ஜீரோ டூ ஹீரோ: நிதிப் பிரச்சனைகளை எதிர்நீச்சலால் வென்ற 10 தொழில் முனைவர்கள்!
தங்களது மோசமானப் பொருளாதாரச் சூழல்களில் இருந்து மீண்டு, வெற்றி வாகை சூடிய சிறு மற்றும் நடுத்தர தொழில்நிலை கொண்ட 10 தொழில்முனைவர்களைச் சந்திப்போம் வாருங்கள்.
உலகின் செல்வந்த தொழிலதிபர்கள் பலரும் ஏழையாகப் பிறந்தவர்கள்தான். வால்மார்ட் நிறுவனர் சாமுவேல் வால்டன், வாட்ஸப் இணை நிறுவனர் ஜேன் கவும், கார்னெஜி ஸ்டீல் நிறுவனர் ஆண்டிரியூ கார்னெஜி உள்ளிட்ட பலரும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி கோடிகளில் ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவர்களே.
இந்தியாவிலும் இத்தகைய தொழில் முனைவர்கள் பலர் இருக்கின்றனர். ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல ஆண்டுகள் கடுமையாகப் போராடிய இவர்கள் ஒரே இரவில் வெற்றிக்கொடி நாட்டிவிடவில்லை.
நம்மில் பலரும் அறிந்த பிரபல தொழிலதிபர் திருபாய் அம்பானி தன் இளமைக் காலத்தில் வாழ்வாதாரத்துக்காக தனது கிராமத்தில் வறுத்த நொறுக்குத்தீனிகளை விற்றவர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனரான இவரது வெற்றிக் கதைதான் நம்பிக்கை, உத்வேகம் மற்றும் விடாமுயற்சிக்கு கச்சிதமான முன்னுதாரணம்.
அந்த வகையில், இந்தியத் தொழில்முனைவர்களில் தங்களது மோசமான பொருளாதாரச் சூழல்களில் இருந்து மீண்டு, தொழில்முனைவில் மகத்தான வெற்றிகளைக் குவித்த 10 தொழில்முனைவர்கள் குறித்த பார்வை:
துஷார் ஜெயின் - ஹை ஸ்பிரிட்
தன்னுடைய தந்தை பங்குச்சந்தைத் தரகு முறைகேட்டில் அனைத்தையும் இழந்துவிட்ட பிறகு, மும்பை வீதிகளில் பைகளை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட துஷார் ஜெயின் நம்பிக்கையை மட்டும் இழந்துவிடவில்லை. துஷாரும் அவரது தந்தையும் தங்களது சிறிய பை நிறுவனத்தை பள்ளிப் பைகள், கல்லூரிப் பைகள், பிசினஸ் மற்றும் லாப்டாப் கேஸ்கள் மற்றும் பல வகையில் பெரிய அளவிலான விற்பனை நிறுவனமாக முற்றிலும் வெற்றிகரமாக மாற்றினர்.
துஷாரின் தலைமையின் கீழ், 2012ல் ஹை ஸ்பிரிட் கமர்ஷியல் வென்ச்சர்ஸ் என்ற பெயரில் தொழில் விரிவடைந்தது. அட்டகாசமான வளர்ச்சியையும் பிரபலத்தையும் அடைந்ததுடன், பேக் பேக்ஸ் மற்றும் லக்கேஜ் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய நிறுவனமாகவும் உருவெடுத்தது.
"கடந்த ஆண்டு 70 லட்சம் பேக்குகளை விற்பனை செய்ததன் மூலம் இந்தியாவின் பேக்பேக் துறையின் மிகப் பெரிய பிராண்டாக தடம்பதித்துள்ளோம்," என்கிறார் துஷார்.
மும்பையை தலைமையகமாகக் கொண்டு இந்தியா முழுவதும் 10 மண்டல அலுவலகங்களுடன் ரூ.250 கோடி வர்த்தகத்தில் இயங்கும் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்கள் இப்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சென்றடைந்துள்ளது.
புவனேஷ் பாட்டியா - சன்ரைஸ் கேண்டில்ஸ்
புவனேஷ் பாட்டியா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாகப் பிறக்கவில்லை. ஆனால், அவர் பிறந்து வளரும்போது விழித்திரை பிரச்னை சார்ந்த பார்வைத் திறன் குறைபாடு இருந்தது.
