வைஃபை, டாய்லெட், மெத்தை வசதிகளுடன் மோடி தியானம் செய்த கேதார் குகை!
போன், சாப்பாடு, உதவியாளர் என சகல வசதிகளுடன் இருக்கும் இந்த குகை ரூமில் நீங்களும் சுற்றுலா சென்று தங்கலாம். ஆனா முன்னாடியே புக்கிங் செய்யணும். ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை அன்று உத்தரகாண்டில் உள்ள ஹிமாலயன் கோவிலுக்கு சென்று பிறார்த்தனைகளைச் செய்தார். சாம்பல் நிற பாரம்பரிய பஹாடி உடை அணிந்து அதன் மேல் காவிநிற ஷால் அணிந்து கோவிலை வலம்வரும் புகைப்படத்தையும் அதனைத் தொடர்ந்து அதன் அருகில் அமைந்துள்ள ஒரு குகையில் பிரதமர் தியானம் செய்யும் புகைப்படமும் வைரல் ஆனது.
இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் இந்த இடம், குகை எங்கு இருக்கிறது எனத் கூகுளில் தேடத்தொடங்கினர். பிரதமர் தியானம் செய்யும் குகையில் துணிகளை மாட்ட ஹாங்கர், வசதியான மெத்தைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி குகைக்குள் இது எல்லாம் எப்படி வந்தது என நெட்டிசன்கள் கேள்வியும் எழுப்பினர். எல்லா சந்தேகங்களுக்கும் ஒரே பதில் அது ஒரு சுற்றாலாத் தளம் என்பது தான்.
என்ன குழப்பமாக உள்ளதா? அது கேதார்னாத் ருத்ர தியான குகை. கேதார் யாத்திரைக்கு வரும் மக்கள் தங்கி தியானம் செய்ய உத்தராகண்ட் அரசு உருவாக்கிய குகை தான் அது.
12 ஆயிரம் அடியில் அமைக்கப்பட்டுள்ள இக்குகையை 8.5 லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஆண்டே அம்மாநில அரசு அமைத்துள்ளது, இக்குகையை பராமரித்து நிர்வகிக்கும் கர்வால் மந்தல் விகாஸ் நிகம் (GMVN) இதை ’நவீன தியான குகை’ என அழைக்கிறார்கள்.
கேதார்நாத் மற்றும் பைரவநாத் கோயில்களுக்கு எதிரே அமைந்துள்ள இக்குகையில் நாம் விடுதியில் தங்கினால் என்னென்ன வசதிகள் கிடைக்குமோ அது அனைத்துமே இங்கும் கிடைக்கும். அதாவது,
“வைஃபை சேவை, மின்வசதி, போனை சார்ஜ் செய்யும் வசதி, மெத்தை, டாய்லெட், காலை உணவு, டீ, மதிய உணவு, மாலை டீ மற்றும் இரவு உணவு. மேலும் அவசரத்தின் போது அங்கிருந்து போன் செய்யும் வசதியும் உள்ளது.”
ஆனால் இங்கு தங்குவதற்கு சில விதிகள் உள்ளது, போனவுடன் இங்கு தங்க முடியாது, இக்குகையில் தங்க வேண்டும் என்றால் நிச்சயம் குறைந்தது 3 நாட்களுக்கு முன் புக்கிங் செய்ய வேண்டும். மேலும் உடலை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குப்த்காஷியில் ஒரு பரிசோதனையும், கேதர்நாத்தில் இரண்டாவது பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.
உடலளவிலும் மனதளவிலும் சீராக இருந்தால் மட்டுமே இங்கு தங்க அனுமதி வழங்கப்படும். அடுத்து இருவர் ஒரு அறையில் தங்க முடியாது ஒருவர் மட்டுமே தங்குவதற்கான வசதிகள் இக்குகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குகையில் தங்க நாளொன்றுக்கு ரூ.990 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இப்பொழுது உள்ள குகையுடன் சேர்த்து இன்னும் 3 குகைகள் கட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். மோடி வெளியிட்டுள்ள தியான குகை படங்களை பார்த்து பலரும் அங்கு சென்றுவர புக்கிங் செய்ய ஆவலாக உள்ளனர்.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்