Gaganyaan Mission: விண்வெளி செல்லும் தமிழ்நாட்டின் அஜித் கிருஷ்ணா உள்ளிட்ட 4 பேர் யார்? பின்புலம் என்ன?
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணா உள்ளிட்ட 4 பேரை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். யார் இவர்கள்?
சந்திரயான், மங்கல்யான் வெற்றிகளைத் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை நோக்கி இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஈடுபட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் வேறு நாடுகளின் மூலம் விண்வெளி சென்றிருக்கின்றனர். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கவுன்ட்டவுன் தொடங்கி, ராக்கெட் என அனைத்தும் நாம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு நம் நாட்டு வீரர்களே அதில் பயணிப்பது இதுவே முதல்முறையாகும். விண்வெளித் துறையில் நம் நாடு சுயசார்பு நிலையை அடைந்துள்ளதை இது அடையாளப்படுத்துகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு பிப்ரவரி 27 அன்று சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த நான்கு பேருக்கும் மிஷன் லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.
நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வரலாற்றில் இடம்பிடித்துள்ள இந்த 4 பேர் யார், அவர்களின் பின்புலம் என்ன?
தமிழகத்தைச் சேர்ந்த அஜித் கிருஷ்ணன்
உலகில் எங்கு சென்றாலும் அங்கு ஒரு தமிழரை பார்க்கலாம், விண்வெளி பயணத்திலும் அதனை நிலைநாட்ட இருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித் கிருஷ்ணன். 1982ம் ஆண்டு ஏப்ரல் 19ல் சென்னையில் பிறந்த இவர், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர். விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயலாற்றியதற்காக அஜித் கிருஷ்ணன் குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றை பெற்ற சிறப்புக்குரியவர்.
2003-ம் ஆண்டில் இந்திய விமானப்படையின் போர் விமானியாக வாழ்க்கையை தொடங்கியவர் அஜித் கிருஷ்ணன். 2,900 மணி நேரங்கள் பறக்கும் அனுபவம் கொண்டுள்ள இவர், இந்திய விமானப்படையின் சுகோய்-30 MKI, மிக்-21, மிக்-29, ஜாகுவார், டார்னியர், அன்-32 போன்ற பல்வேறு வகை விமானங்களை இயக்கியுள்ளார். ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் கல்லூரியில் அஜித் கிருஷ்ணன் பயின்றுள்ளார்.
கேரளாவின் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்
தமிழக எல்லையான பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாழியாட்டில் பிறந்தவர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர். பாலக்காட்டில் கல்லூரி படிப்பை முடித்தவர் தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர்.
1998-ல் இந்திய விமானப்படையின் போர் விமானியாக தனது பணியை தொடங்கிய பிரசாந்த் பாலகிருஷ்ணன், விமான பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார். 3,000+ மணி நேரங்கள் பறக்கும் அனுபவம் கொண்ட பிரசாந்த், இந்திய விமானப்படையின் சுகோய்-30 MKI, மிக்-21, மிக்-29, ஹாக், டார்னியர், அன்-32, போன்ற பல்வேறு விமானங்களையும் இயக்கி உள்ளார்.
விமானப் படையின் மூத்த அதிகாரிகளுள் ஒருவராக அறியப்படும் பிரசாந்த்துக்கு தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர், ஊட்டி வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் கல்லூரி மற்றும் தாம்பரம் விமானப் படை தளங்களில் சில காலம் பணிபுரிந்து இருக்கிறார். அமெரிக்க ராணுவ கல்லூரியிலும் படித்துள்ளார் இவர்.