இந்தப் பாதிப்பால் நீண்ட காலத்துக்குப் பிறகுதான் பார்வைத் திறனில் மோசமான நிலை ஏற்படும் என்று நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு 23 வயது ஆனபோதே அந்த நம்பிக்கையை இருண்டுபோகச் செய்தது அவரது பார்வைத் திறன். அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காத காலக்கட்டத்தில்தான் உலகமே இருண்டுபோனது.
ஒரு ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்த அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய தாயின் சிகிச்சைக்காக சிறுக சிறுக சேமித்து வைத்தார். எனினும், தாயையும் அவர் இழந்தார். அதன்பின், மெழுகுவர்த்தித் தொழிலைக் கையிலெடுத்தார். தனது வருவாய் போக, தினமும் ரூ.25-க்கு மறுநாளில் மெழுகுவர்த்தி செய்வதற்குத் தேவையான மெழுகை வாங்குவது வழக்கம்.
இன்று சன்ரைஸ் கேண்டில்ஸ் 25 டன்கள் மெழுகை தினமும் 9,000 ப்ளைன், சென்ட் மற்றும் ஆரோமாதெரபி மெழுகுவர்த்திகளை தயாரிக்கிறது. யு.கே.-விலிருந்து மெழுகு கொள்முதல் செய்கிறார்கள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரான்பாக்ஸி, பிக் பஜார், நரோடா இண்டஸ்ட்ரீஸ் ரோட்டரி க்ளப் முதலானோர் இவர்களது வாடிக்கையாளர்கள்.
ஸ்போர்ட்ஸிலும் அசத்தக் கூடிய புவனேஷ் தன் அபாரத் திறமையால் தனித்துவம் வாயந்த தொழில்முனைவராக வலம் வருகிறார்.
சித் நாயுடு - சித் ப்ரொடக்ஷன்ஸ்
2007-ல், பெங்களூருவில் 11 வயது சிறுவனாக இருந்த சித் நாயுடு தனது தந்தையை இழந்தார். அந்த வயதில் குடும்பப் பாரத்தைச் சுமக்க, அதிகாலையில் செய்தித்தாள் விநியோகித்த பிறகே தினமும் பள்ளிக்குச் செல்வார். இதன்மூலம் மாதம் ரூ.250 கிடைக்கும். எனினும், வீட்டில் நிதி நிலைமை மிகவும் மோசமாக ஆனது.
ஃபேஷன் துறையில் நுழைந்து, மாடல் ஆவதுதான் அப்போது சித் நாயுடுவுக்கு பெருங்கனவாக இருந்தது. பத்தாம் வகுப்பு முடித்த பிறகு, ஆபிஸ் பாய் வேலை பார்த்தார். அதன்மூலம் மாதம் ரூ.3,000 வரை கிடைத்தது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2017ல் ஒருவழியாக தொழில் முனைவர் ஆவதென முடிவெடுத்து, ஃபேஷன் துறையில் தொடர்பு வட்டத்தை விரிவாக்கத் தொடங்கினார். ஃபேஷன் ஷூட்டிங், மாடல் க்ரூமிங் ஆர்ட் டைரக்ஷன், நாளிதழ் விளம்பரம், டிவி விளம்பரங்கள் உள்ளிட்டவை சார்ந்து இயங்கும் சித் ப்ரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்தைக் கட்டமைத்தார்.
"எனது மிகப் பெரிய க்ளைன்ட் 'மிந்த்ரா'. ஸ்கல்லர்ஸ், ஜெலஸ் 21, இண்டிகோ நேஷன் முதலான ஃபார்ச்சூன் குழுமத்தின் ஃபேஷன் பிராண்டுகளுடனும் செயலாற்றுகிறேன். ஃபேஷன் ஷூட்டிங், ஸ்டோர் லாஞ்ச்சஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸர் ஈவன்ட்டுகளுக்காக என்னை அவர்கள் அணுகுகின்றனர். என க்ளைன்டுகள் விரும்பும் வகையில் ப்ராப்பிங் மற்றும் செட் டிசைனிங்கில் தனித்துவம் காட்டுகிறேன்," என்கிறார் சித் நாயுடு.
