’வேலைவாய்ப்பு அதிகரிக்கும், வருமானம் கூடும்’ - பட்ஜெட் 2020க்கு மோடி பாராட்டு!
இது சாமானியர்களுக்கான பட்ஜெட் என்றும், தொலைதூரப் பார்வை கொண்ட பட்ஜெட் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கக் கூடிய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார் என்று, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
"இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிக்க இந்த பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது, இது சாமானியர்களுக்கான பட்ஜெட் வழங்கிய நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள்,” என மோடி தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில், அது பற்றிய தமது கருத்தை சமூக வலைதளம் மூலம் #JanJanKaBudget என்ற தலைப்பில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். அதில், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் முனைவோருக்கு உதவும் எனவும், நடுத்தர மக்களுக்கு வருமான வரிச் சுமை பெரிதும் குறையும் எனவும், வரி குறைப்பின் மூலம் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும், அனைத்துத் துறைகளுக்கும் சலுகைகளை அளிக்கும் பட்ஜெட் இது என்றார்.
வேளாண்மை, உள்கட்டமைப்பு, ஜவுளி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கிய அம்சங்களாகும். வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக, இந்த நான்கு துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
இந்த பட்ஜெட் வருமானத்தையும் முதலீட்டையும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன், இது தேவை மற்றும் நுகர்வை அதிகரிக்கும். இது நிதி அமைப்பு மற்றும் கடன் வழங்குதலில், புதிய உந்துதலை கொண்டுவரும்.
இந்த பட்ஜெட் நாட்டின் தற்போதைய தேவைகளையும் இந்த தசாப்தத்தின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். தொழில்நுட்ப டெக்ஸ்டைலகளுக்கான புதிய கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஃபைபர்களை உற்பத்தி செய்வதற்கு அதன் மூலப்பொருளின் வரி அமைப்பு சீர்திருத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த கோரிக்கை நீடித்து வந்தது. இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.