற்ற நினைத்தேன்.
எனவே, நான் 8 மாத கர்ப்பமாக இருந்தபோதும், மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு நாளைக்கு 12 மணிநேரம் ஷார்க் டேன்க்குக்காக படமெடுக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த முடிவு செய்தேன். மற்றவர்களை ஊக்குவிப்பதும், குறிப்பாக ஆண்களிடையே நிலவும் இந்த கட்டுக்கதையை உடைப்பதும் எனது குறிக்கோளாக இருந்தது.
பெண்கள் தங்கள் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் குறைவான சுறுசுறுப்பு அல்லது திறன் கொண்டவர்களாக மாறுகிறார்கள். இந்த ஆண்டு, எனது கண்டுபிடிப்பு குழுவில் நான்கு மேலாளர்கள் கர்ப்பமாக உள்ளனர். இந்த சூழ்நிலையில், புதுமைக்கான அதிக வருவாய் இலக்கை நாங்கள் எடுத்துள்ளோம். நாங்கள் குழந்தைகளை பிரசவிப்பது மட்டுமல்லாமல், எங்கள் இலக்குகளை அதிகமாக வழங்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தேவைப்படும் போதெல்லாம் இருப்போம்..." என இவ்வாறு அந்தப் பதிவில் கஜல் கர்ப்பகாலம் என்பது பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒருபோதும் தடையாக இருக்க முடியாது என்ற கோணத்தில் தனது கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.
முட்டாள்தனம் என விமர்சனம்
கஜலின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலானது. கஜலின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பாராட்டி பலர் கமெண்ட் செய்திருந்தனர். நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல், சமூகவலைதள பதிவுகளுக்கும் எப்போதும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டு விதமான விமர்சனங்கள் வருவது இயல்புதானே. அப்படித்தான் கஜலின் பதிவையும் விமர்சித்து, புதிய பதிவொன்றை வெளியிட்டார் AI இன்ஜினியரான பிரகிருதி ஷர்மா.
அந்தப் பதிவில் அவர்,
“ஒரு கர்ப்பிணிப் பெண் தனது சொந்த குழந்தையின் நல்வாழ்வைவிட, வெளி உலக அங்கீகாரத்திற்காக படப்பிடிப்புக்கு முன்னுரிமை கொடுத்தார் என்பது முற்றிலும் முட்டாள்தனமாக நான் காண்கிறேன். கர்ப்ப காலத்தில் வெளியுலகம் மற்றும் இணையத்தில் இருந்து அதற்கான ஆதரவை தேடுவது மிகவும் மோசமானது. பெண்களே, நீங்கள் யாரைப் பார்க்கிறீர்கள் என்பதைப் பற்றி கவனமாக இருங்கள் & இணையத்தில் வழங்கப்படும் எந்த முட்டாள்தனமான ஆலோசனையையும் பின்பற்றாதீர்கள்..." என பிரகிருதி ஷர்மா தெரிவித்திருந்தார்.
குவியும் பதிலடிகள்
இந்தப் பதிவு இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரகிருதி ஷர்மாவின் பதிவை கடுமையாக விமர்சித்து பலர் கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர்,
“கர்ப்பகாலம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு கர்ப்பிணி தனது கர்ப்ப காலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை அவளும், அவளது மருத்துவரும்தான் தீர்மானிக்க முடியும். கர்ப்பிணிப் பெண்கள் அற்புதமான விஷயங்களைச் செய்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும், அது நடக்கும் போது கொண்டாடப்பட வேண்டும், ஏனெனில் இது ஒரு கர்ப்பிணிப் பெண்ணை வேலைக்கு அமர்த்த மறுக்கும் அனைவருக்கும் ஒரு பாடம்,” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவரோ, “எனது இரண்டு கர்ப்ப காலங்களிலும் பணிபுரிந்தேன் என்ற அனுபவத்தில் கூறுகிறேன். உடலில் எந்த ஒரு மருத்துவ பிரச்சினையும் இல்லாத பட்சத்தில், பிரசவத்திற்கு முன்பு வரை நீங்கள் வேலை பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையில், மகளிர் மருத்துவர்கள் உங்களை சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிக்கிறார்கள். ஒரு பெண் வேறொரு பெண்ணை வீழ்த்துவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. பெண்களையும், அவர்களது உடலையும் மதிக்க கற்றுக்கொள்வோம்,” எனக் கமெண்ட் செய்துள்ளார்.
பெரும்பாலானோர் பிரகிருதியின் இந்தப் பதிவை கண்டித்தே பதில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ‘ஒரு பெண் தனக்குப் பிரியமானதை செய்ய எப்போதும் அனுமதியுங்கள்.. உங்கள் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள்’ என்பதே அவர்களின் பதிவுகளின் சாராம்சமாக உள்ளது.