சித் நாயுடுவின் பிசினஸ் ஒரே ஆண்டில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டி, ரூ.1.3 கோடி வர்த்தகத்தைத் தொட்டுவிட்டது. இப்போது அவரது வர்த்தக இலக்கு ரூ.3 கோடி.
சினு கலா - ரூபன்ஸ் அக்ஸசரீஸ்
குடும்பத்தில் பிரச்னை காரணமாக, மும்பையில் இருந்து வீட்டை விட்டு வெளியேறியபோது சினு கலாவுக்கு வயது 15. அந்தச் சிறுமியின் கண்முன்னே நிலையற்ற எதிர்காலம்தான் மிஞ்சி நின்றது.
இதனை சினு கலா விவரிக்கும்போது, "நான் வீட்டை விட்டு வெளியேறியபோது, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீடு வீடாகச் சென்று சமையலறைக்குப் பயன்படும் பொருள்களை விற்றும் ரூ.20 மட்டுமே தினமும் சம்பாதிக்க முடிந்தது. வீடுகளின் கதவுகளைத் தட்டும்போது, என் பொருள்களை வாங்க மறுத்து, முகத்தில் அறைவதுபோல் கதவுகளை மூடுவார்கள். ஆனாலும் நான் மன உறுதியுடன் இருந்தேன். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிட்டும் என்ற நம்பிக்கை ஆழமாக இருந்தது," என்கிறார்.
அப்போது, சினுவின் கடினமான உழைப்பால் தனது பாதி வயிற்றையே நிரப்பிக்கொள்ள முடிந்தது. ஆனால், அந்தச் சிறுமியின் கண்களில் ஒளியும் கனவும் நிறைந்திருந்தது. அவநம்பிக்கைச் சூழல்கள் ஆரத்தழுவியபோதும் விடாமுயற்சியை மட்டும் கைவிடவே இல்லை.
ஃபேஷன் மீதான ஈடுபாடும், கார்ப்பரேட் பொருள்களில் அனுபவமும் இணைந்து 2014-ல் ரூபன்ஸ் அக்ஸசரீஸ் தொடங்க முடிவு செய்தார் சினு.
பெங்களூருவில் ஃபீனிக்ஸ் மாலில் 70 சதுர அடி பரப்பளவில் ரூ.3 லட்சம் முதலீட்டுடன் ரூபன் ஆக்ஸசரீஸ் தொடங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் இப்போது 2019-ல், சினு வழிநடத்தும் நிறுவனத்தின் வர்த்தகம் ரூ.7.5 கோடி!
முனிஸ்வாமி டேனியல் - ஷரோன் டீ
பள்ளியில் இடைநின்ற முனிஸ்வாமி டேனியல் சொந்தமாகத் தொழில்புரிவதற்கு முன்பு டிரைவராக பணியாற்றினார்.
"ஒரு பிரைவட் டிரைவராக மாதம் ரூ.6,000 ஊதியம் பெற்று வந்தேன்," என்றார்.
ஞாயிற்றுக்கிழமையும் பணிக்கு வரச் சொன்னதால், அவர் டிரைவர் வேலையையும் விட்டுவிட்டார். காரணம் கேட்டதற்கு, "என்னால் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்தைத் தவறவிட முடியாது. வேறு வழி இல்லாததால் என் வேலையை விட்டுவிட்டேன்," என்றார் புன்னகைத்தபடியே.
அந்த நேரத்தில், பெங்களூருவின் நியூ திப்பாசந்திராவில் டேனியலின் சகோதரர் ஒரு எலக்ட்ரிகல் கடை நடத்திவந்தார்.
"என் சகோதரர் அந்தக் கடையை மூடுவதற்குத் திட்டமிட்டார். அவர்தான் என்னை ஒரு டீ கடை தொடங்குமாறு யோசனை தெரிவித்தார்," என்கிறார் டேனியல்.
