ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்யும் சலூன் கடைக்காரர்!
இவர் வாரம் ஒருமுறை ஏழைக் குழந்தைகளுக்கு முடிதிருத்தம் செய்து வருகிறார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் முடித்திருத்தும் கடைகள் மூடப்பட்டன. இதனால் பலர் சிரமத்திற்கு ஆளானார்கள். சிலர் முடியை திருத்தம் செய்ய முடியாமல் அப்படியே விட்டுவிடும் நிலையில் சிலர் குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் உதவியுடன் திருத்தம் செய்துகொள்கின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக மக்கள் படியாத தலைமுடியுடனும் சவரம் செய்யப்படாத முகத்தோற்றத்துடனும் காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டது.
குறிப்பிட்ட பகுதிகளில் முடித்திருத்தம் செய்யும் கடைகள் திறக்க அனுமதியளித்து அரசாங்கம் தளர்வுகளை அறிவித்தபோதும்கூட கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பின்பற்றப்படவேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளையும் (எஸ்ஓபி) பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவதில் பல உரிமையாளர்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
இத்தகைய சூழலில் மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள தித்வாலா பகுதியைச் சேர்ந்த முடிதிருத்தம் செய்யும் தொழிலாளியான ரவீந்திரா பிராரி
வாரத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு இலவசமாக முடித்திருத்தம் செய்கிறார். இவர் மும்பை பகுதிகளில் உள்ள சாலைகளுக்குச் சென்று ஏழைக் குழந்தைகளுக்கு தாமாக முன்வந்து முடிதிருத்தம் செய்கிறார்.
“ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் கடந்த நிலையில் சாலைகளில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளால் எங்கும் சென்று முடிதிருத்தம் செய்துகொள்ள முடியவில்லை. எனவே அவர்களுக்கு உதவ இலவசமாக முடிதிருத்தம் செய்கிறேன்,” என்று பிராரி ஏஎன்ஐ இடம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்ததால் மற்றவர்களைப் போன்றே இவரும் முடிதிருத்தம் செய்யும் கடையை மூடவேண்டி இருந்தது. எனினும் இவர் ஏழை மக்களுக்காக இந்த உன்னத சேவையை வழங்கி வருகிறார்.
இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள எத்தனையோ பேர் வருவாயின்றி தவித்து வருகின்றனர். இத்தகைய சூழலிலும் பிராரி சமூக நலனில் அக்கறைக் கொண்டு தன்னால் இயன்ற வகையில் மற்றவர்களுக்கு உதவி வருகிறார் என்று இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஏஎன்ஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஒரு சிறுவன் பிராரியிடம் முடிதிருத்தம் செய்து கொண்ட பிறகு, ‘இவர் மிகவும் நல்லவர். ஊரடங்கு தொடங்கியதில் இருந்து இங்கு யாரும் வரவில்லை. இவர் வந்து எங்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்கிறார்,” என்று கூறியுள்ளான்.
கட்டுரை: THINK CHANGE INDIA