உத்தர பிரதேசத்தின் அங்கத் பிரதாப்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 1982-ம் ஆண்டு ஜூலை 17 ம் தேதி பிறந்தவர் அங்கத் பிரதாப். இவரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்றவர். 2004ம் ஆணடு இந்திய விமானப்படையில் இணைந்து போர் விமானியாக தனது பயணத்தை தொடங்கிய இவர், இதுவரை 2,000 மணி நேரங்கள் பறக்கும் அனுபவம் கொண்டுள்ளார். இவர், இந்திய விமானப்படையின் சுகோய்-30 MKI, மி-21, மிக்-29, ஜாகுவார், ஹாக், டார்னியர், அன்-32 ஆகிய விமானங்களை இயக்கியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் சுபான்ஷு சுக்லா
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 1985-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி பிறந்தவர் சுபான்ஷு சுக்லா. இவரும் தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர். 2006ல் இந்திய விமானப்படையில் இணைந்துள் இவர் 2,000 மணிநேரங்கள் பறக்கும் அனுபவத்துடன் இந்திய விமானப்படையின் சுகோய்-30 MKI, மிக்-21, மிக்-29, ஜாகுவார், ஹாக், டார்னியர், அன்-32 ஆகிய விமானங்களை இயக்கியுள்ளார்.
திட்டத்தின் நோக்கம் என்ன?
ககன்யான் திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டில் 4 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பின்னர், மீண்டும் அவர்களே பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விமானங்கள் குறித்து அறிந்தவர்களால் மட்டுமே விண்கலத்தை சிறப்பாக இயக்க முடியும் என்பதால் இந்திய விமான படை விமானிகளே சரியாக இருப்பார்கள் என்று இஸ்ரோ இந்த வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. விமானத்தை இயக்கிய அனுபவம் இருப்பதால் மிஷன் செயல்படுத்தும்போது ஏதேனும் தவறுகள் நடந்தால் அவர்களால் உடனடியாக முடிவெடுக்க முடியும் என்பதன் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்வெளிக்குச் செல்லும் இந்தக் குழுவில் இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தேர்வு நடந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?
பல விமானிகள் விண்வெளிக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், அவர்களில் 12 பேரை இந்திய விமானப்படையின் கீழ் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஏரோஸ்பேஸ் மெடிசின் தேர்வு செய்தது. 12 பேருக்கும் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி மருத்துவ கழகத்தில் (IAM) பல்வேறு தொடர் தேர்வுகள், சோதனைகள் நடத்தப்பட்டன.
கல்வியறிவு, உடல்தகுதி, அதிக நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம், மனரீதியிலான சோதனைகள், உடல் ரீதியிலான சோதனைகள் நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் இறுதியில் ஐஏஎம் மற்றும் இஸ்ரோ இணைந்து இந்த நான்கு பேரைத் தேர்வு செய்தது. 2019ல் தொடங்கி 2020ல் வீரர்களை தேர்வு செய்யும் பணி முடிந்து விட்டது.
தீவிர பயிற்சி
ககன்யான் திட்டத்துக்கான பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட நான்கு வீரர்களும் 2020-லேயே பயிற்சியை தொடங்கிவிட்டனர் என்றாலும் அவர்கள் குறித்த தகவல்களை இஸ்ரோ வெளியிடாமல் வைத்திருந்தது. ரஷ்யாவில் முதல்கட்ட பயிற்சி, 2ம் கட்டமாக இந்தியாவில் இரண்டாம் கட்ட பயிற்சி. பின்னர், பெங்களூரில் இதற்கென பிரத்யேகமாக நிறுவப்பட்ட விண்வெளி வீரர் பயிற்சி வகுப்பறையில் கடந்த ஆறு மாதங்களாக இந்த நால்வருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.
ககன்யான் ஃப்ளைட் சிஸ்டம்ஸ், மைக்ரோ-கிராவிட்டி, ஏரோ-மருத்துவப் பயிற்சி, மீட்பு மற்றும் உயிர்வாழும் பயிற்சி, விமான நடைமுறைகளில் மாஸ்டரிங் மற்றும் குழுப் பயிற்சி சிமுலேட்டர்கள் உள்ளிட்ட பல பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்திரயான் முதல் ககன்யான் வரைஇஸ்ரோ ராக்கெட்களை மாடலாக்கும் 79 வயது தாத்தா!