அதன்பின், 2007-ல் டேனியல் தொடங்கிய டீ ஸ்டால் றெக்கை கட்டிப் பறந்தது. இன்று, அவரது டீ பிசினஸான ஷரோன் டீ அர்ப்பணிப்புடன் இயங்கியதன் பலனாக, கடந்த ஆறே மாதங்களில் பெங்களூருவில் மூன்று கிளைகளைப் பரப்பியது.
முதல் கிளையில் தினமும் 1,000 கப்கள் டீ விற்கிறார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிடிஏ இந்திரா நகரில் தொடங்கிய இரண்டாவது ஸ்டோரில் தினமும் 500 கப்களுக்கு மேலாக விற்பனை. அதன்பின், புதிதாக ஐடிசி ஃபேக்டரியில் தொடங்கிய கிளையில் தினமும் 200 கப்கள் விற்கிறார்.
ரேணுகா ஆராத்யா - பிரவாசி கேப்ஸ்
ஏழைக் குடும்பத்தில் பிறந்த ரேணுகா ஆராத்யா தனது பூஜாரி தந்தையுடன் மத நிகழ்ச்சிகளையொட்டி கையேந்திப் பிழைக்கும் நிலையில் இருந்தார். ஆனால், ஒரு டிராவல்/டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உருவாக்கி நடத்த வேண்டும் என்பதே அவரது நீண்ட நாள் கனவாக இருந்தது. பல ஆண்டுகளாக வெவ்வேறுப் பணிகளைச் செய்தவர், சில கார்களை வாங்கும் நிலைக்கு உயர்ந்தார்.
நிறுவனங்களை இணைத்தல், கையகப்படுத்துதல் முதலான எவ்வித புரிதலும் இல்லாதபோதும், 'இந்தியன் சிட்டி டாக்ஸி' எனும் நிறுவனத்தை வாங்கினார். 2006ல் அந்த நிறுவனத்தை ரூ.6.5 லட்சத்திற்கு வாங்கி, 'பிரவாசி கேப்ஸ்' என்று பெயரிட்டார்.
"நான் வைத்திருந்த அனைத்து கார்களையும் விற்றுதான் இந்த நிறுவனத்தை வாங்கினேன்," என்கிறார்.
பல ஆண்டுகள் கடுமையான போராட்டங்களுக்கும் கடின உழைப்புக்கும் இடையே ஓலா, உபெர் போன்றவற்றின் தாக்கங்களை எல்லாம் சமாளித்து 700 கார்களுடன் தொழிலை மேம்படுத்தினார். சென்னையில் அலுவலகத்தை நிறுவியபோது, முதல் க்ளையன்ட் ஆக வந்து நின்றது அமேஸான் இந்தியா. வால்மார்ட், அகாமனி, ஜெனரல் மோட்டார்ஸ் முதலானோரும் வரிசைகட்டினர்.
இப்போது இவரது நிறுவனத்தின் வர்த்தகம் ரூ.30 கோடி. பணியாளர்களின் எண்ணிக்கை 150.
ஸ்ரீகாந்த் போளா - பொல்லான்ட் இண்டஸ்ட்ரீஸ்
ஸ்ரீகாந்த் பிறந்தபோது, அந்தக் கிராமத்தினர் பலரும் அவரது பெற்றோருக்கு சொன்ன யோசனை: "இந்தக் குழந்தை வேண்டாமே!". வாழ்நாள் முழுவதும் துயரத்தை அனுபவிப்பதைவிட மூச்சை அடக்கிவிடுவது நல்லது என்பதாக இருந்தது அந்த யோசனைகள். கண் பார்வை இல்லாமல் பிறப்பதே பாவம், அந்தக் குழந்தையால் ஒரு பயனும் விளையப்போவதில்லை என்றெல்லாம் சிலர் வெளிப்படையாகச் சொன்னார்கள்.
இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னை உயர்ந்த மனிதராக்கிக் கொண்ட ஸ்ரீகாந்த் சொன்னது:
"என்னைப் பார்த்து இந்த உலகம், 'ஸ்ரீகாந்த், உன்னால் எதுவும் செய்ய முடியாது' என்றால், நான் திரும்பிப் பார்த்துச் சொல்வேன்; 'என்னால் எதுவும் செய்ய முடியும்,” என்று.
ஸ்ரீகாந்த், ஹைதராபாத்தைச் சேர்ந்த பொல்லான்ட் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர் - சி.இ.ஓ. கல்வி வசதி பெறாதவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு நல்கும் இந்நிறுவனம், எக்கோ-ஃப்ரெண்ட்லி, டிஸ்போசல் கன்ஸ்யூமர் பேக்கேஜிங் சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் ரூ.50 கோடி மதிப்புடையது.
இந்த உலகில் தன்னை அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறார் ஸ்ரீகாந்த். காரணம், கோடீஸ்வரர் ஆனதால் அல்ல. ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே வருவாய் ஈட்டி வந்த படிப்பறிவற்ற தனது பெற்றோர், யாருடைய 'அறிவுரை'களையும் கேட்காமல் தன் மீது அன்புடனும் பாசத்துடன் இருந்ததைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார்.
"அவர்கள்தான் எனக்குத் தெரிந்த செல்வந்தர்கள்..." என்கிறார் ஸ்ரீகாந்த்.
ராஜா நாயக் - எசிஎஸ் லாஜிஸ்டிக்ஸ், அக்ஷய் என்டர்பிரைசஸ், ஜலா பெவரேஜஸ்
ராஜா நாயக் தன் வீட்டை விட்டு ஓடியபோது வயது 17. வறுமையின் பிடியில் வாடும் பல லட்சக்கணக்கானவர்களில் ஒருவராக வாழ்க்கையை முடித்துக்கொள்ளாமல் புதிய தொடக்கத்தை நோக்கி எடுத்த நம்பிக்கை ஓட்டம் அது.
"என்னையும், என்னுடன் பிறந்த 4 பேரையும் பள்ளிக்கு அனுப்புவதற்கு என் பெற்றோரால் முடியவில்லை என்பதை அந்தச் சின்ன வயதிலேயே என்னால் உணர முடிந்தது. என் அப்பாவுக்கு நிலையான வருவாய் எதுவும் இல்லை. என் அம்மா வீட்டில் இருக்கும் பொருட்களை அவ்வப்போது அடகு வைத்துதான் எங்களை வளர்த்தார்," என்கிறார் ராஜா.
அந்தப் பதின்ம பருவத்தில் தன் நண்பர்களுடன் எப்படியாவது அடித்துப் பிடித்து சினிமாவுக்குப் போகும் ராஜா, 1978ல் 'திரிஷூல்' என்ற இந்திப் படத்தைப் பார்த்தார். அதில், கையில் அஞ்சு பைசா கூட இல்லாத அமிதாப் பச்சன், ரியல் எஸ்டேட் அதிபராக உருவாகிறார்.
அந்தக் கதையில் உந்தப்பட்டவர், தொழில் முனைவர் ஆவது என்று உறுதிபூண்டார். இன்று, சர்வதேச ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொடர்புடைய 'எசிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்', அக்ஷய் என்டர்பிரைசஸ், ஜலா பெவரேஜஸ், ப்யூட்டி சலூன் - ஸ்பா மையங்களுடன் பெங்களூரில் மூன்று இடங்களில் இயங்கும் 'பர்ப்பிள் ஹேஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.60 கோடி வர்த்தகத்தைப் பார்க்கிறார் ராஜா.
மோயிஸ் கபாஜிவாலா - ஸெஃபைர் டாய்மேக்கர்ஸ்
ஜாகீர் கபாஜிவாலா 1980ல் பாழடைந்த லிஃப்ட் பகுதியில் ஒரு பொம்மை ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். அந்தக் கட்டடத்தில் வாடகைக்கு இடம் எடுத்து ஒர்க்ஷாப் நடத்தும் அளவுக்கு அவரிடம் வசதி இல்லை. பொம்மைகள் செய்வதற்கான கச்சாப் பொருள்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்களிடமே கடன் வாங்குவார். அது ஓர் இருண்ட காலம் என்றாலும், நம்பிக்கையை மட்டும் அவர் கைவிடவில்லை.
"எனக்கு அப்போது 10 வயதுதான். என் அப்பாவின் நிறுவனத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். பள்ளி சென்று திரும்பியதும் எனக்கு அங்குதான் வேலை. உற்பத்திப் பணியைச் செய்யும் தொழிலாளர்களுடன் நானும் சேர்ந்துக்கொள்வேன்," என்று நினைவுகூருகிறார் அவரது மகன் மோயிஸ்.
வாழ்க்கைப் போராட்டங்களை கடுமையான உழைப்பால் வென்றவர், கண்ணீராலும் வியர்வையாலும் சிறுக சிறுக அந்தத் தந்தை மேம்படுத்திய ஒர்க்ஷாப் ரூ.15 கோடி வர்த்தகத்துடன் 100 பேருக்கு வேலையும் கொடுக்கும் நிறுவனமாக உயர்ந்து, இப்போது 'ஸெஃபைர் டாய்மேக்கர்ஸ்' எனும் பெயரில் உயர்ந்து நிற்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய பொம்பை உற்பத்தி நிறுவனம் இது. குறிப்பாக ஸ்டெம் (Stem - Science, Technology, Engineering, and Math) கல்வியில் கவனம் செலுத்தும் வகையில் உற்பத்திப் பொருள்கள் கட்டமைக்கப்படுகின்றன.
இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக மோயிஸ் கபாஜிவாலா 2014-ல் பொறுப்பேற்றார். ஐரோப்பிய நிறுவனங்களிடம் இருந்தும் கல்வி சார்ந்த பொம்மைகளை விற்கக் கூடிய ரீடெயில் ஷாப்களை நிறுவி, தொழிலை அடுத்த லெவலுக்கு மேம்படுத்தி வருகிறார்.
சந்திப் பாட்டீல் - இ-ஸ்பின் நானோடெக்
கெமிக்கல் எஞ்சினீயரிங்கில் முனைவர் பட்டம் பெற்றவர் என்றாலும், சந்திப் பாட்டீலை வளர்த்தது அவரது கிராமத்தின் சிறிய மண்வீடுதான்.
அவரது கிராமத்தில் பள்ளிகள், சுகாதார மையங்கள், அஞ்சல் அலுவலகம், சாலைகள் மற்றும் போக்குவரத்து என எந்த வசதியும் இல்லை.
"இப்போதும் கூட, இந்த வசதிகள் பிம்ப்ரி கிராமவாசிகளுக்கு கிட்டாத கனவாகவே இருக்கிறது" என்றவர், "அங்குள்ளவர்களில் 75 சதவீத மக்கள் பழங்குடியினர்," என்கிறார்.
தொழிலாளர்களாக பணிபுரிந்த பெற்றோருடன் மிகுந்த கடினமான குழந்தைப் பருவத்தைக் கடந்த சந்திப், "என்னுடன் பிறந்த இரு குழந்தைகள் உள்பட ஒட்டுமொத்த குடும்பமும் பட்டினி கிடந்த நாள்களும் உண்டு. வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருந்தபோது, படிப்பு ஒன்று மட்டும் கனவாக இருந்தது," என்கிறார்.
மாமாவின் உதவியுடன் கல்விப் பாதை பரந்து விரிந்தது. நல்ல கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றார் சந்திப். சில தனிப்பட்ட ப்ராஜக்ட்களை முடித்த பிறகு, நண்பர்களிடம் சில பிசினஸ் யோசனைகளைப் பெற்றார். அதன்பின் 2010ஆம் ஆண்டில் இ-ஸ்பின் நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்கு, கான்பூர் ஐ.ஐ.டி-யின் எஸ்.ஐ.டி.பி.ஐ இன்குபேஷன் அண்டு இன்னொவேஷன் மையம் உறுதுணையாக இருந்தது.
"ஆய்வுகளை மேற்கொண்டு மலிவு விலை நானோ-ஃபைபர் யூனிட்டுகளில் உயர் தரத்தில் மேம்படுத்துவதில் மகிழ்ச்சி. இது மிகப் பெரிய அளவில் வாய்ப்புக் கதவைத் திறந்துவிட்டது," என்கிறார்.
இப்போது, இந்தியாவின் முக்கிய ஆய்வுக் கூடங்கள் பலவும் இவரது இ-ஸ்பின் க்ளையன்டுகள். அண்டு வர்த்தகம் ரூ.2.2 கோடி!